காதல் காதல் – தொடர்கதை - 2

முதல் பாகத்தைப்படிக்க இங்கே அழுத்துங்கள்





ஓய் குயில்களே ! உங்களுக்கு போட்டியாக ஒருத்தி வந்துவிட்டாள் என்று உரக்கக்கூற நினைத்த மதனுக்கு  ‘அண்ணா’ என்ற வார்த்தை நாராசமாய் அவன் காதில் ஒலித்துவிட்டது . இவ்வளவு அழகான நாளில் இப்படியொரு கொடூரமான வார்த்தையைக்கேட்க கூடும் என்று அவன் அறிந்திருந்தால் நிச்சயம் மாலைவேளையில் அந்த பேருந்தினுள் ஏறியிருக்கவேமாட்டான் . அவனுக்குள் சுர்ரென்று கோவம் உச்சந்தலைக்குள் ஏறியிருந்தது .

‘அண்ணா ப்ளீஸ் . தள்ளி நில்லுங்க’ என்று மறுபடியும் அவள் கூறியபோது வெடித்தே சிதறிவிட்டான் .

‘யாருடீ உனக்கு அண்ணன் ? அப்படியே பளார்னு விட்டன்னு வச்சிக்கோ , அவ்ளோதான் .’

‘நா என்ன தப்பு பண்ணேன் . எதுக்கு திட்ரிங்க ’ என்று கண்கலங்கியவாறே அவள் கேட்டாள் . பாவம் , அந்த 18 வயது மங்கைக்கு கல்லூரியின் முதல்நாளன்று யாரென்றே தெரியாத ஒருவனிடம் திட்டு வாங்கியது அதிர்ச்சியையும் சிறிது கலக்கத்தையும் உண்டாக்கிவிட்டது .

‘நீ ஒரு வெங்காயமும் பண்ணல . எல்லாம் என் தப்பு தான் . இன்னொரு தடவ அண்ணானு சொன்ன , மூஞ்சு மொவரையெல்லாம் பேத்துடுவேன் .’ என்றவாறே திரும்பி வேகவேகமாய் எதிரில் இருக்கும் கூட்டத்தை விலக்கியவாறே படியை நோக்கி கிளம்பினான் மதன் . மதனின் நிலையைக்கண்டு அங்கிருந்த போட்டி கோஸ்டியினருக்கு உள்ளுக்குள் ஆனந்தம் ஏற்பட , இன்னும் சிலருக்கு நாம தப்பித்தோம் என்று ஆத்வாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள் .

‘டே கண்ணா ! இறங்கு டா .’ என்று கூறியவாறே கண்ணனின் பதிலை எதிர்பாராமல் அடுத்த நிறுத்தத்தில் வேகவேகமாய் இறங்கி , எதிரில் தென்பட்ட டீக்கடையை நோக்கி நடந்தான் மதன் .அவனுக்குள் கோவம் கொப்பளித்துக்கொண்டிருந்தது . படுபாவி மகள் , ஒரு கொடுவாளை எடுத்து கழுத்தை வெட்டியிருந்தால் கூட சிரித்தவாறே இறந்திருப்பான் . ஆனால் வார்த்தையால் வதைத்துவிட்டாளே என்று மனதினுள் அழுதவாறே ஒரு சிகரெட்டைப்பற்ற வைத்தான் .

‘என்ன மச்சி ஆச்சு ?’ என்ற கண்ணனின் கேள்விக்கு பத்துநிமிடம் கழித்து பதில் கூறினான் .

‘இல்ல மச்சி ! இவ செட் ஆகமாட்டா . ’

‘ஏன்டா ? அவளுக்கு புடிக்கலையா ?’

‘இல்ல மச்சி . அவ என்ன அண்ணானு சொல்லிட்டாடா ’ என்று தொண்டை தழுதழுக்க கூறினான் . கிட்டத்தட்ட அழுதுவிடும் நிலையில் இருந்தான் . கண்டிப்பாய் வீட்டை அடைந்ததும் அவனுடைய படுக்கை கண்ணீரால் நனையப்போவது உறுதி .

‘விடு மச்சி . இவளாம் ஒரு ஆளு . அவ மூஞ்சப்பாத்தியா ? நல்லா வெள்ள எலிக்கு பவுடர் பூசுன மாதிரி . குள்ளக்கத்திரிக்காயாட்டம் இருந்துகிட்டு ஓவர் சீனு போடுறா மச்சி . நா அப்பவே வேண்டாம் விடுடானு சொல்லிருப்பேன் . உனக்கு மனசு கேக்காதுனு தான் விட்டுட்டேன் ’ என்றான் கண்ணன் .

அப்போதைய வார்த்தைகள் ஓரளவு மதனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும் . அடுத்த பேருந்து வந்தபின் அதில் ஏறிய மதனுக்கு வீட்டைச்சென்றடையும் நேரம் எல்லாம் முழுக்கவனமும் அவள் அண்ணா என்று கூறிய அந்த ஒரு வினாடியில் மாத்திரமே இருந்தது . ச்சே ! நாம இன்னைக்கு அவகிட்டபோயிருக்கவேகூடாது . அவசரப்பட்டுட்டோம் . அவ மட்டும் என்ன செய்வா ? முன்னபின்ன தெரியாத ஒரு பையன அண்ணானு சொல்லாம மாமானா சொல்லுவா ? அவமேல தப்பு இல்ல . அவளும் காலைல நல்லா பார்த்தாளே ! அப்பறம் எதுக்கு அண்ணானு சொல்லிருப்பா ? ஒருவேள என்ன புடிக்கலையோ ? எல்லாத்துக்கும் காரணம் எங்கப்பா தான் . அவரு மாதிரியே என்னோட தலையும் கொஞ்சம் வழுக்கையா இருக்கறதால தான் அவளுக்கு நம்மள புடிக்கல . இதுபோன்று ஏதேதோ நினைத்துக்கொண்டே வீட்டை அடைந்தான் . மற்றநாட்களில்  வீட்டினுள் எல்லாரையும் சிரிக்கவைத்துக்கொண்டிருந்தவன் அன்றைய தினம் மௌனமாய்  தன்னுடைய அறையினில் முடங்கிக்கிடந்தான் . இதுமாதிரியான துன்பகர தினம் ஒருநாளும் அவனுக்கு இருந்தது இல்லை . ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் மனதினுள் விதைத்துக்கொண்டான் . வாழ்வு அவளோடு தான் .

அடுத்தநாள் மீண்டும் வேகவேகமாய்க்கிளம்பி அவள் பயணிக்கும் அதேபேருந்தில் ஏறினான் .நேற்றைய தினம் அவள் மட்டும் அப்படி இவனை அழைக்காமலிருந்தால் அவளின் வீடுவரை சென்றிருப்பான் . அவனுக்கென்று கடைசி படியில் சிறிது இடவிட்டு ‘வா தல’ என்ற ஜூனியர் மாணவர்களின் மரியாதையை கண்டுகொள்ளாமல் உள்ளே நுழைந்தான் . எப்போதும் கடைசிப்படியில் மட்டுமே பயணிப்பவன் முதல்முறையாய் உள்ளே நுழைவது , கண்டக்டர் உட்பட அவனை அறிந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது . அவளைப்பார்த்ததும் பல கால்களை மிதித்து , சிலரைத்தள்ளியவாறே உள்ளே நுழைந்தான் . அவள் நின்றுகொண்டிருந்த இடத்தை அடுத்த ஒருநிமிடத்தில் அடைந்தான் . நேற்று அவளை சைட் அடித்துக்கொண்டிருந்த அதே முகங்கள் இன்றும் தத்தம் இடத்தில் தென்பட்டன .இன்றைய தினம் வெள்ளைநிற சுடிதார் , ஆனால் மெல்லிய நீலநிறப்பூக்களுக்குள் தனது தங்கத்தை , சாரி அங்கத்தை மறைத்திருந்தாள் .  ஆனால் நேற்று பார்த்திருந்த பொலிவான முகம் அவனுக்குக்காட்சியளிக்கவில்லை . மாறாய் இரவு முழுதும் துயில் கொள்ளாத களையிழந்த முகம்தான் காணப்பட்டது . நேற்றைய சிரிப்பொலி இன்று அவளிடம் இல்லை . அவளுடைய தோழிகள் மாத்திரம் ஜாலியாய் கதையடித்துக்கொண்டிருந்தார்கள் . அவர்களுக்குள் பெரும்பாலான பேச்சுகள் தங்களை எவனெவன் எப்படியெல்லாம் சைட் அடிக்கிறார்கள் என்பதைப்பற்றியே இருந்தது . கண்ணன் கல்லூரிக்கு கிளம்ப இன்னும் ஒருமணிநேரம் ஆகிவிடும் என்பதால் , மதன் அவனில்லாமல் சோலோவாய் அவளை நெருங்கினான் .

‘அப்றம் . எந்த காலேஜ் நீங்கலாம் ?’ என்றவாறே அவளின் தோழிகளைப்பார்த்துக்கேட்டான்  மதன் .

‘டிபிடி ணா . நீங்க ?’ கொஞ்சம் உடல்பூசினாற்போல் அதேநேரம் வழவழவென வாயாடிக்கொண்டிருந்தவள் இவனின் கேள்விக்கு பதிலளித்தவாறே கேள்வியை எழுப்பினாள் .

‘நா சென்ட்ரல் பாலிடெக்னிக் . என்ன டிபார்ட்மென்ட் ?’

‘நாங்க நாலுபேரும் சி.எஸ் , இவ மட்டும் இ.சி.ஈ ’ என்றாள் அவள் . தன் மனதுக்கு பிடித்தவள் , தான் நினைத்தவாறே கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்திருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை .

‘இளம்பிள்ளையா நீங்க ?’

‘ஆமாங்ணா . எப்படி கண்டுபிடிச்சிங்க ?’

‘லென்ஸ் வச்சி கண்டுபிடிச்சேன் .’

‘அண்ணா ! ச்சும்மா ஓட்டாதிங்க .’

‘நீங்க என்ன காரா ? பைக்கா ? ஓட்ரதுக்கு .’

‘ஹலோ ! நாங்க ஓட்டுனா நீங்க தாங்கமாட்டிங்க .’

‘நா ரெடிப்பா . நல்லா ஓட்டுங்க .’

பின் மொக்கையாய் தொடர்ந்த உரையாடல்கள் ஜாலியாய் மாறத்துவங்கியது . மதனிடம் வரிக்குவரி வாயாடியவள் பெயர் மாலினி என்பதும் , ஓரமாய் எலும்புந்தோலுமாய் இருந்தவளின் பெயர் வைதேகி எனவும் , இன்னொருத்தி பெயர் ரம்யா எனவும் தெரிந்துகொண்டான் . பதிலுக்கு இவனின் பெயரையும் அவர்கள் தெரிந்துகொண்டார்கள் . இவர்களின் பேச்சை முயற்சியின்றி கேட்பதுபோலிருந்த அவள் , தன்னிடம் இவன் பேசமாட்டானா என்பதுபோல் சிறிது ஏக்கத்துடன் பார்த்தாள் .

‘அப்றம் மாலினி . உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் பேர சொல்லாம விட்டுட்ட ?’ என்றவாறு அவளின்மேல் தன் பார்வையைத்திருப்பினான் . அவள் முகத்தில் சிறிது வெட்கமும்  , நிறைய ஆவலும் இருந்தது .

‘ஓ இவளா ? இவ பேரு மையல் விழி  .  ’ என்ற மாலினி .

அடுத்தநொடியே

‘ஹலோ ! என் பேரு மதன் . நைஸ் டு மீட் யூ மையல் . உங்க பேரு செமையா இருக்கு ’ என்றான் .

அவள் பதிலேதும் கூறாமல் தலையைக்குனிந்தவாறே சிரிப்பை உதிர்த்தாள் .

‘என்ன உங்க ப்ரெண்ட் பேசமாட்டாங்களா ? பாவம் ஊமை போல ?’

‘சீச்சீ . அப்படியெல்லாம் இல்ல . அவ ஒரு பயந்தாங்கொள்ளி . யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டா . பத்தாததுக்கு நீங்க வேற நேத்து அவள திட்டிவிட்டுட்டிங்க . அதான் ’ என்றாள் மாலினி .

‘ம் . ஹே மாலினி . நீயே சொல்லுப்பா . நீ ஒரு பையனா இருந்து , இவள பாத்து பேசலாம்னு நீ வர . திடீர்னு உன்ன இவ அண்ணானு சொன்னா நீ என்ன செய்வ ?’

‘சப் சப்புனு ரெண்டு அர விட்ருப்பேன்ணா .’

‘அடடா ! நா கொஞ்சம் சாஃப்டா ஹேண்டில் பண்ணிட்டேன் மாலினி . நீ சொல்ற மாதிரி ரெண்டு அர விட்ருக்கனும் ’ என்ற மதனை ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மையல் . அவளின் கண்கள்  ‘விடுவ விடுவ . அது வரைக்கும் என் கை என்ன பூப்பறிச்சிட்டு இருக்குமா ?’ என்பதுபோல் அவனிடம் பேசியது .அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட அனைவரும் இறங்கி பை அண்ணா என்று உதட்டின்மூலம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு சென்றனர் .  மையல் மாத்திரம் ஒருமுறை திரும்பி பை என்பதுபோல தலையசைத்துவிட்டு செல்ல , மதனுக்கு மையல் மேல் காதல்மையல் கொண்டது ..



இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே  அழுத்துங்கள்


Comments

  1. அதுதான் ஆரம்பத்தில் இருந்தே மையல் கொண்டுதானே இருக்கு ,அடுத்து ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !!

      Delete
  2. மையல் ஆச்சா...? தொடர்கிறேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை