பயணம் @ டைம்மெஷின் - 12


அரவு (எ) பாம்பு




முந்தைய பதிவுகள்







அந்த ஓடையின் அருகில் காவலுக்கிருந்த வீரர்கள் இருவரும் ஒருவரையொருவரின் முகத்தைப்பார்த்தனர் . அந்த சத்தம்  , கானகத்திலிருந்துதான் வந்தது . மெல்ல நெருங்க நெருங்க அது ஒரு குதிரையின் காலடிச்சத்தம் என்பதை உணர்ந்ததும் தங்களின் வேல்களை சத்தம் வந்த திசையை நோக்கி செலுத்த தயாராயிருந்தனர் . தூரத்தில் இருந்த அம்பெய்யும் வீரர்களும் தங்களின் வில்களைத்தயாராய் வைத்திருந்தனர் . அம்புகள் வில்லிலிருந்து பாயத் தயராய் இருந்த நேரத்தில் , அந்த வில்லெறியத்தயாராய் இருந்த வீரர்களின் வயிற்றைக்கிழித்துக்கொண்டு இருவேல்கள் ஒரேநேரத்தில் இறங்கின . இறங்கியவேல்களின் முனை தரையில் பதிந்துகொண்டிருக்க , கைப்படி நோக்கி இறந்தவீரர்களின் உடல் சாய்ந்துகொண்டிருந்தது . அவர்களின் பின்னால் இருந்து குதிரையில் வெளிப்பட்ட வளவன் , வேகமாக குதிரையை ஓட்டியபடியே அவர்களின் அம்புகளையும் வில்லையும் எடுத்தான் . அதேநேரத்தில் வனத்தில் இருந்து வெளிப்பட்ட குதிரை , சந்துருவையும் பாலாவையும் நோக்கி ஓடியது .



சந்துருவையும் பாலாவையும் தலைமைக்காவலர் அழைத்துச்சென்றபோது , தனக்காக உதவியவர்களை ஆபத்தில் சிக்கவிட்டுச்செல்வது அபத்தமான ஒன்று என்றெண்ணிய வளவன் , தன் கழுத்தில் வேலையும் நெஞ்சில் வாளையும் வைத்திருக்கும் வீரர்களிடமிருந்து தான் தப்பித்தால் மாத்திரமே அவர்களிருவரையும் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்தான் . அவர்கள் அழைத்துச்செல்லப்பட்ட  சில நிமிடங்கள் கழித்து  ,  தனக்கு தண்ணீர் தேவை என கூறினான் . ஒருவீரன் மிகக்கவனமாய் தண்ணீர் எடுத்துவர சென்றான் . அவன் தண்ணீர் கொண்டுவந்ததும் வாங்கி குடித்துமுடித்துவிட்டு அவன்கையில் சொம்பை மீண்டும் கொடுத்தான் . அவன் திரும்பச்செல்ல திரும்பும்போது படக்கென்று குனிந்த வளவன் , தனக்குப்பின்னால் வேல்களைப்பிடித்துக்கொண்டிருந்து இரு வீரர்களின் கால்களை தட்டிவிட்டான் . நிலை தடுமாறிய அவ்விரு வீரர்களும் முன்னால் நின்றுகொண்டிருந்த வீரர்களின் நெஞ்சில் வேலை பாய்ச்சினர் . வேல்குத்தப்பட்டவர்களின் கைகளிலிருந்த வாள்களை  கைப்பற்றிய வளவன் ,மிச்சமிருந்த வீரர்களின் நெஞ்சில் துளிதாமதமில்லால் வாள்களை இறக்கினான் . பின் மண்டபத்தின் வெளியே நின்றுகொண்டிருந்த வீரர்களின் குதிரைகளில் ஒன்றில் ஏறி மற்றொன்றை கையில் இழுத்துக்கொண்டு சிறைச்சாலையின் அருகில் இருக்கும் வனப்பகுதிக்குச்சென்றான் . சந்துருவையும் பாலாவையும் அழைத்துவரும் காட்சியைக்கண்டதும் , குதிரையின் காதில் ஏதோ சொல்லிவிட்டு , குதிரையைத்தட்டிவிட்டான் . அந்த ஆளில்லாத குதிரை , தன்மீது பயணிக்கவேண்டிய சந்துருவையும் பாலாவையும் நோக்கி மெல்ல ஓடிவந்தது . பின் ஓடையைத்தாண்டியது . அதற்குள் மிகவேகமாய் வனத்தின் வழி பயணித்து சிறைச்சாலையின் முன் வாயிலில் காவலுக்கு நின்ற இருவீரர்களையும் நொடிப்பொழுதில் தலையை சீவினான் . உள்ளே , அம்புகளை வைத்துக்கொண்டு நிற்கும் வீரர்களைக்கண்டதும் , வெளியில் இறந்த வீரர்களின் வேல்களை எடுத்து அவர்கள் மீது வீசினான் . வீசியவுடன் வேகவேகமாய் உள்ளே நுழைந்தான் .

சந்துருவும் பாலாவும் ஒன்றும் புரியாமல் ஓடையைத்தாண்டும் குதிரையைக்காணும் அந்நேரத்தில் , தனக்கு எதிரே நின்ற இரு வீரர்களும் இறந்துவிழுவதையும் , அதைத்தொடர்ந்து வளவன் உள்ளே நுழைவதையும் கவனித்தனர் . உள்ளே நுழைந்த வளவன் அம்புகளை துளியும் குறிதவறாமல் வீசவும் , உடனுக்குடனே தனக்கருகில் வரும் வீரர்களை வெட்டிச்சாய்ப்பதுமாய் இருந்தான் . இவர்கள் இருவரையும் பார்த்து அவன் ‘குதிரையில் ஏறிக்கொள்ளுங்கள் ’ என சத்தமிட்டதைக்கேட்டதுமே அவர்கள் குதிரையைத்தேடினர் . அதற்குள் அக்குதிரை அவர்கள் இருவரின் அருகிலும் வந்து நின்றது . எப்படியோ அடித்துபிடித்துக்குதிரையில் ஏறிய இருவரும் அறைகுறையாய் குதிரையை மிரட்ட , அதுவும் கதவு நோக்கி ஓடியது . அதற்குள் , சிறைக்குள்ளிருந்து சில வீரர்கள் வில் , அம்புடன் வெளிப்பட வளவன் அதிலிருந்து தப்பித்துவிட்டு , வேகவேகமாய் சந்துருவையும் பாலாவையும் தன்பின்னால் வருமாறு கூறிவிட்டு குதிரையை காட்டினுள் செலுத்தினான் . சந்துருவும் ஏற்கனவே ஓட்டிய குதிரைவண்டி அனுபவத்தில் அக்குதிரையை செலுத்திக்கொண்டிருந்தான் . வளவன் முன்னால் செல்ல , அவனைப்பின் தொடர்ந்தவாறே இவர்கள் இருவரும் ஒரே குதிரையில் சென்றனர் . அவர்களை சிறிதுதூரம் வரை துரத்திவந்த வீரர்களும் சிலநாழிகைக்குள் தங்களின் பின்தொடர்தலை விட்டு பின்வாங்கினர் .  சிறிதுநேரம் பயணித்த வளவன் ஓரிடத்தில் நிறுத்த , சந்துருவும் நிறுத்தினான் .

‘யாருக்கும் ஒன்றும் ஆகவில்லைதானே ?’

‘இல்ல வளவா . ஒன்னும் ஆகல . எங்கள காப்பத்தனதுக்கு தேங்க்ஸ் . ஊப்ஸ் சாரி , நன்றி .’ என்றான் சந்துரு .

‘பரவாயில்லை . பாலா அண்ணா ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறார் ?’

என்ற வளவனின் கூற்றைக்கேட்டுவிட்டு பின் திரும்பி பார்த்தான் சந்துரு . பாலா ஒருவாறாய் நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தான் .

‘டேய் பாலா ! என்னடா ஆச்சு ? டேய் கண்முழிச்சுப்பாருடா ’ என்ற சந்துருவுன் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலையில் பாலா இல்லை .  அவன் உடலெங்கும் நீலநிறம் பரவ ஆரம்பித்திருந்தது . அவன் முதுகை கிழித்துக்கொண்டு ஒரு அம்பு இருந்தது .

‘விடம் . அண்ணா , கிளம்புங்கள் . விரைவாய் அவருக்கு சிகிச்சையளிக்க வேண்டும் . தஞ்சைநோக்கி சென்றால் நாம் மாட்டிக்கொள்வோம் .அதனால் கருவூர்க்குச்செல்லலாம் .’

‘இல்ல வளவா .பாலாவ நீ ஏத்திக்கோ . எனக்கு அவ்வளவா குதிர ஓட்டத்தெரியாது . நீ முன்னாடி போய்கிட்டே இரு .நா பின்னாடி வரேன் .’ என்றான் சந்துரு . அவனின் குரலில் பதற்றத்துடன் நடுக்கமும் தெரிந்தது .எப்படியாவது பாலாவை காப்பாற்றியாகவேண்டும் . ஆனால் , எப்படி அவனுக்கு இந்நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று குழம்பினான் . ஒருவேளை அந்த அம்புகளில் விஷம் தடவியிருக்கலாமோ என்றெண்ணினான் . அடச்சே , இவனை முதலில் குதிரையில் அமரவைத்துவிட்டு பின் தான் அமர்ந்திருந்தால் இப்படி ஒரு இக்கட்டான நிலை எனக்கு வந்திருக்காதே என்றெண்ணி ஆறாத்துயருற்றான்  .

வளவன் தன்னுடைய குதிரையில் இருந்து இறங்கி , பாலாவை தூக்கி அமரவைத்துக்கொண்டு குதிரையைத்தட்டி விட்டான் . பின்னாள் சந்துரு முடிந்தவரை அவர்களைத்தொடர்து சென்றான் . பசி , வலி , அலுப்பு இதைக்காட்டிலும் பாலா பிழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே அவனுள் மிகுந்து காணப்பட்டது . டைம்மெஷினை சரிசெய்ய அவன் தேவையெனினும் , டைம்மெஷின் கூட வேண்டாம் , பாலா ஒருவனே போதும் என்ற நிலையில் தான் அவனிருந்தான் . காரணம் , அவனுடன் வாழும் ஒரே 21 –ம் நூற்றாண்டு உயிரினம் பாலா மாத்திரம் தான் . வளவனுக்கோ , தன்னைக்காப்பாற்ற உதவியவர்கள் தன்னால் இறக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளார்களே என்ற மனவருத்தத்திலே தன் குதிரையை மின்னல் வேகத்தில் காற்றைக்கிழித்துக்கொண்டு அந்த வனத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் . தன்னை தம்பி என்று முழுமனதுடன் அழைத்த இருவரில் ஒருவர் தன்னுயிரை மெல்ல மெல்ல இழந்துவருகிறார் என்பதை அவன் மூளூ அவனுக்குத்தெரிவித்துக்கொண்டிருந்தது . எவ்வாறாயினும் கருவூர் சென்றுவிட்டால் , பாலாவுக்குத்தேவையான சிகிச்சை செய்துவிடலாம் . இன்னும் ஒரு மணிநேரம் கிழக்குநோக்கி பயணித்தால் , கருவூரை அடைந்துவிடலாம் . அதானல் முடிந்தவரை வேகமாக தனது குதிரையை செலுத்தினான் .

இரண்டுமணிநேர பயணத்திற்குப்பின் , மூவரும் கருவூரை அடைந்தனர் .

‘அண்ணா ! விரைவாய் நீங்கள் சென்று மருத்துவசாலை எங்கிருக்கிறது என்று விசாரித்துவிட்டு வாருங்கள் .’ என்ற வளவனின் பேச்சிற்கேற்ப சந்துரு ஊருக்குள் சென்று விசாரிக்கலானான் .  அவனுடைய முயற்சியின் பேரில் , ஒரு பாட்டியின் வீட்டிற்கு மூவரும் சென்றனர் .  அவ்வீட்டை உற்றுக்காணும்போது ஓரளவு வசதி படைத்த குடும்பத்தவர்களாய் தானிருக்க வேண்டும் . வீட்டினுள் இருந்த ஒரு படுக்கையில் பாலாவை படுக்கவைத்த பாட்டி , நாடிப்பிடித்தும்  கண்களைத்திறந்தும் பார்த்தாள் .முதுகைக்கிழித்து தைத்திருந்த அம்பினை உருவியவள் , அதனையும் சிறிது ஆராய்ந்து பார்த்தாள் . பின் பாலாவின் கையில் இருந்த கிறல் போன்ற புள்ளிகளையும் பார்த்தாள் . உடனே வேகவேகமாய் கொல்லைப்புறம் நோக்கி சென்றவள் , கையில் சில இலைகள் மற்றும் வேப்பந்தலைகளுடன் திரும்பினாள் . பின் பாலாவின் கையை சந்துருவைப்பிடிக்க சொல்லிவிட்டு , ஏதோ பாடலை உச்சரித்த வண்ணம் வேப்பந்தலையினால் மெல்ல மெல்ல தேய்த்தாள்  . அவனுடைய கையில் இருந்து பிசபிசுவென ஒரு திரவம் வெளிவந்தது . பின் அவன் கையில் ஒரு இலையை எடுத்து பிழிந்தாள் . பின் அவனுடைய முதுகில் இருந்த காயத்திற்கு , அம்மிக்கல்லால் அரைத்த பச்சிலைகளைக்கொண்டு காயத்திற்கு சிகிச்சை அளித்தாள் .

‘ஒன்றுமில்லையப்பா ! அரவு தீண்டியதனால் ஏற்பட்ட விடம் . அதுதான் இவரை இந்நிலைக்குட்படுத்தியுள்ளது . அம்பின் காயம் ஆழமாய் உள்ளதால் , காயம் ஆற சிறிதுநாள் பிடிக்கலாம் . நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?’

‘நான் தஞ்சையிலிருந்து வருகிறேன் தாயே ! கானகத்தின் வழியே வரும்போது , வேடன் எங்களை கவனிக்காது எய்த அம்பால் இவர் நிலைகுனிந்தார் .ஆனால் அரவு ?’ என்று வினவினான் வளவன் .

‘ஆரண்யத்தினூடே வரும்போது இவை தவிர்க்கமுடியாதவை . நல்லவேளை , பலம் குன்றிய பாம்பின் தாக்குதலால் தப்பித்தார் . சரி . இங்கே கருவூரில் எங்கே தங்கப்போகிறீர்கள் ?’

‘ஏதாவது சத்திரம் அல்லது சாவடியில் தான் தாயே தங்கவேண்டும் .’

‘பரவாயில்லை . உங்களுக்கு ஆட்சேபமில்லையெனில் இந்த கிழத்தின் வீட்டிலேயே தங்கிக்கொள்ளுங்கள் .’

‘பரவாயில்லைத்தாயே ! நாங்கள் வெளியிலேயே தங்கிக்கொள்கிறோம் .இவர் மாத்திரம் இங்கே இருக்கட்டும் . இவர் எப்போது கண்விழிப்பார் ?’

‘கண்விழிக்க இன்னும் இரண்டு நாழிகை ஆகும் .’ என்றாள் .

இவர்கள் இருவரின் பேச்சையும் கவனித்துக்கொண்டிருந்த சந்துருவுக்கு , பாலாவுக்கு குணமாகிவிடும் என்பதை அறிந்தவுடன் ஒரு பெருமூச்சே விட்டான் . ஆனால் , அந்த பாட்டியை எங்கோ பார்த்தமாதிரிய இருக்கின்றதே என்று யோசித்தான் . எவ்வளவுதான் யோசித்தாலும் , அவனுக்கு அவள் பிடிபடவேயில்லை . பின் பாலாவை மாத்திரம் அங்கேயே விட்டு விட்டு , வளவனும் சந்துருவும் தங்குவதற்கு ஒரு சத்திரம் பார்க்க சென்றனர் . ஓரிடத்தில் நின்ற வளவன் , சந்துருவிடம் அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு ஒரு வீட்டினுள்ளே சென்றான் . சிறிது நேரத்திற்குப்பின் வேறொரு ஆள் சந்துருவிடம் வந்தான் .

‘போகலாமா ?’ என்றான் அந்த புதியவன் .

‘எங்க ?’

‘அடையாளம் தெரியவில்லையா என்னை ? நான் தான் வளவன் .’

‘வளவா ! என்ன வேஷம் இது ? எதுக்கு வேஷம் ?’

‘அதை இரவு மண்டபத்தில் கூறுகிறேன் . வாருங்கள் செல்லலாம் ‘ என்று சொல்லிவிட்டு  வளவன் முன்னோக்கி நடக்கலானான். சந்துருவோ ஒன்றும் புரியாமல் விழித்தவாறே , வளவனை பின்தொடர்ந்து சென்றான் .




-    தொடரும்


பயணம் @ டைம்மெஷின்
அத்தியாயம் – 4
பகுதி -4
அரவு (எ) பாம்பு
 ©
Megneash K Thirumurugan @ Myfreecopyrights.com


Comments

  1. பார்ப்பதெல்லாம் ஆங்கிலப் படம் .எழுதுவது ராஜாக்கள் கதை ..உங்கள் பெயரைப் போலவே வினோதமான பொருத்தம் !
    சரி ,அந்த மருத்துவக் கிழவி யாரென்று சொல்லுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. அது வெள்ளிக்கிழமையன்று தெரிந்துவிடும் அண்ணா !

      திரைப்படங்கள் பொழுதுபோக்கு .

      வரலாற்றுக்கதைகள் , சயின்ஸ் பிக்சன் , பேன்டஸி போன்றவையெல்லாம் எனக்கு மிக பிடித்தமானவைகள் அண்ணா !!

      வருகைக்கு நன்றி அண்ணா !!!

      :-)

      Delete
  2. இன்று ஒரே நாளில் பயணம் @ டைம் மிஷின்-1 முதல் பயணம் @ டைம்மெஷின் - 12 வரை வாசித்தேன். மிகவும் அருமை. தொடர்ச்சி எப்பொழுது எழுதப் போகிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சி கொஞ்சம் லேட் ஆகும் தல . இந்த பயணம் சீரிஸ ரீபூட் பண்ணலாம்னு இருக்கேன் . அதுனால தான் எழுதறத நிறுத்தி வைச்சுட்டேன் . கூடிய சீக்கிரம் முழுசா எழுதி முடிச்சிட்டு பதிவு அப்டேட் பண்ணிடறேன் தல . உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி தல .

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை