12 ANGRY MAN - சினிமா விமர்சனம்



ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை , அதன் கதை முதலில் ஸ்ட்ராங்காக இருக்கவேண்டும் ; அடுத்து அதன் திரைக்கதை பரபரப்பாகவும் , புதிதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கவேண்டும் . மூன்றாவது , அதிமுக்கியமானது , அப்படத்தின் இயக்குநரின் பெயரை படம் முடிந்தாலும் தெரிந்துகொண்டு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்குநரின் திறமை முழுதாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும் . ஆனால் , இந்த திரைப்படம் மேற்கூறிய விதிகளில் கடைசிவிதியைத் தவிற மற்ற எதுவும் பொருந்தவே பொருந்தாது . பெரிய கதை ஒன்றுமில்லை ; பரபரப்பான திரைக்கதை கிடையாது , பெரிய டெக்னீஷியன்கள் கிடையாது , ஆனால் இத்திரைப்படம் நம்மை பார்வையளாராக திரைக்கு வெளியில் இருக்கவைக்காமல் , நம்மையும் ஒரு கேரக்டராக மாத்திவிடும் . காரணம் , விவாதம் .

ஒரு இயக்குநரின் திரைப்படங்கள் மொத்தமும் சேர்ந்து 44 ஆஸ்காருக்கு வெவ்வேறு துறைகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா ? அக்கால சூப்பர்ஸ்டார்கள் மர்லன் ப்ரான்டோ , சீன் கானரி , ரிச்சர்ட் சீர் , பால் ந்யூமேன் , மைக்கேல் கெய்ன் போன்றோர்களெல்லாம் விரும்பி விரும்பி நடிக்க நினைத்த இயக்குநரைப்பற்றி தெரியுமா? 1957 –ல் துவங்கிய திரைப்பயணத்தில் 2007 வரை ஏறத்தாழ ஐம்பதாண்டுகாலம் திரைத்துறையில் நீடித்து , நிழைத்து சாதனை புரிந்த இயக்குநரைப்பற்றி தெரியுமா ? வேறு யார் ? இப்படத்தின் இயக்குநர் சிட்னி லும்மேட் தான் . 

இப்படிப்பட்ட இயக்குநரைப்பற்றி தமிழில்சரிவர யாரும் எழுதவில்லை என்ற ஆதங்கம் இன்றும் உள்ளது . இவரின் NETWORK திரைப்படம் 10 ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு 4 விருதினை வென்றது .  ஃபோர்ட் கொப்பல்லோ , ஸ்கார்சேசே  , ஹிட்ஜ்ஹாக் , குப்ரிக் , ஸ்பில்பெர்க் எனக்கொண்டாடிக்கொண்டிருக்கும் பல இயக்குநர்களுக்கு மத்தியில் இவரையும் கண்டிப்பாக கொண்டாட வேண்டியது அவசியம் . ஆனால் ஏனோ தமிழ் பதிவர் சமூகம் இவரை சரிவர கவனிக்கவில்லை என நினைக்கிறேன் .

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த பின் தன் 15 வது வயதில் ஒரு திரைப்படத்தில் டீனேஜ் மாணவனாக நடித்தார் . இரண்டாம் உலகப்போரில் கட்டாய பணிபுரிந்தபின் , இந்தியாவில் ரேடார் ஸ்டேசன் ரிப்பேர்மேனாக பணியில் இருந்தார் . பின் டெலிவிசன்களை நோக்கி தன் பார்வையை திருப்பிய லும்மேட்  1950 –லிருந்து சின்னத்திரை இயக்குநராக ஜொலிக்க ஆரம்பித்தார் . 1957 ல் தன் நண்பரும் திரைக்கதை ஆசிரியருமான ரெஜினால்ட் ரோஸின் கதை , திரைக்கதையை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது . ஏற்கனவே ஹென்றி ஃபோன்டாவைச் சந்தித்து தன் திரைக்கதையைக் கொடுத்து புக் செய்த பின் , இயக்குவதற்கு ஆள் தேடியபோது மாட்டியவர்தான் லும்மேட் . தயாரிப்பாளர் யாருமில்லாமல் போக ரோசும் , ஹீரோ ஹென்றியும் இணைந்து படத்தினைத் தயாரித்தார்கள் .

படத்தின் கதை ? ஏற்கனவே பல விமர்சனங்களில் கதையை நீங்கள் படித்திருக்கலாம் . படிக்காதவர்கள் தொடரவும் . ஏனென்றால் எல்லோரும் கதை என்று எதை எழுதினார்களோ அதையே தான் நானும் எழுதப்போகிறேன் .  அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில்  ஒரு கொலைவழக்கு சம்பந்தமான விசாரனை நடைபெறுகிறது . அதில் சேரியைச் சார்ந்த ஒரு 18 வயது பையன் மேல் தந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுகிறது . அவனுக்கு ஆதரவாக வாதாட அரசு நிர்ணயித்த வழக்குரைஞர் எதுவும் வாதாடவில்லை . குற்றத்தின் சாரல் அந்த பையனை நோக்கியே வீசுகிறது . நிற்க , இங்கு குற்றம் சாட்டப்பட்டவரின் மேல் குற்றம் நிருபணமானால் உடனே நீதிபதி அடுத்தவாரம் தீர்ப்பு என்று தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது . வழக்குக்கு சம்பந்தமில்லாத அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்களில் 12 பேருக்கு கடிதம்  அனுப்பி , அவர்களை கோர்ட் விசாரணையை  மேற்பார்வையிடச் செய்து , அக்குற்றம் சுமத்தப்பட்டவன் தவறு செய்திருப்பானா ? இல்லையா ? என 12 பேரும் கூடி விவாதித்து ஒருமித்தமாக இறுதி அறிவிப்பை நீதிபதியிடம் அனுப்பியபின்னர் தான் நீதிபதி தீர்ப்பளிக்க முடியும் . இச்சட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளதா எனத் தெரியவில்லை .ஒருவேளை இருக்கும் பட்சத்தில நம்  அரசியலமைப்பு வரைவுக்குழு இப்படி ஒரு அட்டகாசமான சட்டத்தை கவ்விக்கொண்டு வராதது கண்டிக்கத்தக்கது . அடிப்படை உரிமைகள் , நீதிமன்றம் தொடர்பான அமெரிக்க சட்டங்களை இந்தியாவிற்கு நடைமுறைப்படுத்திய போது  இதனையும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் .

சரி , 1949 விஷயத்தை ஓரங்கட்டிவிட்டு 1957 –க்கு வருவோம் . புரியலையா ? இப்படம் வெளியான ஆண்டு 1957 . இப்போது மேலே கூறனேன் அல்லவா ? நீதிமன்றம் , குற்றவாளி , 12 பேர் , வழக்கு விசாரனை என்றெல்லாம் , அவையனைத்தும் மூன்று நிமிடங்களுல் படத்தில் காட்டப்பட்டு விடுகின்றது . மீதி ? எல்லாம் அந்த பன்னிருவரின் ஆவேசமான , மதிகூர்ந்த விவாதங்கள் தான் . 

Comments

  1. அந்த சட்டம் இங்கு இருந்தது.. ஆளவந்தார் கொலை வழக்கில் தேவகி அதனால்தான் குறைந்த தண்டனை பெற்றார்

    ReplyDelete
  2. விவாதமே வித்தியாசமாகத் தான் இருக்கிறது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்