மடச்சாம்பிராணி – சிறுகதை
‘மச்சி ! அவனவனுக்கு வந்தா தான் வலியும்
வேதனையும் தெரியும் . நம்ம மஹாத்மாவே தென்னாப்ரிக்கவுல, அவரு அவமானபட்ட பின்னாடிதான்
போராட ஆரம்பிச்சாரு . தெரியுமா ?’
இதுதான் அவன்
. எப்போதும் எதைப்பற்றியாவது பேசிகொண்டே இருப்பவன் . நாம் எதைப்பற்றி பேசஆரம்பித்தாலும்
விடாது கருப்பாய் விடாமல் அதைப்பற்றியும் பேசுபவன் . பலநேரங்களில் நன்றாய் இருக்கும்
அவன் பேசுவதைக்கேட்க .
‘செர்பியன் ஃபிலிம் பத்தி தெரியுமா மச்சி
? அந்த படம் மட்டும் இந்தியாவுல ரிலிசானா , அதுல நடிச்சவங்கள்ல இருந்து விளக்கு பிடிச்சவங்க
வரைக்கும் அத்தனைபேரையும் தொரத்தி தொரத்தி நம்மாளுங்க வெட்டுவாங்க .’
இதுமாதிரி பல விஷயங்கள்
அவனிடம் கறக்கலாம் . கிட்டத்தட்ட சொல்லவேண்டுமெனில் எங்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கும்
விக்கிப்பீடியா . சந்தோஷ் வருகிறான் என்றாலே எங்கள் கூட்டம் கும்மமைதியாகிவிடும் .
எப்போதும் எங்கள் ஊரின் ஒரே டீக்கடையில் இருக்கும் எடைதாங்கி கல்லில் உட்கார்ந்து தினசரி
காலையினை தினத்தந்தியுடன் துவங்குவோம் . பத்தடி தூரத்தில் அவனைக் கண்டால் ராஜா , ஆனந்த்
என எல்லோருமே பறந்துவிடுவார்கள் .நான் மாத்திரமே அவனுடன் எப்போதும் இருப்பேன் . ஒருமுறை
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தவேளையில் எங்கள் ஊரின் கிழடுகட்டைகள் அனைத்தும் அதைப்பற்றிய
தங்களின் உலகஅறிவை தங்கள் வயதினரிடத்தில் பறைசாற்றிக்கொண்டிருந்த வேளை .
அமெரிக்கா காரன்
எண்ணெய் வளத்திற்காக தான் தாக்குகிறான் என்று எங்கள் ஊரின் தமிழாசிரியரும் என்னுடைய
மாமாவும் பிறரிடத்தில் விவரித்துகொண்டிருந்த வேளையில் , ஒபியத்திற்காகத்தான் ஈரான்
தாக்கப்பட்டது என தமிழாசிரியருக்கு பாடம் எடுத்தான் . அன்றுமுதல் எங்கள் இளைஞரணி அட்டீக்கடை
வாயிலிலே காலை எடுத்துவைக்கமுடியாதபடி அட்டீக்கடைக்காரரும் தமிழாசிரியரின் உற்ற நண்பருமான
சின்னு தடைபோட்டார் . அதுமுதல் எங்களின் புதிய ஆதரவாக ரோட்டோர புளியமரத்தின் எடைதாங்கி
கல் பணியில் அமர்த்தப்பட்டது .
‘மச்சி நாமெல்லாம் ஒரு பாக்டிரியா டா . எப்படி
தெரியுமா ? உலகத்துல உருவான முதல் உயிரியே சைனோ பாக்டீரியாங்ற நீலப்பசும்பாசி தானாம்
.’
இம்மாதிரியான உரையாடல்களில்
பெரும்பாலும் என்னிடமிருந்து வரும் பதில் ‘ஓ’வாகத்தான் இருக்கும் . இதைப்பற்றியெல்லாம்
எப்படி படிக்கிறான் , எங்கே படிக்கிறான் ? சதாசர்வகாலமும் எங்களுடனேதான் இருக்கிறான்
. எனக்குத்தெரிந்து நான் காலேஜ் முடித்து இரண்டாண்டு காலமாய் அவனும் என்னுடனே தான்
இருக்கிறான் . ஒருவேளை இரவு நேரங்களில் எனக்கும் தெரியாமல் பொது அறிவு 2013 மாதிரியான
புத்தகங்கள் வாங்கி படிக்கிறானோ என்ற எண்ணம்தான் வரும் .
‘மச்சி நம்ம இந்தியப்பெருங்கடல்ல , டெய்லியும்
4 மணிக்கு ஒரு இடத்துல மழை பெய்யுமாம் டா
. தெரியுமா ?’
‘தெரியாது மச்சி .’
சாதாரண வரப்பட்டிகாடான
நாயக்கன்பட்டியிலிருக்கும் இவனுக்கு , இந்தியப்பெருங்கடலில் பெய்யும் மழையினைப்பற்றி
எவ்வாறு தெரிந்திருக்கும் என்று சில நாட்கள் நான் குழம்பியபடியே இருந்தேன் . எப்படியாவது
அவனைவிட அதிகம் தெரிந்தவனாய் நாம் மாறவேண்டும் . அதற்காக அவனுடனே ஒட்டிக்கொண்டிருந்தால்
மட்டுமே முடியும் .
‘மச்சி ! ஆப்பிளோட சாஃப்ட்வேர காப்பியடிச்ச
கேஸ்ல சாம்சங்கு ஆப்போசிட்டா தீர்ப்பு வந்துடுச்சி மச்சி . ஆனா குசும்பு பிடிச்ச சாம்சங்
காரன், ஆப்பிளுக்கு தரவேண்டிய 5000கோடிய சில்லறையா லாரி லாரியா அனுப்பிருக்கான் மச்சி
.’
என்று கூறிவிட்டு
அவன் சிரிக்கும்போது , அடச்சே என்னடா நாம் இவ்வளவு மடச்சாம்பிராணியாய் இருக்கோம் என்று
என்னையே நான் திட்டிக்கொண்டு சிரிப்பேன் . அந்த அசடுவழியும் சிரிப்பினை கே.எஸ் .ரவிக்குமாரோ
, ஷங்கரோ பார்த்திருந்தால் அடுத்த நிமிடமே என்னை கதாநாயகனாக்கிகொள்ள விரும்பியிருப்பார்கள்
.
‘இலங்கைல நடக்குற மாதிரி இந்த உலகத்துல எங்கயும்
கொடும நடக்கல தெரியுமா ? ஹிட்லரே அந்த கொடுமைய பார்த்திருந்தா கண்கலங்கிருப்பான் .
ஹிட்லரோட கொடுமைல கூட நாஜிங்க யாரும் யூதப்பொம்பளைங்கல தொடக்கூடாதுங்ற கடுமையான சட்டம்
இருந்துச்சி . ஆனா , இங்க .’
என்று ஈழப்பிரச்சனையை
என்னிடம் அவன் விவாதித்தது இன்னும் என் நினைவில் உள்ளது . எப்படியோ , என் ஊரினை பிரிந்து
5 ஆண்டுகள் ஆகிறது. திருமணம் , அம்மு பிறந்தது
, என பல நிகழ்ச்சிகள் தென்றலாய் என் வாழ்க்கையில் நிகழ்ந்தாலும் சந்தோஷை மட்டும் இடையில்
காணமுடியவே இல்லை . அவன் தில்லி பக்கம் சென்று ஏதோ ஒரு வேலையில் செட்டிலானதாக ஊரில்
பேசிக்கொண்டனர் . அவன் ஊரைவிட்டு கிளம்புகிறான் என்றதும் மட்டற்ற மகிழ்ச்சியில் கிடாவிருந்தை
வைத்தாராம் என் மாமா . எப்போதும் அவர் சொல்லும் தம்பட்டங்களை , தன்திறத்தால் தவிடுபொடியாக்குவதே
சந்தோஷின் வேலை . அவனை தொடர்புகொள்ளவும் இடையில் வழியில்லை . இந்தமுறை சந்தோஷ் ஊருக்கு
வருவான் என ராஜா போனில் கூறியதைக்கேட்டதும் தான் ஊருக்குசெல்ல மிக்க ஆவலானேன் சென்னையை
மாமனார் ஊராக்கிய 5 வருடங்களில் எவ்வளவு மாறியும் , எங்களைத்தாங்கும் அந்த புளியமர
எடைக்கல் மாத்திரம் அப்படியே இருந்தது . ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டது . அன்றைய
பகல் , ஊரெல்லாம் இருக்கும் உறவினர்களை பார்ப்பதும் , நண்பர்களுடன் திரிவெதுமென நேரம்
கடந்தது .இரவு வீட்டிற்கு வந்தால் என் அம்மாவோ அம்முவை கவனித்துக்கொண்டிருந்தாள் .
அப்பாவோ செய்திகளில் ஆழ்ந்திருந்தார் . அவர்களிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு மனைவியிடம்
சென்றேன் . அவளோ ஒரு குப்பை நாவலைப்படிப்பதில் முழுகவனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள்
. அமைதியாய் போர்த்தி கொண்டு படுத்தேன் ..
விடிந்ததும் ராஜாதான்
எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான் .
‘மச்சி சந்தோஷ் வந்திருக்கான்டா .’
என்னுள் எழுந்த
ஆவலை அடக்கிகொண்டு ‘சரிடா’ என சாதாரணமாய் பதிலளித்தேன் . அவனை நான் காண ஆசைப்பட்டது
இரண்டுவிஷயத்திற்காகத்தான் . ஒன்று அவனுடைய வேலை , மற்றொன்று அவனின் சம்பளம் . வேகவேகமாய்
கிளம்பி பாடிஸ்ப்ரே எல்லாம் போட்டுக்கொண்டு என் மனைவியிடம் சொல்லிவிட்டு எங்களின் எடைதாங்கி
கல்லிற்கு சென்றமர்ந்தேன் . ஆனந்த்தும் அவனுடைய தம்பியும் தான் இருந்தார்கள் . ராஜா
, சந்தோஷை பார்த்து அழைத்துவர சென்றிருப்பதாக கூறியிருந்தார்கள் . அதோ , தூரத்தில்
அவன் வருகிறான் . ஆள் கொஞ்சம் மாறியிருந்தான் . ஒட்டிய கன்னம் , சோடாபுட்டி கண்ணாடி
, பைஜாமா போன்றதொரு ஆடையென பார்க்க பழம் போலிருந்தான் .
‘டே மச்சி ! எப்டிடா இருக்க ?’ என்ற என் கேள்விக்கு ஆங்கிலத்தில் தான்
பதிலளித்தான் .
‘யா ! ஐ யம் ஃபைன் மச்சி .வாட் அபௌட் யூ
அன்ட் யுவர் ஃபேமிலி .’
நான் விடுவேனா
என்ன ?
‘யா ! தேய் ஆல் ஆர் ஃபைன் மச்சி. இட்ஸ் குட்
டூ சீ யு மேன் .’
பாவம் , ராஜாவும்
ஆனந்தும் எங்களையே வெறித்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .ராஜா தான் கொஞ்சம்
கோபமடைந்து எங்களை கலாய்க்க ஆரம்பித்தான் . பின் சாதாரண சம்பிரதாய கேள்விகளை எல்லாம்
கேட்டபின் , நான் தயங்கியவாறே அவனிடத்தில் கேட்க ஆரம்பித்தேன் .
‘ஏன்டா மச்சி இன்னும் கல்யாணம் பண்ணிக்கல ?’
‘கொஞ்ச நாள் ஆகட்டும் மச்சி . புடிச்ச மாதிரி
பொண்ணு வரட்டும் . கல்யாணம் பண்ணிக்கலாம் . நெறய அப்ளிகேசன் வருது .பட் எனக்குத்தான்
இன்ட்ரஸ்ட் இல்ல .’
இவன் இன்னும் பீலா
விடுவதை நிறுத்தவில்லை . ஆனால் குறைந்திருக்கிறது . மனதினுள் எழுந்த சிரிப்பினை அடக்கிக்கொள்ள
ஆரம்பித்தேன் . ஏற்கனவே ஒட்டகம் போலிருக்கும் இவன் , தானே எவளிடமாவது புரபோசல் செய்தாலே
கிடைப்பது கடினம் . இதில் அப்ளிகேசன் தேடிவருகிறதாம் .
‘சரி ! ஜாப்லாம் எப்படி போகுது ?’
‘நா வேலைய ரிசைன் பண்ணிட்டேன் மச்சி .’
இக்காலத்தில் வேலை
இருந்தாலே பெண் கிடைப்பது கடினம் . இந்த லட்சணத்தில் வேலையில்லாமலிருக்கும் இவனுக்கு
அப்ளிகேசன் குவியுதாம் .
‘ஏன்டா மச்சி ?’
‘என்னோட லட்சியத்துக்கு இடஞ்சலா இருந்துச்சி
மச்சி . அதான் ரிசைன் பண்ணிட்டேன் .’
‘உனக்கென்ன மச்சி லட்சியம் ?’
‘எழுத்தாளர் ஆகனும்னு நினைச்சேன் மச்சி
. அதுக்காக ஜாப்ப ரிசைன் பண்ணிட்டேன் .’
‘சரி போன் நம்பர் கொடுடா’
‘இல்ல மச்சி ! நா போன் யூஸ் பன்றதில்ல’
பாவம் . புறங்கையை
நக்கிக்கொண்டு திரிகிறான் . எப்படியோ அவனிடத்தில் இனி சம்பளத்தைப்பற்றி கேட்கதேவையில்லை
.நாம் தான் அதில் முந்திவிட்டோமே ! வேகவேகமாய் சந்தோஷத்தில் மிதந்தவாறே வீட்டிற்குள்
சென்றேன் . முதலில் என் மனைவியிடம் இதைப்பற்றி பீற்றிக்கொள்ள வேண்டுமென சென்றேன் .
என் தந்தை டீவியில் செய்தியை ஆன் செய்துவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார் . அவள் இன்னமும்
நாவலைப்படித்துக்கொண்டிருக்க அவள் அருகே சென்று அமர்ந்தேன் . அவளுக்கு சந்தோசைப்பற்றியும்
, நான் அவனை முந்தியாகவேண்டிய அவசியத்தைப்பற்றியும் நன்கு தெரியும் .
‘தங்கம் .’
‘என்னங்க ?’
‘ஒரு ஹாப்பி நியூஸ்’
‘என்ன நியூஸ்? ’
‘நா உங்கிட்ட சொன்னேன்ல சந்தோஷ்னு ஒருத்தன
. அவன நா’
என்று முடிக்கும்முன்னரே
‘இவ்வருடத்திற்கான
சாகித்திய அகாடமி விருது சந்தோஷ் எனும் எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ’
என்ற செய்தியும் , தொடர்ந்து அவனுடைய புகைப்படமும் டீவியில் வர ஆரம்பித்தது . ஆம்
, அவனே தான் .
‘ஒன்னுமில்ல தங்கம்’ என்றவாறு மீண்டும் மடச்சாம்பிராணியாய் என்னை
எண்ணி அசடு வழிந்துகொண்டே சிரிக்க ஆரம்பித்தேன் .இப்போது குப்ரிக் , ஹிட்ச்காக் , மணிரத்னம் என உலகில் இருக்கும் அத்தனை டைரக்டரும்
என்னை கதாநாயகனாக்க எண்ணுவார்கள் .
பூமி - சிறுகதை
கெட்டவார்த்தை - சிறுகதை
பாஸ்போர்ட் - சிறுகதை
மீண்டும் ஒரு காதல் - சிறுகதை
நினைவுகள் - சிறுகதை
ராசாத்தி - சிறுகதை
தொடர்புடைய சிறுகதைகள்
பூமி - சிறுகதை
கெட்டவார்த்தை - சிறுகதை
பாஸ்போர்ட் - சிறுகதை
மீண்டும் ஒரு காதல் - சிறுகதை
நினைவுகள் - சிறுகதை
ராசாத்தி - சிறுகதை
நம் தலைக்கனம் ,அடுத்தவனை மட்டமாய் தான் எடை போடும் என்பதை உணர்த்தும் 'மடச் சாம்பிராணியை 'ரசித்தேன் !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!
Delete