காப்பி கூச்சலில் புலம்பும் இணையம்



இந்த FACEBOOK பக்கம் வந்தாலே, இப்போலாம் காப்பி கூச்சல், டீ ட்ரெண்ட், செம ஸ்டண்டுனு ஒரே அட்டூழியம் பன்றாய்ங்க, இந்த இணைய போராளிங்க!!

சரி, அப்படி என்னதான் காபி அடிச்சிருக்காய்ங்கனு பாத்தா, ஒரு சீன்ல ஹீரோ கக்கூஸ் போற மாதிரி நின்னுட்டுருக்கார்ல, அந்த காட்சி ஒரு கொரியன்லருந்து சுட்டது, அவர் நடக்கற காட்சி ஈரான்லருந்து சுட்டது, அவரு போட்டுருக்க கண்ணாடி அமெரிக்காவுலருந்து சுட்டது, ஷூ , ஜப்பான்லருந்து சுட்டதுனு என்னமோ வடை சுட்ட கணக்கா சொல்றாய்ங்க.

ஒரு படத்த, அப்பட்டமா வெறும் காஸ்ட்யூம் சேஞ்ச் பண்ணி , கேமரா ஆங்கில் மாத்தி வச்சு எடுத்தா தானே அது காப்பி, நாலைஞ்சு படங்கள்ல வர்ற சீன்லாம் ஒன்னா சேர்த்தா அது பேரு இன்ஸ்பிரேசன்தானயா-னு கேட்டா, யோவ் ஒரு வட சுட்டாலும் ஒன்னுதான் , பல வட சுட்டாலும் ஒன்னுதான் அப்படிங்றாய்ங்க.

என்னைப்பொறுத்த வரை, ஒவ்வொரு துறையிலும் , ஏற்கனவே இருக்கும் ஒன்றைத்தான் மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமெனில் காதல் என்பது ஒன்று தான். அதை அனைவரும் உணர்ந்ததே. பணக்காரன் ஆயினும் ஏழை ஆயினும் அவன் மனதில் தோன்றும் காதல் என்பது ஹீரோயினை தன் நெஞ்சில் சாய்த்து கொள்ளுதல், அவள் கையை பிடித்து ப்ரெஞ்ச் ஸ்டைல் ரோலிங்கில் இழுத்து தன்னுடன் அணைத்து கொள்ளுதல், அப்புறம் குனிந்த தலையுடன் இருக்கும் அவளின் பவுட்டை பிடித்து நிமிர்த்தி கேவலமாக நம் தலையை ஆட்டுதல் போன்ற காட்சிகள் தான் வரும்.

நீங்கள் எந்த காதல் பாடல்களை எடுத்துக்கொண்டாலும் , மேற்கண்ட காட்சி வராத தமிழ் காதல் பாடல்களே இல்லை எனலாம். அதற்காக அது அப்படமான காப்பி என்று கூச்சலிடுவது என்ன பயன்? மேற்கண்ட காட்சிகளை , ஒவ்வொரு இயக்குனரும் தத்தம் பாணியில் , கேமராமேன்களை கொண்டு ஷாட்களையும் , காஷ்ட்யூமரை கொண்டு காஷ்ட்யூம் மற்றும் லொகேசன்களை மட்டும் மாற்றி எடுக்கிறார்கள்.

அடுத்து ஆங்கிலப்படங்களை எடுத்து கொள்ளலாம். எனக்கு தெரிந்து இப்போது வரும் சூப்பர் ஹீரோ படங்களில் ஹீரோ மட்டும் தான் காஷ்ட்யும் மாற்றத்துடன் வருகிறார்கள் . ஆனால் , அவர்களுக்கான வில்லன்கள் அனைவரும் ஏறத்தாழ ஒரே சக்தி மற்றும் ஒரே நோக்கத்துடன்தான் இருக்கிறார்கள். வில்லன்களின் நோக்கம், அமெரிக்காவோ , உலகமோ அழிய வேண்டும். அதற்கு முதற்கட்டமாக புல்டோசர் இல்லாமல் அனைத்து கட்டிடங்களையும் கிராபிக்ஸூடன் இடித்து, அப்பளம் போல் நொறுக்க வேண்டும்



IRON MAN படத்தில் வில்லனாக வரும் டகரடப்பா தான் கடைசியாக வந்த X-MEN படத்திலும் வில்லன். THOR முதல் பாகத்திலும் அதே டப்பா தான் கடைசியில் வரும் . IRON MAN படத்தில் ஸ்லோவாக இயங்கிய அந்த டப்பா, X-MENல் படுவேகமாக இயங்கும். அப்படியானால் இதன் பெயரும் காப்பி தானா?



THE LEAGUE OF EXTRO ORDINARY GENTLEMAN என்ற ஒரு ஆங்கிலப்படம் ஒன்று 2003ல் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் கதை என்னவென்றால் 6 விதமான மனிதர்கள், ஒவ்வொருத்தர்க்கும் ஒவ்வொருவிதமான சக்திகள் , ஆறுபேரும் ஒன்றினைந்து உலகத்தை அழிக்க நினைக்கும் அழிக்க ஒரு கப்பலில் செல்வார்கள். இதே பருப்பை மெருகேற்றி , மசால் வடையாக AVENGERS எனும் திரைக்காவியமாக மாற்றி , வசூலை அள்ளிவிட்டார்கள். இதன் பெயரும் காப்பி தானா?

TOTAL RECALL என்று 2012ல் வந்த படத்தின் கதை இது தான். ஹீரோ அரசாங்கத்தால், தீவிரவாதிகளிடம் உளவு பார்க்கணுப்பி வைக்கப்படுகிறார். அங்கிருக்கும்போது தான் தெரிகிறது, தீவிரவாதிகள் நல்லவர்கள் என்றும், அரசாங்கம் செய்வது தவறு என்றும். அதை கண்டுபிடித்தபின் அரசாங்கத்தை அழிக்க அவர் முயற்சி எடுத்து கடைசியில் வெற்றி பெறுகிறார். இந்த தோசையானது, 2009-ல் வெளிவந்த அவதார் எனும் இட்லி மாவில் இருந்து சுடப்பட்டது தான் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்?(இன்னும் அவதார் எனும் இட்லி மாவு , எந்த நாட்டு அரிசியில் ஆட்டப்பட்டது எனக்கூட கண்டுபிடிக்கலாம்).

இவ்வளவு ஏன்? இன்று திரைக்கதை ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லும் படங்களில் ஒன்றான மெமென்டோ வின் கதை என்ன? தன் மனைவியை கெடுத்து கொன்றவனை பழிவாங்க அலையும் ஹீரோ(ஒன்லைன்னா இப்படிதான் வரும்),அவனுக்கு ஒரு நோய் என்ற கான்செப்ட் ஒன்லைனை மெருகூட்ட பயன்பட்டது என்றால் திரைக்கதை  அதை பன்மடங்கு அழகாக்கி விட்டது. இப்படத்தின் கதையை ,நம் தமிழில் நான் சிகப்பு மனிதன்(சூப்பர் ஸ்டார் நடிச்ச) படத்தின் கதையோடு ஒப்பிடலாம் அல்லவா?

இப்போது வரும் படங்களின் கதைகளை எல்லாம் அழகாக நம் பழங்காலத்து தமிழ் சினிமாவுடன் இணைத்து கூட பார்க்கலாம். திரைக்கதை எனும் மாபெரும் சக்தியின் காரணமாக அனைத்து ‘சுட்ட வடை’களும் சிக்கன் பிரியாணிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை. திரைப்படத்தை பொறுத்தவரை ஒன்லைன் என்பது இப்படித்தான் இருக்கும்.

காதல் படங்கள் எனில் , நகைச்சுவையுடன் இனிய முடிவு , ஆக்சன் தூக்கலான இனிய முடிவு, எதார்த்தமான இனிய முடிவு, எதார்த்தமான கடின முடிவு , ஆக்சனுடன் கூடிய கடின முடிவு . இதைத்தாண்டி கண்டிப்பாக காதல் படங்கள் செல்லாது. இது தமிழுக்கு மாத்திரம் இல்லை, அனைத்து மொழி படங்களுக்கும் தான்.

இதே போல் ஒவ்வொரு வகையறா படங்களையும் எளிதாக அனலைஸ் செய்யலாம். படத்தின் போக்கை மாற்றும் சக்தி, திரைக்கதையில் தான் உள்ளது.

பல புத்தகங்களை படித்து, அதில் வரும் ஒவ்வொரு பேராவையும் ஒன்றினைத்து ,கடினப்பட்டு ஒரு புத்தகம் எழுதுவதற்கு பதில் நாமாக ஒரு புத்தகம் எளிமையாக எழுதி விடலாம் என்பதே உண்மை .அக்கடினமான வேலையை செய்யவும் ஒரு மூளை வேண்டும். அப்படத்தின் காப்பி, இப்படத்தின் காப்பி என்று குமுறுவதற்கு பதில், அந்த காப்பி அடித்த சீன்களை , சரிவிகிதமாக,நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்ததற்கு பாராட்டலாம்.அதன் பெயர் இன்ஸ்பிரேசன் தான்.காப்பி கிடையாது.



அடுத்து காப்பி என்பதற்கு வரலாம். போக்கிரி , ஜெயம் , M.குமரன் ,தில்லாலங்கடி என்ற படங்களை எடுத்தால், இதெல்லாம் ஒரு காட்சி கூட மாற்றமில்லாமல், ஏன் காஷ்ட்யூம் கூட மாற்றமால் அப்படியே எடுத்திருப்பார்கள். ஆனால், இத்திரைப்படங்கள் அனைத்தும் , மாபெரும் ஹிட்கள்(தில்லாலங்கடி தவிர) .இவை அனைத்தும் காப்பி என்று கண்மூடிக்கொண்டு சொல்லலாம்.




என்னதான் இருந்தாலும், இணைய போராளிகள் ஒருவேளை நம் தமிழ் டைரக்டர்களிடமிருந்து , உலக திரைப்படங்களை எதிர்பார்கிறார்கள் போல் உள்ளது. அப்படி எதிர்பார்த்தால், தியாகராஜன் குமாரராஜா போன்ற ஒரு டைரக்டரின் நிலைமை தான் படம் எடுப்பவர்களுக்கும் வரும். வெறும் விமர்சகர்கள் பாராட்டுவதால், தயாரிப்பாளர்களுக்கு பணம் வந்து விடாது. மேலும் மக்களை மகிழ்விக்க தான் இவை அனைத்தும். உண்மையான சினிமா, உலக சினிமா என்றெல்லாம் பிதற்றுவது அபத்தமானது.ஈரானிய படங்கள், கொரிய படங்கள் எல்லாம் அவர்கள் நாட்டில் இருக்கும் கொடூரங்களை படம்பிடித்து காட்டுவதால் , அங்கு போனியாகின்றது. இங்கு நடக்கும் அவலங்களை படம் பிடித்து காட்ட ஆரம்பித்தால், முதலில் மக்களை சாடிவிட்டு தான் மற்றதை காட்டவேண்டும். அப்படி மக்களை காட்டினால் எவன் பார்ப்பான்? பார்க்க வருபவன் மேலே ‘நீ ஒரு மொன்னை’ என்றால், ‘போங்கடா நீங்களும் உங்க படமும்’ என்று காரி துப்பி விட்டு தான் செல்வார்கள்.அதைதாண்டி அரசியலுக்கு சென்றால் , படம் திருட்டு சீடியில் தான் ரிலிசாகும். சரி , தொழில் கொள்ளைகளை விளக்கி காட்டாலாம் என்றால், படம் தயாரிப்பவனே , தொழிலதிபார் தானே!!! சரி, சாதி, இன, மொழி, மதப்பிரச்சினைகளை காட்டலாம் என்றால், டைரக்டரும் தயாரிப்பாளாரும் அடுத்த படம் பண்ண உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

என் தாழ்மையான கருத்து இதுதான். என்னதான் பர்மா பஜாரில் 30 ரூக்குள் அனைத்து மொழி படங்களும் கிடைத்தாலும், ‘மங்கிஸ்கா கிங்கிஸ்கா, கிங்கிஸ்கா பாயாஸ்கா’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே வேற்று மொழியிலும் ‘ஹேய் ப்ளெடி பெக்கர்ஸ்,ஒன் ஸ்டெப் பேக் மேன்’ என்ற ஆங்கில வார்த்தையும் தாண்டி வேறெதுவும் தெரியாததாலும் ‘எங்கடா உங்க மந்திரி!! பதினாறை தாண்டும் பத்தினி’ போன்ற டப்பிங் படங்களை பார்த்து அலுத்து விட்டதாலும் , இம்மாதிரியான ஃப்ரெஷ் திரைப்படங்கள் தான் தேவைப்படுகின்றன. அதைக்கெடுக்கும் விதமாக கூச்சல் போடும் அனைவருக்கும் , சுறா, ஆழ்வார் , பாபா , மன்மதன் அம்பு போன்ற சி.டி களை அனுப்பி வைத்துவிடுவேன் என்றும் எச்சரிக்கிறேன்.

எது எப்படியாயினும் , விமர்சகர்கள் விரும்புவது இதைத்தான். படம் எடுத்த டைரக்டர் , எங்கள் இணைய போராளிகளை தாக்காத வரை அவர்கள் எடுத்த படம் ஆஹா, ஓஹோ!! தாக்கி விட்டால், உங்களுக்கு தர்ம அடி , சாரி சாரி காப்பி அடி தான். பார்த்து சூதுவாதாக நடந்து கொள்ளுங்கள் , டைரக்டர்களே!!!

Comments

  1. AVENGERS KUM LEAGUE OF EXTRAODRINARY GENTLEMEN KUM NEE ENTHA VAGAIYILA SAMNPANTHAM KANDUPIDHCAENDRATHA ANTHA AANDAVAN KODA SOLLA MUDYATHU...IRON MAN PART ONE LA ENDING LA VARATHU MECHANICAL ENTITY AANA THOR ENDING LA VARATHU GODS ODA SPIRITUAL FORCE ALA URUVANA WEAPON.. ONNU DC COMIC PADIKANUM ILLAI PADAMAVATHU OLLUNGA PAKKANUM KUTHUMATHIPA ELLAM ADICHU VIDATHINGA .. POTTU IRUKURA PADATHUKUM POTTU IRUKURA IMAGE KUMAE SAMPANTHAM ILLAI.. REVIEW ELLUTHRUATHUKU MUNANDI ORU VATTIYAVATHU PADATHA PARUNGA.....

    ReplyDelete
    Replies
    1. யப்பா அனானி!! நீங்க அவெஞ்சர் கதையையும், THE LEAGUE OF EXTRA ORDIANARY GENTLEMAN கதையையும் கொஞ்சம் சொல்லுங்களே!!!

      அடுத்து கடவுள் அனுப்புனாரு, மாடசாமி அனுப்புறான்னுலாம் சொல்லிட்டு இருக்காதிங்க, அப்படி பாத்தா, அந்த படத்துல சிவப்பு சட்டை போட்டு நடிச்சான், இந்த படத்துல மஞ்சள் சட்டை போட்டுருக்கான்னு சொன்னா, காபி ஆகாதா? என்னய்யா இது அநியாயமா இருக்கு, அந்த டப்பா பன்ற அதே சாகசத்த தான் மத்த 2 படங்கள்ல வர்ற டப்பாவும் பன்னும்!

      அதே மாதிரி, நா ஒன்னும் விக்கி பீடியாவ தமிழ்ல எழுதற மத்த ஆங்கில விமர்சன பதிவர்லாம் கிடையாதுங்க அனானி. படம் பாக்குறப்ப எனக்கு தோனுறத தான் சொல்லுவேன்!!!

      Delete
  2. போக்கிரி, எம்.குமரன் மாதிரிப் படங்களை கண்ணை மூடிக்கிட்டு காப்பின்னு சொல்லுவியா...? கண்ணைத் தொறந்துட்டுப் பாருலேய்.... அதுக்கெல்லாம் ரீமேக்குன்னு பேரு.

    சம்பந்தப்பட்ட புரொட்யூசர்கிட்ட ரைட்ஸ் வாங்கிப் பண்றது. உன் தத்துவப்படி பாத்தா... நாலஞ்சு படங்கள்லருந்து சுட்டு ஒரு அவியல் பண்ணிட்டா காப்பி இல்ல... இன்ஸ்பிரேஷன். நல்ல தத்துவம். நாலஞ்சு எழுத்தாளர்களோட கதையச் சுட்டு ஒரு கதைய எழுதிட்டா அது காப்பி இல்லாமப் போயிடுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய முடிவான தத்துவம் இதாங்ணா, காப்பியோ, இன்ஸ்பிரேசனோ, நமக்கு பிடிச்சிருந்தா சரி!!! அது காப்பி காப்பினு கூச்சல் போடுறதால, அந்த டைரக்டர் அடுத்த படத்த உலக தயாரிப்புக்கு மாத்தறதா அர்த்தம் இல்லை!! அவர் வழக்கப்படி, அவருக்கு என்ன வருமோ அதை தான் செய்வார்!! தமிழ்சினிமாவுல மட்டும் எல்லாரும் காப்பி காப்பினு குதிக்கிறாங்க, மத்த மொழி படங்கள்ல நடக்குற காப்பி அட்டெம்ப்ட் பத்தி ஏன் பேச மாட்டேன்றாங்க? தமிழ் சினிமாவ மெருகேத்துறதா நினைச்சுகிட்டு , இப்படி கூப்பாடு போடறதுல என்ன பயன்? சரி, அடுத்து , எல்லா எழுத்தாளர்களும் காதல்ங்ற விஷயத்த எழுதாம இருக்கமாட்டாங்க, ஆனா, அவங்க ரைட்டிங் சிச்சுவேஷன், ஸ்டைல் , கேரக்டர்ஸ்லாம் ஒவ்வொருத்தர எழுத்தாளர பொறுத்து அமையும்! அப்படி அவங்க எழுதற நாவல், கண்டிப்பா ஒவ்வொரு பேரவையும், உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் மத்த எழுத்தாளர்களோட காதல் நாவல் கூட கம்பேர் பண்ணா, கண்டிப்பா அதுக்குள்ள எதாச்சும் ஒற்றுமை இருக்கும். அது சொந்த திங்கிங்னாலும், அதே அலைவரிசை கொண்ட யாராவது ஒருத்தர், கிட்டத்தட்ட 70 % ஒரே மாதிரி எழுதறத்துக்கான வாய்ப்புகள் இருக்கு! அதுக்குனு, அத நீங்க காப்பினு சொல்லுவிங்களா?


      அடுத்து, 4,5 எழுத்தாளர்களோட கதைய சுடறதுனு சொன்னிங்களே ,ஒருவேளை அந்த எழுத்தாளர்கள் எழுதுன நாவல்களில் வரும் குறிப்பிட்ட காட்சி, மனதை வருடும்படி இருந்தால், அதே போல் எழுதலாம் என நினைச்சிகிட்டு எழுதும்போது அது இன்ஸ்பிரேசன் கணக்குல தான அண்ணா வரும்!!! எப்படி காப்பி ஆகும்?

      Delete
    2. இன்ஸ்பிரேஷன் என்கிற விஷயம் தவிர்க்க முடியாதது. அது தவறில்லை. எப்போது..? பின்னால் கேள்விகளை எதிர்கொள்ளும் போதோ, பத்திரிகைப் பேட்டிகளிலோ ‘இந்தப் படைப்பின் இன்ஸ்பிரேஷனால் இதை உருவாக்கினேன்’ என்று கிரெடிட் கொடுத்தால் அப்போது. அப்படி இல்லாமல் ‘இதை நாலு வருஷமா மனசுல போட்டு உருவேத்தினேன்... ரூம்போட்டு யோசிச்சேன்’ அப்படின்னுல்லாம் அலட்டும் போதுதான் காப்பியடிக்கறான்னு குத்த வேண்டி வருது.

      இன்னொரு விஷயம்... மத்த மொழிப் படங்கள்ல நடக்கற காப்பி அட்டெம்ப்ட் பத்தி அந்தந்த மொழில இருக்கற ஆளுங்க எழுதிட்டுத்தான் இருப்பாங்க. நீ படிக்கலைங்கறதால அங்கல்லாம் யாரும் இல்லாமப் போய்டுவாங்களா என்ன...? நம்ம தமிழ் ஆளுங்க தமிழ்ல நடக்கறதப் பத்திக் கூவினாப் பத்தாதா? (அதுக்கே நீ இவ்வளவு பொங்கறியேப்பா....)

      Delete
    3. பால கணேஷர்,

      செம போடு போடுறிங்க :-))

      உங்க நண்பருக்கு , காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் இன்னும் வித்தியாசமே தெரியலை, அதை விட ரி மேக் என்பது பற்றியும் புரியலை அவ்வ்.

      டோட்டல் ரிகால் என்ற படம் அர்னால்ட் நடிச்சு 90 களீல் வந்தது அதை தான் 2012 இல் மீண்டும் டோட்டல் ரிகால் என்ற பெயரிலேயே ரிமேக் செய்தார்கள், அது தெரியாம "அவதார்" கதை தான் டோட்டல் ரிகால்னு புதுசா கண்டுப்பிடிக்கிறார் அவ்வ்வ்!

      மேலும் ஹாலிஉட்டில் 90% படங்கள் முன்னரே வெளியான நாவல் அல்லது காமிக்சின் உரிமை வாங்கி எடுக்கப்படுவது தான்.

      லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன் என்பதும் புத்தகமா வந்தது(காமிக்ஸும் இருக்கு) அதே போல அவஞ்ஜர்ஸும் காமிக்ஸ் ஆக வந்தது, எனவே "எழுத்தாள அல்லது பப்ளிஷரிடம் உரிமை வாங்கி எடுக்கப்பட்டதை "காப்பி அடிச்சதா" சொல்ல முடியாது. காப்பிக்கதை என வழக்கு போடனும் என்றால் எழுத்தாளர் மேல தான் போடணும், அப்படி போடுவதாக இருந்தால் புத்தகமாக வந்த போதே போட்டிருக்க மாட்டாங்களா என்ன?

      நம்ம ஊரில் எழுத்தாளர் கிட்டேயும் அனுமதி வாங்க மாட்டாங்க , படத்தயாரிப்பாளர் கிட்டேயும் அனுமதி வாங்க மாட்டாங்க நேரா சுடுவாங்க அவ்வ்!

      Delete
  3. சிறந்த திறனாய்வுப் பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை