பூமி - சிறுகதை

பூமி


நண்பர்களே!!இது என் முதல் சிறுகதை!!!படித்துப்பார்த்து குறைகள் இருப்பின் கூறவும்.நிறைவாக இருப்பின் எனக்கு மேலும் எழுத உற்சாகப்படுத்தவும்.


            இன்று என் வாழ்வின் மிகமுக்கியமான நாள். எனக்கு மட்டுமல்ல, எங்கள் உலகத்தின் கோடிக்கணக்கானவர்களுக்கும் மிக முக்கியமான நாள். காரணம்  , போர். கண் விழித்ததும் எழுந்து மிக வேகமாக ஆயுத்தமாகி கிளம்பினேன். என் வாகனம் எனக்காக காத்திருந்தது.  அதில் ஏறியதும் நான் சொல்வதை அப்படியே கேட்கும் என் வாகனம் கமாண்ட் ஆபஸிற்கு செல் என்றதும் என்னைப் படுக்கவைத்து , படுவேகத்தில் சென்று கொண்டிருந்தது.
      

               சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்களைத்தேடி ஒரு வினோதமான சிக்னல் வந்தது.அந்த சிக்னல் தான் இந்த போரையும் கொண்டுவந்தது.ஆம்.நீங்கள் நினைப்பது சரிதான்.அது ஒரு வேற்று கிரகத்தில் இருந்து ஒருவகையான உயிரினிங்களால் அனுப்பப்பட்ட சிக்னல்.அதை அறிந்ததும் அது எங்கிருந்து வந்தது என்பதை எங்கள் விஞ்ஞானிகள் குழு மிகத்தீவிரமாக ஆராய்ந்து அந்த கிரகத்தினை கண்டறிந்தனர்.அந்த கிரக வாசிகளை தொடர்பு கொள்ள முயன்றனர்.ஆனால் முடியவில்லை.பின் ஒரு பிரம்மாண்ட  விண்கலத்தின் வழியே என் தந்தை மற்றும் சிலர் அந்த கிரகத்தினை தேடி சென்றனர்.



       எனக்கு திரும்பி வருவேனா?என்ற நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்த போரில் எது வேண்டுமானாலும் ஆகலாம்.இதை அறியாத என் மகள் நான் எங்கோ  சுற்றுலா செல்கிறேன் என்றெண்ணி சில பொருட்களை வாங்கி வரச்சொன்னாள். அவள் கூறிய பொருட்கள் மிகவும் வேடிக்கையானது. அவள் வயதுக்கே உரியது. அவளுக்கு நீர் வேண்டுமாம்.அது எங்கள் உலகில் இருந்து அழிந்து விட்டது. நான்கூட என் வாழ்க்கையில் நீரை பார்த்ததில்லை. நீர் என்பது ஒருவகையான திரவமாம். அதிலிருந்து தான் நாமெல்லாம் தோன்றினோம் என்று என் தந்தை எனக்கு சிறுவயதில் கூறிய ஞாபகம். திடிரென்று என் அடிவயிற்றில் வலிக்க ஆரம்பித்தது.அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது,வலியைக்கொல்லும் மாத்திரையை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். என்னுடைய வாகனத்திலும் அந்த மாத்திரை இல்லை.அப்படியே அமர்ந்து வெளியுலகத்தைப்பார்த்தேன். எங்கள் உலகம் அழிந்து கொண்டே இருக்கிறது.ஆம் முதலில் நீரை எங்கள் முன்னோர் காக்கத்தவறினர். இப்போது , காற்றும் மாசுபட்டுக்கொண்டே வருகிறது .



        எனது தந்தையுடன் பயணித்த குழு அந்த கிரகத்தினை கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பயணம் செய்து கண்டறிந்தனர்.அந்த கிரகத்திலிருந்தவர்கள் மிக குள்ளமாக,உடல் வலுவின்றி இருந்தனராம்.அவர்கள் அந்த கிரகத்தில் வேடிக்கையாகவும் பல கோமாளித்தனங்களையும் செய்வதாக என் தந்தை எங்களுக்கு தகவல் அனுப்பினார்.மேலும் அவர்களுக்கு என்று எந்த நோக்கமும் இல்லாமல் இருந்தனராம்.அவர்களின் போர்க்கருவிகள் மிகவும் பழமையானதாகவும் கிட்டத்தட்ட எங்களைவிட 1000 ஆண்டுகள் பின்னோக்கியும் காணப்பட்டார்களாம்.அவர்களின் வான்வெளியிலிருந்து அவர்களைத்தொடர்பு கொள்ள முயன்றபோது திடிரென அவர்கள் எம் தந்தை இருந்த விமானத்தை முன்னறிவிப்பின்றி தாக்கி அழித்தார்கள்.


என் வாகனம் போர்ப்பயிற்சிமையத்தை அடைந்தது.அந்த ராட்சஸ கட்டிடத்துள் சென்றதும் என்னுடைய கண்விழியையும்,குரலையும் வாடகைக்கு எடுத்து உள்ளே அனுப்பியது பாதுகாப்பு கருவி.உள்ளே சென்றதும் என் கால்களுக்கு ஓய்வு கொடுத்து ஒரு மின்தூக்கி என்னை தூக்கிக்கொண்டு என் அறைக்குக்கூட்டிச்சென்றது.என் அறையினுள் என்னுடன் பயணம் செய்து என் உலகத்தைக்காக்க போகும் வீரர்கள் எனக்காக காத்திருந்தனர்.குடும்பத்தை பிரிந்துவிட்டு வரும் கவலை அவர்கள் கண்ணில் தெரிந்தாலும்,நம் உலகைக்காக்க செல்கின்றோம் எனும் வெறி அவர்களுல் இருந்ததை என்னால் அறிய முடிந்தது.


என் தந்தை எங்களுக்கு அனுப்பிய செய்திபயிலிருந்து அந்த கிரகத்தில் இருந்தவர்கள் தாங்கள் வாழ வேறொரு கிரகத்தை தேடிக்கொண்டிருப்பதை எங்களால் அறிய முடிந்தது.அதே சமயம் எங்கள் உலகத்தில் அவர்களால் வாழவும் முடியும்.எனவே அவர்கள் எங்களைத்தேடி வருவதற்குள் நாங்கள் அவர்களைத்தேடி சென்றாக வேண்டும்


என்னுடைய குழுவை அழைத்துக்கொண்டு விமான மைதானத்திற்கு சென்றேன்.கிட்டத்தட்ட அந்த மைதானத்தில் எங்கள் குழுக்களைப்போல ஆயிரமாயிரம் குழுக்கள் எங்கள் உலகைக்காக்க சென்று ஒவ்வொரு விண்வெளி ஓடத்திலும் சென்று ஏறிக்கொண்டிருந்தார்கள்.எல்லோர் முகத்திலும் வெறி படவியிருந்தது.நான் எங்களின் ராட்சத விமானத்தை சென்று அடைந்ததும் அதன் ஓட்டுநர் எங்களை அமரச்சொல்லி ஓடத்தை எடுத்தார்.பேரிரைச்சலுடன் அது மெதுவாக மேல்நோக்கி சென்றது.சிறிது தூரத்திற்கு அதன் முழுவேகத்தையும் உயர்த்தி அதனிடம் இருந்து இரக்கமின்றி அந்த ஓட்டுநர் வேலைவாங்கினார்.


எங்களின் விஞ்ஞானிக்குழுக்கள் எப்போதும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுக்கு இந்த போரைப்பற்றிய செய்தி கிடைத்ததும் மிக விரைவாக செல்லக்கூடிய விண்வெளி ஓடத்தினை தயார் செய்தனர்.என் தந்தை சென்ற ஓடத்தின் வேகத்தைவிட 500 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய விமானத்தை உருவாக்கினர்.அந்த விமானமே இப்போது இந்த பிரபஞ்சத்தின் அழகை எங்களுக்கு அதன் வழியே காட்டிச்செல்கிறது.

மீண்டும் அந்த வயிற்றுவலி வந்தது.நான் என் இருக்கையில் இருந்து எழுந்து அந்த மாத்திரை வைத்திருக்கும் அறையை அடைந்து ஒரு மாத்திரையை விழுங்கினேன்.சிறிது நேரத்தில் வலி போனது.இனி நாளைதான் வலிக்கும்.நான் ஓட்டுநர் அறைக்குச்சென்று அவரிடம் கேட்டேன்.இன்னும் எவ்வளவு நேரம் அந்த கிரகத்தை அடைய என வினவினேன்.இன்னும் ஒருமணிநேரம் என்றார்.நான் அமைதியாக அவரிடத்துள் அமர்ந்து கொண்டிருந்தேன்.

எனக்கு என் குடும்பம் கண்ணில் வந்தது.என் மனைவி,மிகுந்த தைரியம் உடையவள்.என்னை வெற்றிபெற்று வருமாறு ஆனையிட்டவள்.நாம் இல்லையென்றாலும் அவள் எங்கள் மகளைப்பார்த்துக்கொள்வாள்.இந்த குள்ளர்கள் எதற்காக என் தந்தையைக்கொன்றனர்?அவர்களிடம் நட்புறவு நாடிச்சென்றது தவறா?காட்டுமிராண்டிகள் என பலவாறு எண்ணுக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநர் என்னை அழைத்தான்.நாம் அந்த கிரகத்தை நெருங்கிவிட்டதாக கூறினான்.உடனே என் குழுவை அழைத்து பலவகை ஆலோசனைகளைக்கூறினேன்.அந்த வான்வெளியில் எங்கள் உலகைச்சார்ந்த ஓடங்கள்,ஆயிரத்திற்கும் மேல் காத்துக்கொண்டிருந்தனர்.எங்கள் தலைமை போர் அதிகாரியின் உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தோம்.உத்தரவு வந்தது.அந்த கிரகத்தை நோக்கி முன்னேறினோம்.அப்போது தான் என் குழுவைச்சார்ந்த ஒரு சிறிய வயதுடைய வீரன் ஒரு சிறிய சந்தேகம் என்றான்.அதற்கு விடையை நான் கூறினேன்


‘நாம் தாக்கப்போகும் கிரகத்தின் பெயர் பூமி.இங்குள்ள குள்ளர்களின் பெயர் ஹோமோசெப்பியன்ஸ் என தன்னைத்தானே அழைக்கும் மனிதர்கள்’     




Comments

  1. வாழ்த்துக்கள்... இப்போது தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்.. இன்னும் ஒரு 4,5 கதைகள் எழுதினால் உங்களுக்கு கதை எழுதும் கலை மிக அழகாக வந்துவிடும்.. ஆரம்ப நிலையில் இருக்கும் உங்களுக்கு இந்தக் கதையே நல்ல விசயம் தான்.. சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளுக்கு லாஜிக் ரொம்ப முக்கியம்.. எழுதும் முன் சில அறிவியல் விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.. உதாரணமாக இந்தக்கதையில் வரும் நாயகன் அவர்கள் கிரகத்தில் காற்று இல்லை என்கிறான்.. ஒரு இடத்தில் //பேரிரைச்சலுடன் அது மெதுவாக மேல்நோக்கி சென்றது.// என்கிறீர்கள்.. காற்று இல்லை என்றால் ஒலியை நம்மால் கேட்க முடியாது.. இது போன்ற விசயங்களிலும் கவனம் செலுத்துங்கள்.. வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் கதை எழுதும் தேடல்.. :-)

    ReplyDelete
  2. என் வேண்டுகோளை ஏற்று என் சிறுகதையை முழுக்கப்படித்து அதனுள் உள்ள சிறு தவறுகளையும் சுட்டிக்காட்டி என்னை வாழ்த்தியமைக்கு,நன்றி எவ்வாறு சொல்வதென்று தெரியாமல் பழம்பெரும் வார்த்தையாம் நன்றியை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அண்ணா!!!
    மேலும் இதுபோன்ற சிறுசிறு தவறுகளை வருங்காலத்தில் திருத்திக்கொள்ள முயல்கிறேன் அண்ணா!

    அத்துடன் தங்களின் ஆதரவும் அன்பும் எனக்கு தொடர்ந்து கிடைக்க தங்களை பணிவுடன் வேண்டுகிறேன் அண்ணா!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE DEPARTED – ஒரு பார்வை

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை