மடச்சாம்பிராணி – சிறுகதை





‘மச்சி ! அவனவனுக்கு வந்தா தான் வலியும் வேதனையும் தெரியும் . நம்ம மஹாத்மாவே தென்னாப்ரிக்கவுல, அவரு அவமானபட்ட பின்னாடிதான் போராட ஆரம்பிச்சாரு . தெரியுமா ?’

இதுதான் அவன் . எப்போதும் எதைப்பற்றியாவது பேசிகொண்டே இருப்பவன் . நாம் எதைப்பற்றி பேசஆரம்பித்தாலும் விடாது கருப்பாய் விடாமல் அதைப்பற்றியும் பேசுபவன் . பலநேரங்களில் நன்றாய் இருக்கும் அவன் பேசுவதைக்கேட்க .

‘செர்பியன் ஃபிலிம் பத்தி தெரியுமா மச்சி ? அந்த படம் மட்டும் இந்தியாவுல ரிலிசானா , அதுல நடிச்சவங்கள்ல இருந்து விளக்கு பிடிச்சவங்க வரைக்கும் அத்தனைபேரையும் தொரத்தி தொரத்தி நம்மாளுங்க வெட்டுவாங்க .’

இதுமாதிரி பல விஷயங்கள் அவனிடம் கறக்கலாம் . கிட்டத்தட்ட சொல்லவேண்டுமெனில் எங்களின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் விக்கிப்பீடியா . சந்தோஷ் வருகிறான் என்றாலே எங்கள் கூட்டம் கும்மமைதியாகிவிடும் . எப்போதும் எங்கள் ஊரின் ஒரே டீக்கடையில் இருக்கும் எடைதாங்கி கல்லில் உட்கார்ந்து தினசரி காலையினை தினத்தந்தியுடன் துவங்குவோம் . பத்தடி தூரத்தில் அவனைக் கண்டால் ராஜா , ஆனந்த் என எல்லோருமே பறந்துவிடுவார்கள் .நான் மாத்திரமே அவனுடன் எப்போதும் இருப்பேன் . ஒருமுறை ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தவேளையில் எங்கள் ஊரின் கிழடுகட்டைகள் அனைத்தும் அதைப்பற்றிய தங்களின் உலகஅறிவை தங்கள் வயதினரிடத்தில் பறைசாற்றிக்கொண்டிருந்த வேளை .


அமெரிக்கா காரன் எண்ணெய் வளத்திற்காக தான் தாக்குகிறான் என்று எங்கள் ஊரின் தமிழாசிரியரும் என்னுடைய மாமாவும் பிறரிடத்தில் விவரித்துகொண்டிருந்த வேளையில் , ஒபியத்திற்காகத்தான் ஈரான் தாக்கப்பட்டது என தமிழாசிரியருக்கு பாடம் எடுத்தான் . அன்றுமுதல் எங்கள் இளைஞரணி அட்டீக்கடை வாயிலிலே காலை எடுத்துவைக்கமுடியாதபடி அட்டீக்கடைக்காரரும் தமிழாசிரியரின் உற்ற நண்பருமான சின்னு தடைபோட்டார் . அதுமுதல் எங்களின் புதிய ஆதரவாக ரோட்டோர புளியமரத்தின் எடைதாங்கி கல் பணியில் அமர்த்தப்பட்டது .


‘மச்சி நாமெல்லாம் ஒரு பாக்டிரியா டா . எப்படி தெரியுமா ? உலகத்துல உருவான முதல் உயிரியே சைனோ பாக்டீரியாங்ற நீலப்பசும்பாசி தானாம் .’

இம்மாதிரியான உரையாடல்களில் பெரும்பாலும் என்னிடமிருந்து வரும் பதில் ‘ஓ’வாகத்தான் இருக்கும் . இதைப்பற்றியெல்லாம் எப்படி படிக்கிறான் , எங்கே படிக்கிறான் ? சதாசர்வகாலமும் எங்களுடனேதான் இருக்கிறான் . எனக்குத்தெரிந்து நான் காலேஜ் முடித்து இரண்டாண்டு காலமாய் அவனும் என்னுடனே தான் இருக்கிறான் . ஒருவேளை இரவு நேரங்களில் எனக்கும் தெரியாமல் பொது அறிவு 2013 மாதிரியான புத்தகங்கள் வாங்கி படிக்கிறானோ என்ற எண்ணம்தான் வரும் .

‘மச்சி நம்ம இந்தியப்பெருங்கடல்ல , டெய்லியும் 4 மணிக்கு ஒரு இடத்துல மழை  பெய்யுமாம் டா . தெரியுமா ?’

‘தெரியாது மச்சி .’

சாதாரண வரப்பட்டிகாடான நாயக்கன்பட்டியிலிருக்கும் இவனுக்கு , இந்தியப்பெருங்கடலில் பெய்யும் மழையினைப்பற்றி எவ்வாறு தெரிந்திருக்கும் என்று சில நாட்கள் நான் குழம்பியபடியே இருந்தேன் . எப்படியாவது அவனைவிட அதிகம் தெரிந்தவனாய் நாம் மாறவேண்டும் . அதற்காக அவனுடனே ஒட்டிக்கொண்டிருந்தால் மட்டுமே முடியும் .

‘மச்சி ! ஆப்பிளோட சாஃப்ட்வேர காப்பியடிச்ச கேஸ்ல சாம்சங்கு ஆப்போசிட்டா தீர்ப்பு வந்துடுச்சி மச்சி . ஆனா குசும்பு பிடிச்ச சாம்சங் காரன், ஆப்பிளுக்கு தரவேண்டிய 5000கோடிய சில்லறையா லாரி லாரியா அனுப்பிருக்கான் மச்சி .

என்று கூறிவிட்டு அவன் சிரிக்கும்போது , அடச்சே என்னடா நாம் இவ்வளவு மடச்சாம்பிராணியாய் இருக்கோம் என்று என்னையே நான் திட்டிக்கொண்டு சிரிப்பேன் . அந்த அசடுவழியும் சிரிப்பினை கே.எஸ் .ரவிக்குமாரோ , ஷங்கரோ பார்த்திருந்தால் அடுத்த நிமிடமே என்னை கதாநாயகனாக்கிகொள்ள விரும்பியிருப்பார்கள் .

‘இலங்கைல நடக்குற மாதிரி இந்த உலகத்துல எங்கயும் கொடும நடக்கல தெரியுமா ? ஹிட்லரே அந்த கொடுமைய பார்த்திருந்தா கண்கலங்கிருப்பான் . ஹிட்லரோட கொடுமைல கூட நாஜிங்க யாரும் யூதப்பொம்பளைங்கல தொடக்கூடாதுங்ற கடுமையான சட்டம் இருந்துச்சி . ஆனா , இங்க .’

என்று ஈழப்பிரச்சனையை என்னிடம் அவன் விவாதித்தது இன்னும் என் நினைவில் உள்ளது . எப்படியோ , என் ஊரினை பிரிந்து 5 ஆண்டுகள் ஆகிறது.  திருமணம் , அம்மு பிறந்தது , என பல நிகழ்ச்சிகள் தென்றலாய் என் வாழ்க்கையில் நிகழ்ந்தாலும் சந்தோஷை மட்டும் இடையில் காணமுடியவே இல்லை . அவன் தில்லி பக்கம் சென்று ஏதோ ஒரு வேலையில் செட்டிலானதாக ஊரில் பேசிக்கொண்டனர் . அவன் ஊரைவிட்டு கிளம்புகிறான் என்றதும் மட்டற்ற மகிழ்ச்சியில் கிடாவிருந்தை வைத்தாராம் என் மாமா . எப்போதும் அவர் சொல்லும் தம்பட்டங்களை , தன்திறத்தால் தவிடுபொடியாக்குவதே சந்தோஷின் வேலை . அவனை தொடர்புகொள்ளவும் இடையில் வழியில்லை . இந்தமுறை சந்தோஷ் ஊருக்கு வருவான் என ராஜா போனில் கூறியதைக்கேட்டதும் தான் ஊருக்குசெல்ல மிக்க ஆவலானேன் சென்னையை மாமனார் ஊராக்கிய 5 வருடங்களில் எவ்வளவு மாறியும் , எங்களைத்தாங்கும் அந்த புளியமர எடைக்கல் மாத்திரம் அப்படியே இருந்தது . ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகிவிட்டது . அன்றைய பகல் , ஊரெல்லாம் இருக்கும் உறவினர்களை பார்ப்பதும் , நண்பர்களுடன் திரிவெதுமென நேரம் கடந்தது .இரவு வீட்டிற்கு வந்தால் என் அம்மாவோ அம்முவை கவனித்துக்கொண்டிருந்தாள் . அப்பாவோ செய்திகளில் ஆழ்ந்திருந்தார் . அவர்களிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு மனைவியிடம் சென்றேன் . அவளோ ஒரு குப்பை நாவலைப்படிப்பதில் முழுகவனத்தை செலுத்திக்கொண்டிருந்தாள் . அமைதியாய் போர்த்தி கொண்டு படுத்தேன் ..

விடிந்ததும் ராஜாதான் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான் .

‘மச்சி சந்தோஷ் வந்திருக்கான்டா .’

என்னுள் எழுந்த ஆவலை அடக்கிகொண்டு ‘சரிடா’ என சாதாரணமாய் பதிலளித்தேன் . அவனை நான் காண ஆசைப்பட்டது இரண்டுவிஷயத்திற்காகத்தான் . ஒன்று அவனுடைய வேலை , மற்றொன்று அவனின் சம்பளம் . வேகவேகமாய் கிளம்பி பாடிஸ்ப்ரே எல்லாம் போட்டுக்கொண்டு என் மனைவியிடம் சொல்லிவிட்டு எங்களின் எடைதாங்கி கல்லிற்கு சென்றமர்ந்தேன் . ஆனந்த்தும் அவனுடைய தம்பியும் தான் இருந்தார்கள் . ராஜா , சந்தோஷை பார்த்து அழைத்துவர சென்றிருப்பதாக கூறியிருந்தார்கள் . அதோ , தூரத்தில் அவன் வருகிறான் . ஆள் கொஞ்சம் மாறியிருந்தான் . ஒட்டிய கன்னம் , சோடாபுட்டி கண்ணாடி , பைஜாமா போன்றதொரு ஆடையென பார்க்க பழம் போலிருந்தான் .

‘டே மச்சி ! எப்டிடா இருக்க ?’ என்ற என் கேள்விக்கு ஆங்கிலத்தில் தான் பதிலளித்தான் .

‘யா ! ஐ யம் ஃபைன் மச்சி .வாட் அபௌட் யூ அன்ட் யுவர் ஃபேமிலி .’

நான் விடுவேனா என்ன ?

‘யா ! தேய் ஆல் ஆர் ஃபைன் மச்சி. இட்ஸ் குட் டூ சீ யு மேன் .’

பாவம் , ராஜாவும் ஆனந்தும் எங்களையே வெறித்த வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .ராஜா தான் கொஞ்சம் கோபமடைந்து எங்களை கலாய்க்க ஆரம்பித்தான் . பின் சாதாரண சம்பிரதாய கேள்விகளை எல்லாம் கேட்டபின் , நான் தயங்கியவாறே அவனிடத்தில் கேட்க ஆரம்பித்தேன் .

‘ஏன்டா மச்சி இன்னும் கல்யாணம்  பண்ணிக்கல ?’

‘கொஞ்ச நாள் ஆகட்டும் மச்சி . புடிச்ச மாதிரி பொண்ணு வரட்டும் . கல்யாணம் பண்ணிக்கலாம் . நெறய அப்ளிகேசன் வருது .பட் எனக்குத்தான் இன்ட்ரஸ்ட் இல்ல .’

இவன் இன்னும் பீலா விடுவதை நிறுத்தவில்லை . ஆனால் குறைந்திருக்கிறது . மனதினுள் எழுந்த சிரிப்பினை அடக்கிக்கொள்ள ஆரம்பித்தேன் . ஏற்கனவே ஒட்டகம் போலிருக்கும் இவன் , தானே எவளிடமாவது புரபோசல் செய்தாலே கிடைப்பது கடினம் . இதில் அப்ளிகேசன் தேடிவருகிறதாம் .

‘சரி ! ஜாப்லாம் எப்படி போகுது ?’

‘நா வேலைய ரிசைன் பண்ணிட்டேன் மச்சி .’

இக்காலத்தில் வேலை இருந்தாலே பெண் கிடைப்பது கடினம் . இந்த லட்சணத்தில் வேலையில்லாமலிருக்கும் இவனுக்கு அப்ளிகேசன் குவியுதாம் .

‘ஏன்டா மச்சி ?’

‘என்னோட லட்சியத்துக்கு இடஞ்சலா இருந்துச்சி மச்சி . அதான் ரிசைன் பண்ணிட்டேன் .’

‘உனக்கென்ன மச்சி லட்சியம் ?’

‘எழுத்தாளர் ஆகனும்னு நினைச்சேன் மச்சி . அதுக்காக ஜாப்ப ரிசைன் பண்ணிட்டேன் .’

‘சரி போன் நம்பர் கொடுடா’

‘இல்ல மச்சி ! நா போன் யூஸ் பன்றதில்ல’

பாவம் . புறங்கையை நக்கிக்கொண்டு திரிகிறான் . எப்படியோ அவனிடத்தில் இனி சம்பளத்தைப்பற்றி கேட்கதேவையில்லை .நாம் தான் அதில் முந்திவிட்டோமே ! வேகவேகமாய் சந்தோஷத்தில் மிதந்தவாறே வீட்டிற்குள் சென்றேன் . முதலில் என் மனைவியிடம் இதைப்பற்றி பீற்றிக்கொள்ள வேண்டுமென சென்றேன் . என் தந்தை டீவியில் செய்தியை ஆன் செய்துவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார் .   அவள் இன்னமும் நாவலைப்படித்துக்கொண்டிருக்க அவள் அருகே சென்று அமர்ந்தேன் . அவளுக்கு சந்தோசைப்பற்றியும் , நான் அவனை முந்தியாகவேண்டிய அவசியத்தைப்பற்றியும் நன்கு தெரியும் .

‘தங்கம் .’


‘என்னங்க ?’

‘ஒரு ஹாப்பி நியூஸ்’

‘என்ன நியூஸ்? ’

‘நா உங்கிட்ட சொன்னேன்ல சந்தோஷ்னு ஒருத்தன . அவன நா’

என்று முடிக்கும்முன்னரே  ‘இவ்வருடத்திற்கான சாகித்திய அகாடமி விருது சந்தோஷ் எனும் எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது ’ என்ற செய்தியும் , தொடர்ந்து அவனுடைய புகைப்படமும் டீவியில் வர ஆரம்பித்தது . ஆம் , அவனே தான்  .


‘ஒன்னுமில்ல தங்கம்’ என்றவாறு மீண்டும் மடச்சாம்பிராணியாய் என்னை எண்ணி அசடு வழிந்துகொண்டே சிரிக்க ஆரம்பித்தேன் .இப்போது குப்ரிக் , ஹிட்ச்காக்  , மணிரத்னம் என உலகில் இருக்கும் அத்தனை டைரக்டரும் என்னை கதாநாயகனாக்க எண்ணுவார்கள் .





தொடர்புடைய சிறுகதைகள்



பூமி - சிறுகதை


கெட்டவார்த்தை - சிறுகதை


பாஸ்போர்ட் - சிறுகதை


மீண்டும் ஒரு காதல் - சிறுகதை


நினைவுகள்  - சிறுகதை


ராசாத்தி - சிறுகதை

Comments

  1. நம் தலைக்கனம் ,அடுத்தவனை மட்டமாய் தான் எடை போடும் என்பதை உணர்த்தும் 'மடச் சாம்பிராணியை 'ரசித்தேன் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை