தடம் மாற்றிய பண்டிகை - சிறுகதை




செவ்வாயின் நேரப்படி மணி மாலை 4.30ஐத்தொட்டதும் , தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி , புதிதாய்  வாங்கியிருக்கும் தன்னுடைய ஹைட்ராலிக்ஸ் காரினுள் புகுந்தான் சிவராஜன் . காரினுள் இருக்கும் தொடுதிரையில் டார்கெட் எனும்கேள்விக்கு ரெட் மௌன்டைனில் இருக்கும் தன்னுடைய வீட்டினைக் குறிப்பிட்டு ஆட்டோபைலட் மோடில் பறக்க ஆரம்பித்தான் . பூமியில் ஆக்ஸிஜன் உற்பத்திசெய்யும் அவனுடைய நிறுவனம் செவ்வாயிலும் தனது காலடியை எடுத்துவைத்தது . ஏற்கனவே செவ்வாயில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் , செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான தைமஸில் மனிதர்கள் குடியேறத்தேவையான வசதிகளை நிறுவிக்கொண்டிருந்தார்கள் . அதன் ஒரு அங்கமாக அங்கு ஆக்ஸிஜனை உற்பத்திச்செய்து நிலைநிறுத்தும் பணி இவன் வேலைசெய்யும் கம்பனி வாங்கியது . ஏற்கனவே செவ்வாயில் அவன் செய்திருந்த சிறப்பான பணியால் அவனை டீம்ஹெட்டாக மாற்றி , தைமஸிற்கு அனுப்பியிருந்தார்கள் .

இன்னும் பத்து நிமிடங்களில் அந்தகார்  5000 கிலோமீட்டரைக்கடந்து அவனின் வீட்டினைச்சென்றடைந்துவிடும் . நாளை பொங்கல் என்பதால் , டிடிஎச்சில் ரிலிஸாகும் புதுத்திரைப்படத்தின் சந்தாவை காரினுள் இருந்தவாறே ஆன்லைனில் செலுத்தினான் . மேலும் நாளை மறுநாள் சனிகிரகத்திற்குச்செல்லவிருக்கும் குடும்பசுற்றுலாவையும் ஒருமுறை உறுதிசெய்தான் . இந்த இருநாட்கள் குடும்பத்தோடு செலவழிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபடியே பயணத்தைத்தொடர்ந்தான் .நடுவே அவனுக்கு போன் வர , அழைத்தவள் அவன் மனைவி நிலா தான் . அவளின் அழைப்பை ஏற்று , அவளின் முகத்தைப்பார்த்தவாறு பேசினான் .

‘சொல்லுமா .’

‘பொங்கலுக்கு என்ன பிளானுங்க ?’

‘படத்துக்கு புக் பண்ணிருக்கேன் . நாளான்னைக்கு சாட்டர்ன் டூர் . அவ்ளோதான் . உனக்கு ஓகேதான ?’

‘எனக்கு ஓ.கேங்க . ஆனா உங்க அப்பாவுக்கு பூமிக்கு போகனுமாம் ’


‘விடு . நா வரேன் ’ என்றவாறு அவளின் இணைப்பைத்துண்டித்தான் . இவனின் தந்தையின் காலத்துச்சூழல் வேறு , இன்றைய நிலை வேறு . பசித்தால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் காலம் இது . இந்நிலையில் பொங்கல் வைக்க அரிசிக்கு எங்கு போவது ? அப்படியே வாங்கினாலும் ஒரு பருக்கையின் விலை 1 கோடியைத்தொடும் . இதெல்லாம் சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டார் . சாவதற்குள் ஒருமுறையாவது தான்பிறந்த ஊருக்குச்சென்று பொங்கலைக்கொண்டாட வேண்டும் என்று தழுதழுத்தவாறே கூறுவார் .

அவனுக்கு விவரம் தெரியஆரம்பித்த நாட்களிலிருந்தே அவரின் பெரும்பாலான பேச்சுகள் இதையே சுற்றியிருக்கும் . அவர் சிறுவனாக இருந்தபோது பொங்கலைக்கொண்டாடினார்களாம் . அவருக்குத்திருமணம் ஆகும்போது ஓசோன்படலம் முற்றிலும் அழிந்து UVகதிர்களின் தாக்குதலுக்கு பூமி உள்ளானது . UV தாக்குதல் மட்டுமின்றி பூமியின் வெப்பநிலையையும் உயர ஆரம்பித்ததால் நீர்வறட்சி ஏற்பட்டு உணவு உற்பத்தி என்பது அடியோடு அழிந்தது. புறஊதாக்கதிர்களின் தாக்கத்தாலும் , பூமியின் காலநிலைமாற்றத்தாலும் , உணவுத்தட்டுப்பாட்டாலும் பலகோடிக்கணக்கானோர் இறந்தனர். அந்தநிலையில் சிலரின் முயற்சியால் பசி மற்றும் தாகத்தை அழிக்கும் மாத்திரைச் சந்தைக்கு வந்தது . என்னதான் அறிவியல் இருந்தாலும் உணவையும் தண்ணீரையும் மீண்டும் உற்பத்திச்செய்யமுடியவில்லை. எப்படியோ அவர் தன்மனைவியை இழந்தாலும் சிவராஜனை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றினார் . அன்றிலிருந்து ஒவ்வொரு பொங்கலுக்கும் எப்படியாவது பொங்கல் வைக்கவேண்டும் என்பதே அவரின் ஆசை. சிவராஜனுக்கு எப்படித்தெரியும் ? அவனின் தந்தையும் தாயும் முதன்முதலில் சந்தித்தது ஒரு பொங்கலில்தானென்று .

இம்முறை அவன்மனதில் ஏதோ வருத்த , அவருடன் செல்லவிருந்த சனி பயணத்தை கேன்சல் செய்துவிட்டு பூமியை நோக்கிய பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தான் . அவனுடைய கார் செவ்வாயில் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த வளிமண்டலத்தினுள் நுழைந்தது .அடுத்தநிமிடம் அவனுடைய வீட்டை அடைந்தவன் விடுமுறைக்குதுகலத்துடன்  வீட்டினுள் நுழைந்தான் . ஆனால் அங்கே அவன் மனைவி கண்ணீருக்குத்தன் முகத்தைவார்த்திருந்தாள் .

‘என்ன நிலா ஆச்சு ?’


‘மாமா இறந்துட்டாருங்க ’ என்றாள்.அவனால் ஜீரணிக்கமுடியாமல் தந்தையின் அறைக்குச்சென்றான் . உயிரற்ற உடலில் மென்புன்னகையும் நிறைவேறாத ஏக்கமும் அவரின் முகத்தில் தென்பட்டன. மனதைச்சமாதானப்படுத்தியவன் நேரே இன்டர்நெட்டிற்குச்சென்று தன்னுடைய புதுக்காரை விற்றான். அடுத்த ஒருமணி நேரத்தில் பூமியை நோக்கிய பயணத்திற்கு மேலும் இரண்டு டிக்கெட்களும் ஒரு கிலோ அரிசியையும் வாங்குவதற்குரிய கட்டணத்தைச்செலுத்தினான் .



இது ரூபன் மற்றும் யாழ்ப்பாவணன் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு வென்ற சிறுகதை .

Comments

  1. வினோதமான சிந்தனை அருமை நாளைய உலகம் இனி இப்படித்தான் நண்பரே....
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. ரூபன் மற்றும் யாழ்ப்பாவணன் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் கலந்து கொள்வதே பெரிய விசயம். அதில் ஆறுதல் பரிசு வென்றது அதைவிட பெரிய விசயம்..வாழ்த்துக்கள்!! த.ம.1...

    ReplyDelete
  3. sci fi கதை என்றாலும் பாசப் போராட்டம் தானா ?வாழ்த்துகள்:)

    ReplyDelete
  4. எங்கேயோ போயிட்டீங்க...!

    அருமை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை