THE FOUNTAIN-2006 சினிமா விமர்சனம்






ஒரு சில வார்த்தைகள்



நம் தமிழ் இயக்குனர்களுக்கு , எட்டுப்போட்டாலும் சுட்டுப்போட்டாலும் வர்றாத ஜெனர் என்றால் , அது FANTASY வகையறா திரைப்படங்கள் தான்.கடைசியாக ரிலிசான மான் கராத்தே கூட இந்த வகையறா படம் என்றாலும், அது மான் கராத்தே போலில்லாமல் , நத்தை கராத்தே அளவுக்கு கூட இல்லாமல் சொத்தையாக இருந்தது.

தமிழில் FANTASY வகை படங்கள் என்றால், இப்போதைய நிலையில் இருரை சொல்லலாம். முதலாமாவர் செல்வராகவன். என்னைப்போலவே FANTASY வெறிபிடித்தவர்.ஆனால் இனி தமிழே வேண்டாம்னு தெலுங்கு மக்களை மகிழ்விக்க ப்ளைட் பிடித்துவிட்டதாக கேள்விபட்டேன். இரண்டாமாவர் சிம்புதேவன். இவரின் அறை எண் 305-ல் கடவுள் சுமாராக இருக்கும். 12B மற்றும் தேவுடு சேசின மனசுலு படங்களின் தாக்கத்தில் இவர் எடுத்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ,சரக்கடித்துவிட்டு எடுத்த வாந்தி போல ஆனது.


சரி, வேறு படங்கள் எதுவும் தமிழில் இருக்கிறதா என்று அண்ணன் கூகிளில் தேடினால், ஏதோ வேலாயுதம் என்ற FANTASY படம் இருப்பதாக தெரிவித்தது.எப்படி நாம அந்த படத்த மிஸ் பன்னோம்னு யோசிச்சிகிட்டே பாத்தப்ப தான் தெரிஞ்சது, அது இளைய தளபதியின் படம்னு. 'எங்க அண்ணன் வேலாயுதம் வந்துட்டாருடா'-னு வர்ற டயலாக்ல, அந்த பொண்ணுங்களுக்கு மட்டுமில்ல, கூகிலுக்கும் தளபதி , கடவுளா தெரிஞ்சிருப்பார் போல.அதுனாலயே FANTASY னு சொல்லிவிட்டார்கள்.

தமிழில் எனக்கு பிடித்த FANTASY படங்கள் என்றால் பட்டிணத்தில் பூதம், லிட்டில் ஜான் , நான் ஈ (தெலுங்கு படம்தான். வேற வழி).இரண்டாம் உலகம் கூட பிடிக்கும். ஆனால் அதில் என்னதான் திரைக்கதை சிறப்பாக இருந்தாலும், கதை எனும் இதயத்தில் விழுந்த ஓட்டையால் , ஹாஸ்பிடல் நோயாளி ஆகிவிட்டது.ஆயிரத்தில் ஒருவன் கூட பிடிக்கும்.


படத்தைப்பற்றிய சில செய்திகள்




டேரன் அர்னோவ்ஸ்கி (DAREN ARNOVSKY), இந்த ஆளப்பத்தி நேத்துவரைக்கும் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்த படத்த பாத்ததும் , உடனே விக்கிக்கு கிளம்ப வேண்டியதாயிச்சி.அப்புறம் தான்தெரிஞ்சது, ஒன்றரை மணிநேரம் மொக்கை போட்டு, கடைசி சீன்ல பிரம்மாதம்னு புகழ்ற படமான BLACK SWAN கூட இவரு டைரக்சன்தான். BLACK SWAAN மாதிரி ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் கொடுத்த இவரா, FANTASY எடுத்துருக்காருன்னு கொஞ்சம் ஆச்சரியமா தான் இருந்துச்சி.

இந்த படம் ஏதோ ஒரு காமிக் நாவலின்,திரை வெர்சன் என விக்கியில் போட்டிருந்தார்கள்.அது என்ன நாவல்ங்றதெல்லாம் தெரிஞ்சி நாம என்ன பண்ணப்போறோம்னு அத ஸ்கிப் பண்ணிட்டேன்.

IMDB ரேட்டிங்கில் 7.4 பெற்றுள்ளது, இத்திரைப்படம். ROTTEN TOMATO வில் கூட 7 மதிப்பெண் பெற்றுள்ளது.

NO COUNTRY FOR OLDMAN, மற்றும் ஸ்டான்லி குப்ரிக்-கின் படங்களைப்பார்த்தால் , கிளைமேக்ஸ் காட்சிகளை நம் யூகத்தில் விட்டுவிடுவார்கள்.MEMENTO படம், நம் யூகத்தில் விடுவதைக்காட்டிலும், நம்மையே ஹீரோவாக்கி அழகு பார்ப்பார் நோலன்.இம்மாதிரியான படங்கள் தான் பெரும்பாலும் உலக சினிமா எனப்புகழ படும். ஆனால், இம்மாதிரியான கடினமான வேலையெல்லாம் நம் மூளையால் செய்யமுடியாது என்ற எண்ணம்தான் எனக்கு வரும்.ஆனால்  விதியின் சதியால் பார்த்துவிட்டு இதன் முடிவென்ன என்று , அதைப்பற்றி விமர்சனம் எழுதியவர்களிடம் கெஞ்சுவேன்.நோலன் படங்களைத்தவிர்த்து , இவ்வகையான மற்ற படங்களின் முடிவுகளை மற்றவர்களை கேட்டுத்தான் தெரிந்து கொள்வேன்.

முடிவு தெரிந்த படம் அத்துடன் நம் மனதிலிருந்தோ, மூளையிலிருந்தோ முடிந்து விடும். ஆனால் , இம்மாதிரியான படங்கள், 'என்னதான்டா கிளைமேக்ஸ் 'என்று நம்மை ஒரு நாலு நாளைக்கு மண்டை காய விடும். கிட்டத்தட்ட அதுமாதிரியான படம் தான் இதுவும். நம் மனதிற்கு தோன்றும் கிளைமேக்ஸை வைத்து அழகு பார்த்து கொள்ளலாம்.

கதை


இதை மூன்று வகையாக பிரித்து சொல்லவேண்டும். முதலில், கடவுள் ஆதாம் மற்றும் ஏவாளிடம், இரு மரங்களை காட்டி எது வேண்டும் என கேட்பார்.ஒன்று அழிவில்லாத வாழ்க்கை. மற்றொன்று , புத்திசாலித்தனம். ஆதாம் மற்றும் ஏவாள் இருவரும் புத்திசாலித்தனமா வாழ்க்கை வேண்டி , புத்தியைக்கொடுக்கும் மரத்தின் பழத்தை சாப்பிடுவார்கள்.து பைபிளில் வந்த கதைங்க, இந்த படத்துல இல்லை.

கதை-1


கி.பி 1600 வாக்கில் , ஸ்பெயின் தேசம் ஒரு ஆபத்தை சந்திக்கிறது. அச்சமயத்தில் அந்நாட்டின் ராணி , ஒரு வீரனிடம்(காதலனிடம்) ஒரு செய்தி சொல்லி அனுப்புவாள்.அதாவது, அழிவில்லாத வாழ்க்கை வாழ , அந்த மரத்தை கண்டுபிடிக்கவேண்டும்.அதற்கு வழிகாட்டியாக இருப்பது , மாயன் எனப்படும் முன்திராவிட குடியினரின் , சில குறிப்புகள். அதைக்கொண்டு அந்த வீரன், வனத்தில் இருக்கும் மரத்தை தேடிச்செல்கிறான். செல்பவன், அம்மரத்தை பாதுகாக்கும் பழங்குடியினரிடம் மாட்டிக்கொள்கிறார்.

கதை-2


கி.பி 2000 வாக்கில் தாமஸ் என்ற டாக்டரும் , இசபெல் எனும் அவர் மனைவியும் வாழ்ந்து வருகிறார்கள். தாமஸ்க்கு இசபெல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் , இசபெலுக்கு  , BRAIN TUMOUR எனப்படும்  , மூளைக்கட்டி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளால். அவளை குணப்படுத்த , தாமஸ், ஏற்கனவே அந்நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு குரங்கினை வைத்து சோதனை செய்கிறார்.அச்சமயத்தில், ஒரு அதிசய மரத்தின் பட்டையினால், எடுக்கப்படும் மருந்தை கொண்டு அக்குரங்கின் உடல்நிலையில் முன்னேற்றத்தை கொண்டுவருகிறார். கிட்டத்தட்ட மருந்தை கண்டுபிடித்து முடிவடையும் தருவாயில் , இசபெல் இறக்கிறாள். அவள் இறக்கும் முன் எழுதிய ஒரு நாவலை அவனிடம் கொடுக்கிறாள். அதில் கடைசி அத்தியாயம் மட்டும் , தாமஸை எழுத சொல்லி , பின் சாகிறாள். அவளை எப்படியாவது உயிர்ப்பிக்க வேண்டும் என அம்மரத்தை தேடி செல்கின்றான்.


கதை-3



கிட்டத்தட்ட பார்ப்பதற்கு  மொட்டை சாமியார்  போலிருக்கும் ஒருவர் , ஒரு மரத்துடன் , நெபுலா என்றழைக்கப்படும் , உயிர்கள் உற்பத்தியாகும் இடத்தை நோக்கி வான்வெளியில் பயணிக்கிறார். அந்த மரத்திடம் அடிக்கடி , 'ஒன்னுமில்லை, நெருங்கிட்டோம்'னு சொல்லிகிட்டே வர்றாரு. மேலும் அவர்முன் திடிர் திடிரென ஒரு பெண் வந்து 'முடித்துவிடு' என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள். அவர் , நெபுலாவை சென்றடைகிறார்.


மேலே பார்த்த மூன்று கதைகளும், முடிவு இல்லாமல் பயணிக்கும். ஆனால், ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த மூன்று கதைகளிலும் ஹீரோ , நம்ம X-MEN புகழ் ஹூஜ் ஜாக்மேன். கிளைமேக்ஸ் காட்சியில் தான் , இம்மூன்று கதைகளுக்கும் ஒரே விடை கிடைக்கும். அது நமக்கு தோன்றும் எண்ணத்தை சுற்றி மாறும்.


திரைக்கதை - 



அற்புதமான கதை இப்படத்தில் உள்ளது என்றால், அதைவிட திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்த நான்-லீனியர் டைப்பில் பட்டாசு கிளப்பியுள்ளது.ஒரு கதையை மிக பிரம்மாண்டமாகவும் , அழகாகவும் , பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வகையிலும் மாற்றும் பொறுப்பு முழுக்க , திரைக்கதையைத்தான் சாரும்.

இதுவரை நான்-லீனியரில் , கிறிஸ்டோபர் நோலன் எனும் திரைக்கதை வித்தகரை அடித்துக்கொள்ள , ஆளே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். டோரன்டினோ அவர்களின் படம் கூட , நான்-லீனியர் வகையில் இருந்தாலும் அவரது படங்கள் காட்சிக்கு காட்சி நான்-லீனியர் ரகத்தில் வராமல் CHAPTER முறையில் வரும். ஆனால் அர்வனோஸ்கி , இப்படத்தில் நான்-லீனியரில் , நோலனுக்கு டஃப் காம்பிடேஷன் கொடுத்திருப்பார். படத்தின் முதல் காட்சி , முதல் கதையின் , கிளைமேக்ஸ் காட்சி வரும். அதன்பின் வரும் காட்சி, இரண்டாம் கதையையும் , மூன்றாவது காட்சி, மூன்றாவது கதையின் கிளைமேக்ஸ் காட்சியையும் முன்னிறுத்தும்.

ஒருசில இடங்களில் நம்மை குழப்பினாலும் , அதன் குழப்பங்களுக்கெல்லாம் கடைசியில் விடை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு காட்சியும், அடுத்தது என்ன என்ற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்தும் வகையில் , காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் திரைக்கதை எவ்வளவு பலம் எனில், இப்படத்தை , சும்மா ஒரு பத்து நிமிஷம் பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்க ஆரம்பித்த நேரம் ,அதிகாலை 3.30 மணி. ஆனால் , என்னையும் என் தூக்கத்தையும் தாண்டி , இப்படம் என்னை கட்டிப்போட்டது. முழுதும் பார்த்துவிட்டு தான் தூங்கினேன். இது போன்ற அனுபவம் , எனக்குள் INCEPTION படம் மாத்திரமே ஏற்படுத்தியது.


வசனம்


படத்திற்கு வசனம் என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. அக்கால கட்டங்களில் , வசனமில்லாத எவ்வளவோ படங்கள் , வசனத்தால் விவரிக்க முடியாதவற்றை நமக்கு விவரித்துள்ளன. ஆனால், அந்த காட்சிகளில் வசனம் வருமேயானால் , எப்படி இருக்க வேண்டும்? அம்மாதிரி பவர்புல்லான வசனங்களுடன் வந்த படங்கள் குறைவே. முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் வசன திறமையின் சான்று, எம்.ஜி.ஆர் நடித்த மந்திரிகுமாரி படத்தில் , முதல் பெயரே அவருடையதாக தான் இருக்கும்.அதுவும் முழு திரை அளவுக்கு. தமிழில் அம்மாதிரி பேர் சொல்லும் படங்கள் தற்போது குறைவு தான்.  தற்போது வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , சதுரங்க வேட்டை போன்ற படங்களில் , வசனம் தூள் கிளப்பும்.

இப்படத்தில் வசனம் , எப்படி உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்றால், வசனம் மட்டும் சரியான படி இல்லையெனில் , இப்படத்தின் டைரக்டருக்கு கூட , இப்படம் புரிந்திருக்காது. அவ்வளவு கச்சிதமான வசனங்கள். அவ்வளவு பவர்ஃபுல் வசனங்கள் இல்லை. இதில் படத்தை இணைக்கும் படியான வசனங்கள் இருக்கும்.

இப்பட வசனத்தின் சிறப்பு என்னவெனில் ,மூன்று கதைகளிலும் வரும் வசனங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கும். கடைசியில் ஒரே வசனத்திற்கு எத்தனை அர்த்தங்கள் என்பது நமக்கு புரியும்.


ஒளிப்பதிவு - Matthew Libatique




சிறப்பு மற்றும் அம்சமான ஒளிப்பதிவு. பல காட்சிகளில் இவரது கேமரா கோணம் , என்னை அதிசயிக்க  வைத்தது. கிராபிக்ஸ் காட்சிகளை கச்சிதமாக காட்ட , இவரது ஒளிப்பதிவு , பெரிதும் உதவியிருக்கிறது.

பீரியட் கதை வரும்போது ஒரு கலர் ,  நிகழ்காலத்திற்கு ஒரு கலர் , மற்றும் எதிர்காலத்திற்கு ஒரு கலர் டோன் என , காட்சிகளை  வெரைட்டிப்படுத்தி காட்டியுள்ளது, இவரது கேமரா .


இசை -Clint Mansell


உயிரோட்டமான இசை. அழகான காதல் எப்படி நமக்கு மென்புன்னகையை வரவைக்குமோ, அதே போல் புன்னகையை இசையாலும் உருவாக்க முடியும்.காதலியின் பிரிவின் போது நம் மனதுள் எப்படி மென்சோகம் கொள்ளுமோ, அதே சோகத்தையும் இசையால் , நம்முள் கொணர முடியும். இவ்விரண்டையும் இப்படத்தின் வழியே நிருபித்துள்ளார், இசையமைப்பாளர்.

(இரண்டாம் உலகம் படத்தில் , அனிரூத்-தின் ,பிண்ணனி இசை பெரிதும் பேசப்பட்டதற்கு காரணம் , இப்படத்தின் இசையமைப்பாளாரால் தான். முக்கால்வாசி இசையை , இவரின் இன்ஸ்பிரேசன் காரணமாக அனிருத் போட்டுருக்கலாம் என்பது என் கருத்து. )

எடிட்டிங்- Jay Rabinowitz


இந்த எடிட்டர்களுக்கு , தொல்லையான வேலையே நான்-லீனியர் படங்களை எடிட் செய்வது தான். ஒரு சீன் மாற்றி கத்தரித்து வேறு இடத்தில் ஒட்டி விட்டால், படம் கோவிந்தா தான். இப்படியொரு படத்தில், இவரின் சிறப்பான எடிட்டிங் மூலமாக தான் , நம்மால் முழுதும் அமர்ந்து பார்க்க முடிகிறது.

நடிப்பு   Hugh Jackman   Rachel Weisz




இந்த படத்தில் ஹூஜ் ஜாக்மேன் , நடிப்பில் பின்னி எடுத்திருக்கார். ஆனால், இப்படி நடிக்க தெரிந்த நடிகர் வெறும் கமர்சியல் வட்டத்திற்குள்ளே , ஏன் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்றுதான்  தெரியவில்லை. இவரை அப்படியே அலேக்காக தூக்கி மல்லாக்க போட்டு, நடிப்பில் முதலிடத்தை பிடித்திருப்பவர் , இசபெல்லாக வரும் ஹீரோயின் தான். அவ்வளவு அழகாக, தத்ரூபமாக நடித்திருப்பார். பார்க்கும்போது, இந்த பெண்ணே நமக்கு மனைவியாக வரக்கூடாத என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.

(இந்த படத்துல ஹீரோயின் , மத்த ஆளுங்க கூட பேசவே பேசாது. ஒன்லி புருஷன் மட்டும்தான்.என்ன ஆச்சரியம்னா, இப்படி ஒரு அடக்கமான புள்ளை வெளிநாட்டுல கூட இருக்கானு தான் கேட்க தோணுது.குறிப்பு :-ஆண்களுக்கு பெண்களிடம் பிடித்தது இதுவே. இதைச்சொன்னா, நம்மள ஆணாதிக்கவாதி-னு சொல்லி கிழிச்செடுக்கிறாங்க)


இயக்கம் 


எல்லாம் மேலேயே சொல்லியாச்சு. அதுனால , ஒரே வார்த்தைல சொல்லனும்ணா, கிழி கிழி கிழி தான்


மொத்தத்தில், FANTASY மற்றும் தரமான, வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புபவர்கள் , கண்டிப்பாக காணவேண்டிய படம்.கிராபிக்ஸ்லாம் அருமை. சிறிது பொறுமை தேவைப்படும். முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது. எனவே, படம் பிடிக்காமல் போனால் , அது உங்கள் ரசனையை பொறுத்தே அமையும் .இப்படத்தில் , காதல் காட்சிகள்-லாம் எடுத்திருக்கும் விதம் அருமை. குடும்பத்துடன் காணலாம். ஒரே ஒரு பிட்டு சீன் வரும். அதுகூட ஒன்னும் அவ்வளவு பெருசா தெரியாது. 


என்னுடைய ரேட்டிங்  - 8 / 10



(சின்னப்பதிவா தாங்க எழுதனும்னு நினைச்சேன். என்ன நினப்புல எழுதனணோ, அது இம்மாம்பெருசாகி உங்க கழுத்தருச்சிடிச்சி. இவ்வளவு நேரம் பொறுமையா படிச்ச, எல்லா தியாக சிகரங்களுக்கும் , பொறுமைத்தளபதி-னு பட்டம் இலவசமா பார்சல் பன்னிடுறேய்ங்க.)

Comments

  1. நான் நேற்று தான் இப்படத்தை பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஒரு ஆழமான காதல் கதை தான் இது.
    நீங்கள் குறிப்பிட்டது போல் மூன்று காலங்களில் நடக்கும் கதைகள் அல்ல இப்படம் கூற வருவது. இப்படம் மிகவும் எளிமையாக அழகாக எடுக்கப்பட்ட காதல் படமே இது.

    நான் இப்படத்தை இப்படி பார்க்கிறேன்:
    மூளையில் கட்டி ஏற்பட்டதினால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கும் மனைவி. அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் காதல் கணவன். கணவன் ஒரு ஆராய்ச்சி மருத்துவன். தன் மனைவியை எப்பாடு பட்டாவது ப்ரைன் டூமரிலிருந்து காப்பாற்றி விட வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல வகையான புதிய மருந்துகளையும் (தாவர மருந்துகளையும்) கொடுத்து ப்ரைன் டூமர் உள்ள ஒரு குரங்கிற்கிற்கு அறுவை சிகிச்சை செய்து பார்க்கிறான். அதில் வெற்றி பெற்றால் தன் மனைவியை காத்துவிடலாம் என்று துடிக்கிறான்.
    மனைவியோ தன் கணவன் தனக்காக, தன் உயிரை காக்க அல்லும் பகலும் ஆராய்ச்சியிலேயே இருப்பதை அறிந்து அவன் கஷ்டப்படுவதை கண்டு கலங்குகிறாள். அவள் கொஞ்சம் கொஞ்சமாக மரணிப்பதை பற்றி தத்துவார்த்தமாக யோசித்து ”மரணம்” என்பது வாழ்வின் இறுதியல்ல நிரந்தரத்தின் தொடக்கமே என்று முடிவெடுக்கிறாள். அதை தன் கணவனிடமும் தனக்கு மரணம் பற்றி பயமில்லை என்று கூறிக் கொண்டே இருக்கிறாள். கணவனோ மனைவியை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்தில் அவ்வாறு அவள் பேசுவதை கண்டு பதைத்து விலக்குகிறான்.
    மனைவி ஃபேண்டசியாக ஒரு நாவலை எழுதுகிறாள். அந்த கதையின் வாயிலாக கணவனிடம் புரிதல் ஏற்பட முயற்சிக்கிறாள். அதில் கடைசி அத்தியாயம் மட்டும் முடிக்கப் படாமலேயே உள்ளது. நாவல் இப்படி செல்கிறது முன்னொரு காலத்தில் ஸ்பெயினில் மதகுருவின் ஆதிக்கம் வலுக்கிறது எதிராக உள்ள அனைவரையும் அழிக்கிறான். இறுதியில் ராணியையே நெருங்கும் சூழலில் தளபதி அந்த மதகுருவையே ஒழித்து நாட்டை காக்க துணிகிறான். ராணி அவனை தடுத்து இதற்கு தீர்வு நிரந்தர வாழ்வே அதுவே நம்மை அழிக்காமல் காக்கும் அதற்கு கடவுளின் Tree of Life மரத்தை கண்டுபிடித்து அதன் சாற்றை உண்பதே என்கிறாள். தளபதி அது கதை என்று அதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறான். அதற்கு ராணி ஆதாம் ஏவாள் அறிவு மரத்தின் கனியையே புசித்தார்கள் வாழ்வு மரத்தின் சாறை அருந்தவில்லை ஆனாலும் அவர்களின் வழித்தோன்றல்கள் அம்மரம் உள்ள இடத்தை அறிந்தே வந்திருக்கிறார்கள். மாயன்களே அவர்களின் வழித்தோன்றல்கள் அம்மரம் மாயன்களின் அடர்காட்டுக்குள்ளேயே இன்னும் இருக்கிறது. அதை கண்டுபிடிக்க ஒரு மேப்பும் உள்ளது என்று கூறுகிறாள். பின் அதை நம்பி தளபதி சிறு படைகளுடன் மரத்தை தேடி செல்கிறான். அம்மரத்தை நெருங்கும் வேளையில் அதை காக்கும் மாயன்களால் சூழப்பட்டு அவனுடன் வந்தவர்கள் மரணிக்கிறார்கள். தளபதி மட்டும் அவ்வழியே முன்னேறி செல்லும் போது மாயன் தலைவனால் கத்தியால் குத்தப்படுகிறான். இத்துடன் நாவல் நிற்கிறது. கடைசி அத்தியாயத்தை டாக்டர் கணவனே முடிக்க சொல்லி வற்புறுத்துகிறாள்.
    நாவலை படிக்கும் டாக்டர் கொஞ்சம் கொஞ்சமாக தன் மனைவியின் நினைப்புச் சிக்கலிலிருந்து வெளிவருகிறார்.

    ReplyDelete
  2. இறப்பை நீக்கும் மருந்து கண்டுபிடிப்புக்கும் காதல் மனைவியின் நினைப்புக்கும் உள்ளே தன்னை முழுமையாக மூழ்கடித்து கொண்டிருக்கும் நாயகனை ஒரு குமிழிக்குள் அடைபட்டு தனி உலகில் மிதந்து கொண்டிருப்பது போல் காட்டுவது சிறந்த படிம உத்தி.
    மரணம் இயல்பானது என்றுணர்ந்து தானும் மட்கி மரமாவது போல் காட்டுவது இதுவே நிரந்தர வாழ்வு என்று கூறுவது போல் காட்டுவது நிதர்சனம்
    மனைவி இறந்தபின் திருமண மோதிரம் போட்டிருந்த விரலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொள்ள ஆரம்பிக்கிறான் நாயகன். அது தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தன் கை முழுக்க குத்தியிருப்பதாக காட்டுவது அருமை. அவ்வளவு காலமும் அவள் நினைப்பிலேயே இருக்கிறான் நாயகன். ஆம் நீ கூறிக்கொண்டிருந்தது உண்மைதான் இவ்வளவு காலமும் நீ என்னுடனேயே இருந்திருக்கிறாய் என்று தன் பச்சை குத்தப்பட்ட கைகளை தடவி நாயகன் ஓரிடத்தில் உணர்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. ப்பா!!! அண்ணே !!! ஒரு அற்புதமான திரை விமர்சனமே எழுதிட்டிங்கணே!!! எனக்கு இருந்த சில குழப்பங்கள கூட விளக்கிட்டிங்க!! நன்றிங்ணே!!! வருகைக்கும் கருத்துக்கும் !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை