பாகுபலி – சினிமா விமர்சனம்





வெல் , ராஜமௌலியைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை . ட்ரைலர் வந்த நாள்முதல் எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் ராஜமௌலியும் அவரின் பாகுபலியும் தான் இணையத்தில் உலவிக்கொண்டிருந்தன . அவரின் ஸ்டூடன்ட் நம்பர் ஒன் முதல்  நான் ஈ வரை அனைத்துப்படங்களைப் பற்றியும் ஒரு சிறிய தொடர்பதிவு எழுதிவிடலாம் என்று எவ்வளவோ முயற்சித்தும் எழுதமுடியாமல் போய்விட்டது . இருக்கட்டும் ; இன்னும் பாகுபலியின் இரண்டாம் பாகம் வேறு அடுத்த ஆண்டு வெளிவரப்போகிறது . அச்சமயத்தில் மொத்தமாக எழுதிவிடுகிறேன் .

நான் முதன்முதலில் பார்த்த தெலுங்கு படம் ராஜமௌலியின் விக்ரமார்க்குடு தான் .  படம் பார்த்து முடித்ததும் தோன்றிய விஷயம் , ரவிதேஜா பின்னிருக்காரு என்பதுதான் . பரவாயில்லையே ! ஆந்திரவாலாக்கள் கூட கிராபிக்ஸ் எல்லாம் பட்டைத்தீட்டி எடுத்திருக்கிறார்களே என்று சிறிது ஆச்சரியமடைந்த திரைப்படம் . ஏனெனில் அதற்குமுன் வரை பாலகிருஷ்ணாவின் சில படங்களையும் , சிரஞ்சீவியின் சில  படங்களையும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்ஸில் தமிழ் டப்பிங்கில் பார்த்ததோடு சரி . அதன்பின் ஒரு ஆந்திரப்பெண்ணைக் காதலித்து , அவளுக்குத் தமிழ் தெரியாமல் போய்விட , எனக்குத் தமிழைத்தவிர எதுவும் தெரியாமல் போய்விட , அரைகுறை ஆங்கிலத்தில் நடந்த இஸ், பிஸ் பேச்சுவார்த்தைகள் சரிவராத காரணத்தால் தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன் . அதனைத் தொடர்ந்து பாரிஸ் கார்னரில் ஒரே தெலுங்கு படமாக வாங்கித்தள்ளினேன் . ஒரு கட்டத்தில் சப்டைட்டில் இல்லாமலே தெலுங்கு புரிந்து கொள்ள முடிந்தது . அச்சமயத்தில் தான் விக்ரமார்க்குடு திரைப்படத்தை எனக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரின்  வேண்டுகோளுக்கிணங்க மரியாத ராமண்ணா  திரைப்படத்திற்கு சென்றேன் . அப்படத்தின் ஹீரோ சுனில் , சப்பை சப்பையான வேடத்தில் , பல படங்களில் நான் பார்த்திருந்ததாலும் , படத்தின் போஸ்டர்கள் என்னைக் கவர்ந்திழுக்கும்படியாக இல்லாததாலும் ச்சும்மா உள்ளே சென்று அமர்ந்தேன். ஆனால் அன்றைக்கு காசினோவில் செம  கூட்டம் . உத்யோகம் ஓடிப்போயிந்தி பாடல் வந்ததும் தியேட்டரில் இருந்த பாதி பேர் திரையில் ஏறி ஆட்டம் ஆடிகொண்டிருந்தனர் . அருகில் என்னை அழைத்துவந்தவரிடம் கேட்டேன் .

‘ஏன்ணா ! இந்த ஹீரோவுக்கு இவ்ளோ மாஸ்சா ? இவரு காமெடி ஆக்டர் தான ?’

‘மாஸ் , ஹீரோவுக்கு இல்ல தம்பி . டைரக்டருக்கு’ என்று அவர் கூறிய பின் தான் ராஜமௌலி எனக்கு அறிமுகம் . அதைத்தொடர்ந்து ஸ்டூடன்ட் நம்பர் ஒன் லிருந்து மகதீரா வரை அனைத்துப்படங்களையும் ஒவ்வொரு கடையாக தேடிப்பிடித்து வாங்கிப் பார்த்தெல்லாம் தனிக்கதை . இதுவரை ஒரு ப்ளாப்  , ஏன் ஆவரேஜ் என்ற ரீதியில்  கூட கொடுக்காமல் எல்லாம் சூப்பர்ஹிட் கொடுத்த ஒரே இயக்குநர் ராஜமௌலி தான் . எப்படியாவது சினிமாவில் வென்றுவிடவேண்டும் என்று தவித்த ராஜமௌலிக்கு என்.டி.ஆர் கைகொடுக்க , என்.டி.ஆருக்கு மூன்று மெகா ப்ளாக்பஸ்டர்களை பரிசாக கொடுத்தவர் . மகதீரா , ஆந்திராவின் சென்சேஷனல் ஹிட் படங்களின் வரிசையில் முதலிடம் . ஈகா தெலுங்கு மாத்திரமல்லாமல் தமிழ் , கன்னடம் ஏன் ஹிந்தியில் கூட கலெக்சனை தந்தத் திரைப்படம் . ஒரு பழுத்த வேலைநாளில் எங்கள் ஊரிலுள்ள தியேட்டரில் மதியக்காட்சிக்கு ஹவுஸ்புல் ஆகி நான் பார்த்த முதல் திரைப்படம் நான் ஈ தான் .

பாகுபலி , கிட்டத்தட்ட ராஜமௌலியின் கனவுத் திரைப்படம் என்றே சொல்லலாம் . மரியாத ராமண்ணா திரைப்படத்தைத் தயாரித்த அர்கா நிறுவனம் , பாகுபலி தயாரிப்பில் மும்முரம் காட்டியது ஆச்சரியப்படத் தேவையில்லாத விஷயங்களில் ஒன்று . இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் . முதல்முறையாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இருபாகங்களைக் கொண்ட திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் . மூன்று ஆண்டுகால உழைப்பு . ஜிம் பயிற்சியாளரிலிருந்து VFX வரை மிகப்பெரும் ஆளுமைகள் பணிபுரிந்துள்ள திரைப்படம் . எப்படி இருக்கும் ?

நான் இத்திரைப்படத்திற்கு செல்லும் முன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சென்றேன் ; அப்படிச்சொல்வதைக் காட்டிலும் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு சென்றேன் . ட்ரைலரைப் பார்க்கும் போது BC 10000 , கோச்சடையான் , கிளாடியேட்டர் , EXODUS , LOTR , 300 என்று நான் பார்த்திருந்த அத்தனை பேன்டசி , ஹிஸ்டரிக்கல் படங்களும் மனதில் ஓடின. எங்கே இவரும் அந்த படங்களைப் போல எடுத்துவைத்து இருப்பாரோ என்ற பயமல்ல ; இத்தனை நாட்கள் கட்டிக்காப்பாற்றிய பெயரை , முகநூலில் போட்டு நாரடித்துவிடுவார்களே என்று தான் பயம் . அதுமட்டுமின்றி , இது முதல் பாகம் என்பதால் , என் எதிர்பார்ப்பு எல்லாம் இரண்டாம் பாகத்தை நோக்கியே இருந்தது எனலாம் .

சரி , படத்தின் கதைக்கு வருவோம் . துவக்க காட்சியில் ரம்யாகிருஷ்ணன் ஒரு குழந்தையை கையிலேந்தியபடியே , ட்ரைலரில் அந்த மிகப்பெரும் நீர்வீழ்ச்சியினடியில் வருகிறார் . அவரைக் கொல்ல இரு வீரர்கள் வருகின்றார்கள் . அவர்களைக் கொன்று விட்டு நதியில் குழந்தையுடன் விழுந்துவிடுகிறார் . ஆற்றில் குழந்தையை கையில் தூக்கிப்பிடித்த படியே செல்லும் அவரைக் காப்பாற்ற அங்கு வாழும் மலைவாசிகள் முயல்கின்றனர். ஆனால் குழந்தையை அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்நீர்வீழ்ச்சி விழும் மலையின் திசையினை கைகாட்டிவிட்டு ஆற்றோடு போய்விடுகிறார் . அக்குழந்தையை அம்மலைவாசிகளின் தலைவி போன்றொருத்தி எடுத்து வளர்க்கின்றாள் . அக்குழந்தைக்கு வளர வளர அந்நீர்வீழ்ச்சிக்கு அந்தபக்கம் என்ன இருக்கும் என்று காண ஆசை . அதற்காக அந்நீர்வீழ்ச்சியில் ஏற பலமுறை முயற்சிக்கிறான் . ஆனால் முடியவில்லை  . ஒருமுறை ஒரு பெண்ணின் முகமுடி நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகிறது . அந்த முகமுடியைப் பார்த்ததும் காந்தர்வ காதல் கொள்ளும் ஹீரோ , அவளைப் பார்ப்பதற்காக முயற்சித்து அந்நீர்வீழ்ச்சியை ஏறி கடக்கிறார் . அங்கு அவளைச் சந்திக்கிறார். ஆனால் அவள் (தமன்னா) ஒரு புரட்சிப்படையில் மறைமுகமாக இருப்பதை அறிகின்றான் . அதன்பின் அவளை அப்படி இப்படி என்று கரெக்ட் செய்துவிடுகிறார் . அவள் இருக்கும் புரட்சிப்படையில் அவளுக்கு ஒரு கட்டளைக் கிடைக்கிறது . அதாவது மகிழ்பதி எனும் பேரரசில் , 25 வருடங்களாக கொடுமைப் படுத்தப்பட்டு வரும் தேவசேனா (அனுஷ்கா) என்பவரைக் காப்பாற்ற வேண்டும் . ஹீரோ , தமன்னாவிற்கு பதில் தானே மீட்டு வருவதாக அங்கு செல்கிறார் . அந்நாட்டின் அரசன் பல்வாள்தேவன் (ரானா டகுபாட்டி) , அவன் தந்தை பெல்லால தேவன் (நாசர்) போன்றோர் நாட்டு மக்களை படுபயங்கரமாக கொடுமைப் படுத்துகிறார்கள் . அங்கிருந்து தேவசேனாவைக் காப்பாற்றி வருவதற்குள் ஹீரோவைப் பார்ப்பவர்கெல்லாம் பாகுபலி என்று கூறி ஆச்சரியப்பட , ஒரு கட்டத்தில் ராணா வின் மகனைப் போட்டுத்தள்ளுகிறார் ஹீரோ . அப்போது அதைத் தடுக்கவரும் ராணாவின் அடிமையும் மாவீரனும் ஆன சத்யராஜும் பிரபாசைக் கண்டு மிரள்கிறார் . அதன்பின் சத்யராஜ் சொல்ல ப்ளாஷ்பேக் ஆரம்பமாகிறது . எச்சரிக்கை – இது முதல் பாகம் என்பதால் பாதி ப்ளாஷ்பேக் தான் வரும் . இதற்குமேல் எழுதினால் ராஜ்மௌலி என் சட்டையைப் பிடித்து மண்டையில் கொட்டுவார் . அவருக்குத் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியுமாம் .

பிரபாஸ் – ராஜமௌலி எதுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் இவரை ஹீரோவாக போடனும் ? பேசாம இந்தில ஷாருக் மாதிரியான ஆட்களிடம் கால்ஷீட் வாங்கி எடுத்திருந்தால் இன்னும் பெரிய பிஸ்னஸ் ஆகியிருக்கும் என்று என் நண்பர் வருத்தப்பட்டார் . படத்தில் பிரபாஸ் சிவலிங்கத்தைத் தூக்கிக்கொண்டு செல்லும் அந்த காட்சி சொல்லும் எதற்காக என்று ! மனிதர் உழைப்பை  தாறுமாறாக போட்டுள்ளார் என்பது அவர் வரும் ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது . அப்பாவியான சிவாவாகவும் , அமரேந்திர பாகுபலியாகவும் இருவேறு பரிமாணங்களையும் மிகச்சிறப்பாக செய்துள்ளார் .

ராணா – யப்பா ! மனுஷனா இவன் . இது நான் சொல்லலைங்க . என் பக்கத்துல படம் பாத்துட்ருந்த ரெண்டு பேர் ராணாவோட இன்ட்ரோ வரும்போது சொன்னது . இரண்டாம் பாதியில் பிட்டாக வரும் ராணாவையும் முதல் பாதியில் வயதான பல்வாள்தேவனாக வரும் ராணாவையும் பார்த்து ஆச்சரியாமாக இருக்கிறது . படுபயங்கர உழைப்பு . இப்படத்தின் பெஸ்ட் இன்ட்ரோ சீன் என்றால் அது இவருடையது தான் . தாக்க வரும் காட்டெருமையை போட்டு பந்தாடிக்கொண்டே இன்ட்ரோ ஆகிறார் .

சத்யராஜ் – கட்டப்பனாக வரும் சத்யராஜைப் பற்றி மேலே குறிப்பிடாததற்கு ஒரு காரணம் உள்ளது . பாகுபலி திரைப்படத்தில் எனக்கு மிக மிக பிடித்த கேரக்டர் என்றால் அது கட்டப்பன் தான் . கட்டப்பனாக சத்யராஜ் வெளுத்து வாங்கியுள்ளார் . வெள்ளைத்தாடியைத் தவிர்த்து ஒவ்வொரு காட்சியிலும் மனிதர் இன்றைய ஹீரோக்களுக்கு சவால் விடுமளவுக்கு சண்டையில் சுழட்டி அடித்துள்ளார் . சீனியர் – ஜூனியர் வித்தியாசம் பார்க்காமல் ப்ரபாஸின் காலை , தன் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும் இடமெல்லாம் ஆச்சரியம் தான் . கடைசியில் இவர் வைத்த ஒரு ட்விஸ்டான வசனம் அடுத்த பாகத்திற்கான ஹைப்பை ஏற்றிவிட்டு , நம்முடைய கற்பனைக் குதிரைகளையும் அவிழ்த்துவிட்டது எனலாம் . கலக்கிட்டாரு .

தமன்னா – வெகு நாட்களுக்குப் பின் தமன்னாவிற்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கிய திரைப்படம் . பழிவாங்கும் உணர்ச்சியும் , காதல் பரிதவிப்புமென நன்றாக செய்துள்ளார் . பச்சைத் தீ பாடலில் வரும் டாப்லெஸ் உண்மையா ?

அனுஷ்கா – முதல்பாகத்தில் பெரிய ஸ்கோப் இல்லை . முழுக்க முழுக்க அனுஷ்காவின் சாகசமெல்லாம் இரண்டாம் பாகத்தில் தான் . ஒரே ஒரு இடத்தில் அனுஷ்கா நடிப்பில் செம ஸ்கோப் செய்துள்ளார் . கட்டப்பன் , தேவசேனாவிடம்  வந்து விடுதலை செய்ய உத்தரவிடுமாறு கெஞ்சும்போது திரும்பி அனுஷ்கா பேசும் வசனங்கள் செம.

ரம்யா கிருஷ்ணன் – நீலாம்பரி வேடத்திற்குப்பின் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்த மற்றொரு அரிய வேடம் இப்படத்தின் சிவகாமி தான் . கெத்தான பெண்ணாக அறிமுகமாகி , அந்த கெத்தினை கடைசி வரை கெத்தாகவே மெய்ன்டெய்ன் செய்திருக்கிறார் . இருள் கொண்ட வானில் பாடலும் , அப்போது வரும் காட்சிகளும் அட்டகாசம் . தன்னைக் கொல்ல வருபவனை , கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சட்டென்று போட்டுத்தள்ளும் போது நமக்கே ஒரு நிமிடம் ஆச்சரியம் வருகிறது . அப்படியே ஒரு வீரப்பெண்மணியைக் காட்டியுள்ளார் ரம்யா .

நாசர் – பிங்காலத்தேவனாக நாசர் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு நடித்துள்ளார் . ராணாவை மன்னனாக்க இவர் செய்யும் தகிடுதத்தங்களும் போர்காட்சியின்போது இவரின் முகபாவமும் செம .

இவர்கள் மட்டுமின்றி ஆங்காங்கே சில பல ஆந்திர நடிகர்கள் வந்து போகிறார்கள் . மரகதமணி இசையில் ஏற்கனவே எனக்கு அனைத்துப் பாடல்களும் பிடித்திருந்தன . குறிப்பாக சிவாய போற்றி , மனோகரி , இருள்கொண்ட வானில்  போன்ற பாடல்கள் வழக்கம்போல அவரின் கிளாஸிக் . தீரனே பாடலும் , பச்சைத் தீ , மகிழ்நதி பாடலும் சுமார் தான் என்றாலும் விஷுவலோடு பார்க்கும் போது அட்டகாசம் . பிண்ணனி இசையில் முதல்பாதி சுமாராக இருந்தாலும் , இரண்டாம்பாதியில் கலக்கி எடுத்திருக்கிறார் . ஆமாம் , இவருடைய பெயர் தெலுங்கில் MM கீரவாணி தானே ! தமிழுக்கென்று மரகதமணி என்று வருகிறதா ? ஒன்றும் புரியவில்லை .

செந்தில்குமாரின் ரிச்சான ஒளிப்பதிவு அட்டகாசமாக , நம் கண்களை உறுத்தாத வகையில் , சரியான கலரைசேசனுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளது . ஹேட்ஸ் ஆஃப் செந்தில்ஜீ . எடிட்டிங் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் . ஒரு காட்சி கூட தேவையில்லை என்று சொல்லமுடியாது ; அந்தளவு சரிவிகிதமாய் கத்திரியைப் போட்டுள்ளார் . சாபுசிரிலின் ஆர்ட் டைரக்சில் பல காட்சிகளில் எது கிராபிக்ஸ் , எது செட் , எது ரியல் என்று கண்டுபிடிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்க  வேண்டியுள்ளது . சி.ஜியெல்லாம் மிரட்டி உள்ளார்கள் . ஆங்காங்கே மகதீராவின் தாக்கம் இருப்பது மட்டும் மைனஸ் . பனிச்சரிவு காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டுள்ளதோ என்று நினைக்கத் தோன்றியது . ஆனால் கடைசி போர்க்காட்சிகளெல்லாம் அட்டகாசம் .



மொத்தத்தில் இது இந்தியாவின் 300 , LORD OF THE RINGS  எனலாம் . ஏன் , திரைக்கதையில் மேற்கூறிய ஆங்கிலப்படங்களை விஞ்சி ஒரு படி மேலே நிற்கிறது . இது அக்மார்க் ராஜமௌலி திரைப்படம் . தான் எப்போதும் திரைக்கதையில் செம ஸ்ட்ராங்க் என்பதை இம்முறையும் சீல் அடித்துச் சொல்லிவிட்டார் . 

Comments

  1. அமர்க்களமான படம் என்பதை உங்களின் ரசனை சொல்கிறது... நன்றி... இனிமேல் தான் பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  2. ungaloda vimarsanamthaan first padichen.




    thank u so much!!!


    inga padam paarthittu palar nallaa illainu sonnappo katuppaayitten.

    telungu kaaranukkellam rasanaiye irukkathanu ninaikkuren.



    ticket 1000rupa enpathal 3 allathu 4 nadkal kalithu sellalam vitten.

    ivvalvu nal wait senjachu innum oru 3 nal taananu vittiten.


    ReplyDelete
    Replies
    1. 1000 ம்ஹா!!! ஆத்தாடி . அண்ணே ! ஒருவாரம் கழிச்சே பாருங்ணே . எப்படியும் அங்கலாம் 3 மாசம் ஓடும் . படம் நல்லா இல்லைனு சிலர் கிளப்புவாங்க . காரணம் 1000 ரூபா கொடுத்துட்டு போனா ஜேம்ஸ் கேமரூனே எடுத்திருந்தாலும் சப்பையா தான் தெரியும் . நா 100 ரூபா டிக்கெட்ல பார்த்ததால ரொம்ப பிடிச்சிருந்துச்சி .

      Delete
  3. Finally, it seems like Baahubali is going to break the BO collection of "enthiran"! I see only positive reviews for this movie! WOM is very good too! Let us see ..

    ReplyDelete
    Replies
    1. அது கன்பார்ம் தாங்க தல . ஒரு படத்தோட ரெக்கார்ட் ப்ரேக்குங்ரது அடுத்து வர்ர படம் உடைக்கத்தான .

      Delete
  4. படிச்சுட்டேன்
    வாக்கும் கொடுத்துட்டேன்...

    ReplyDelete
  5. விமர்சனம் நன்று

    ReplyDelete
  6. நல்லா எழுதி இருக்கீங்க மேக்னேஷ் . ரசிச்சி அனுபவச்சி எழுதின விமர்சனம் என்று ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.

    ReplyDelete
  7. வலைச் சரத்தின் மூலம் இப்பதிவுக்கு வந்தேன் . இதுவரை இந்த தளத்துக்கு வந்தது இல்லை. சினிமாவில் எல்லாம் அக்கறை இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்தியேட்டரில் சினிமா பார்த்து ஆண்டுகளாகி விட்டன. படிக்கும் போது ரசித்து எழுதுகிறீர்களென்று தோன்றுகிறது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. This is children and tennagers film.

    ReplyDelete
  9. You write well Megnesh sir. I used to read your reviews. I also watched the movie, and I liked it!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை