பயணம் @ டைம் மெஷின் - 4
பயணம் @ டைம்மெஷின்-1ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்
அத்தியாயம் -3
கி.மு. 2-ம் நூற்றாண்டு
பகுதி-2
காஞ்சிபுரம்
இருட்டின் பிடியில் , மெல்ல மெல்ல சிக்கிக்கொண்டிருந்த அவ்வூரை அடைந்ததும்
,பாலாவும் , சந்துருவும் தங்களின் வேகத்தை துரிதப்படுத்தினர் .அவர்களின் கால்களை சுமந்து
, அவர்களின் பயணத்திற்கு பாதையை காட்டியது அந்த மண்சாலை . அச்சாலையை ஒட்டிய இருபுறமும்
,பனைஓலையில் வேயப்பட்ட குடிசைகள் தென்பட ஆரம்பித்தன.. மிக நேர்த்தியாக , ஒரு பனங்கீற்றுக்கூட
தெரியாத அளவிற்கு குடிசைகள் தென்பட்டன . பத்து, பதினைந்து குடிசைகளுக்கு இடையே ஆங்காங்கே
, களிமண்ணை , கருங்கல்லுடன் புனைந்து கட்டப்பட்ட மாளிகைகள் , தங்களின் ஒற்றை அடுக்கை மிகமிடுக்காக காட்டிக்கொண்டிருந்தன.
பெரும்பாலான வீடுகள் , திண்ணையை உரிமையாகபெற்றிருந்தன
.குடிசைகளுக்கும் , மாளிகைகளுக்கும் உள்ளே ,
சில குடும்பத்தலைவிகள் சமையலில் கண்ணும் கருத்துமாய் இருக்க, சிலரோ வீட்டைக்கூட்டியபடி இருந்தனர். அனைவரின்
வீடுகளிலும் சற்றுநேரத்திற்குமுன் , லட்சுமிதேவியை வரவேற்பதற்காக ஏற்றிய விளக்கெண்ணெய்
விளக்குகள் , தன் தீச்சுடரின் ஒளியால் , அவ்வீட்டின்கண் இருப்பவரை , இருளின்பிடியிலிருந்து
காத்து, அரவணைத்துக்கொண்டிருந்தது. அவ்வீடுகளின்
கதவினுக்கருகில் வயதான பெண்மணிகள் , நெல்புடைக்கும் முரத்தினால் நெல்லிலிருந்து கல் ,குருடுகளை நீக்கியபடி இருக்க , வயதான ஆண்கள்
, திண்ணையில் அமர்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். ஒருசில வீடுகளில் , தம்
கணவன்மார் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்துடன் வாசலில் அமர்ந்து தம் மன்னவன் வரவை
எதிர்நோக்கி சில பெண்மணிகள் காத்திருந்தனர். அந்த தெருவின் வழியே சிலர் கலப்பை சகிதமாக
, கழைப்புடன் சேறுதின்ற உடல் கணக்காய் , தத்தம்
வீட்டிற்கு செல்லும் முனைப்புடன் காணப்படிருந்தனர்.
ஒருசிலர் மாடுகளை ஓட்டியபடி செல்ல , இன்னும் சிலர் முகத்தில் சந்தோஷத்துட்டன் கையில்
மல்லிகை சரத்தை எடுத்துக்கொண்டு , தன் புதுதாரத்தின் தலையில் சூடுவதற்காக ஆர்வத்துடன்
சென்று கொண்டிருந்தனர். அந்த குறுகிய சாலை
, உள்ளே செல்ல செல்ல விரிவடைந்து கொண்டே சென்றது. கூடவே மாடமாளிகைகளின் எண்ணிகையும்
அதிகரித்துக்கொண்டே சென்றது.
சாலையில் வாலிப
இளைஞர்கள் தன் ஆண்மைத்தனத்தை நிருபிக்கும் பொருட்டு சிலம்பாட்டத்தில் ஒன்றிபோயிருந்தனர்.
அவர்களைச்சுற்றி ஊக்குவித்துக்கொண்டிருந்த நண்பர்களின் வார்த்தைகளை கவனிக்காமல் , கூட்டத்திற்கு
அப்பால் செல்லும் தன் காதலிகளை , கண்ணில் வலை வீசித்தேடிக்கொண்டிருந்தனர். இளம்பெண்களோ
, நேர்த்தியான சேலையுடன் மிடுக்கான மார்பகங்களை முழுதும் மறைத்து , கண்களில் கனிவு கரைபுரண்டோடிட , வெட்கத்திற்கு
முகத்தை வார்த்துவிட்டு ஆற்றின் நீரை பானையில் மோந்து , கொடியிடையினுனுள் பொருத்தி
ஊர்க்கதை பேசியவாறே சிரித்துக்கொண்டு சென்றனர். அவர்களை உற்றுநோக்கினால் , அவர்கள்
ஊர்க்கதை ஆர்வமெல்லாம் வெளியுலகிற்காக என்பது புரியும். ஒவ்வொருத்தியும் , தங்கள் மாமன்மகனோ
, அத்தைமகனோ அல்ல காதல்மகனோ சுழற்றும் சிலம்பத்தை கண்டு அவன் பார்வையை பார்க்கத்தடுமாறி
, வெட்கத்தில் மிதந்து மீண்டும் கண்களாகிய உதடுகளினால் ஆற்றங்கரைக்கோ , மலர்வனத்திற்கோ
வருமாறு யாருக்கும் கேட்கவண்ணம் கூறிவிட்டு சென்றுகொண்டிருந்தனர். தன் காதலி தன்னைப்பார்ப்பதாலயோ என்னவோ , இளைஞர்கள்
அனைவரும் மேலும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் சிலம்பைக்கொண்டு வித்தைக்காட்டினர்.
சின்னஞ்சிறு பொடியர்கள்
, ஆங்காங்கே பத்துபத்து பேராக , சடுகுடு ஆட்டத்தில் ஓடுவதும் விழுந்தெழுந்து , போர்க்களத்திற்கு செல்லும் மாவீரன்போல் பாய்வதுமாக
இருந்தனர். சின்னஞ்சிறு பெண்பிள்ளைகள் , நொண்டி ஆட , அவர்களைச்சுற்றி சில பெண்பிள்ளைகள்
தங்களின் தம்பியையோ , தங்கையையோ இடுப்பில் சுமந்தவாறு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தனர்.
அவ்வூரின் உள்ளே
செல்ல செல்ல , ஒரு நகரத்தின் பரிணாமம் , அவர்களிருவரையும் வரவேற்று நின்றது. உள்ளே
, பெரும்பாலான வீடுகள் மாளிகைகள். பெண்கள் அனைவரும் , தங்க ஆரபணங்கள் அணிந்த தங்கமாய்
மின்னிக்கொண்டிருந்தனர். ஆண்களோ , மிடுக்குடன் திரிந்து கொண்டிருந்தனர். அங்கு கூட்டம் அலைமோதியது. நியமம் என்று அன்றழைத்த
கடைத்தெரு அது. அங்கிருக்கும் சந்தையை , அன்றைய மக்கள் அங்காடி என்று அழைத்தனர் . நாளங்காடி எனும் பகல் பொழுது கடைகள் மூடுவதற்கு ஆயத்தமாக
இருக்க , அல்லங்காடி எனும் இரவு நேரக்கடைகள்
திறக்கவும் ஆரம்பித்திருந்தன. அக்கடைகளின் ஊடே உணவுப்பொருட்கள் தாண்டி எண்ணற்ற பொருட்கள்
இருந்தன. மக்கள் , தம்மிடம் இருக்கும் நெல்லை
குடுத்து , துவரையை வாங்கியபடியும் , கேழ்வரகு மூட்டையை கொடுத்து துணியையும் வாங்கிய
வண்ணம் இருந்தனர். ஒவ்வொரு அங்காடியினிலும்
ஒரு விதப்பொருள் பெறப்பட்டு, பதிலாய் மற்றொரு பொருள் பெற்றுக்கொண்டு சென்றனர் .இப்பண்டமாற்று
முறையை வியப்புடன் பார்த்துக்கொண்டே வந்த பாலாவையும் , சந்துருவையும் தடுத்து நிறுத்தினான்
, அரேபியக்குதிரையின் மேல் திடகாத்திரமாக இருந்த அவ்விளைஞன்.
‘யார் நீங்கள்
? எங்கிருந்து வருகிறீர்கள் ?’
‘நாங்க ரெண்டு
பேரும் நண்பர்கள் . நாங்க மயிலாப்பூர்ல இருந்து வரோம் ’
‘மயிலாப்பூர் என்றால்
வடநாடா ?’
‘ஆமாங்க ’
‘அப்படியாயின்
நீங்கள் இருவரும் வடநாட்டு ஒற்றர்களா ? வேவு பார்க்க , சென்னிவளவன் ஆளும் தொண்டை மண்டலத்திற்கு
வந்திருக்கிறீர்களா ?’
என்று கோவத்துடன்
கேட்டவாறே , தன் இடுப்பை ஒட்டி இருக்கும் உறையினுள் உறங்கிக்கொண்டிருந்த வாளை எடுத்தான்
.
‘நாங்க ஒற்றர்கள்
இல்லைங்க .நாங்க சோழ அரசர பாக்க வந்தோம் . வழியில இங்க தங்கிட்டு போக வந்தோம்’-என்ற
பயமுற்றிய குரலுக்கு சொந்தக்காரன் சந்துரு.
‘உங்களை எவ்வாறு
நம்புவது?’
‘வேனும்ணா இந்த
மூட்டையில இருக்க ஓலைச்சுவடிகள படிச்சு பாருங்க . இத காமிச்சு , சோழ ராசாகிட்ட பரிசு
வாங்க தான் வந்தோம்’
தம் மூட்டையில்
இருக்கும் ஓலைச்சுவடிகளை அவனிடத்தில் தந்தான் சந்துரு. அதை வாங்கிப்படித்த அந்த காவலன்
, ஒன்றும் புரியாத காரணத்தால்
‘சரி சரி செல்லுங்கள்
.ஆமாம் கழுத்தில் என்ன அது?’
‘ கோல்ட் செயினுங்க’
‘அதை எடு . பார்க்கலாம்
’
சந்துரு தன் செயினை
கழட்டி அவனிடத்தில் கொடுத்தான் . அந்த செயினில் இருந்த முருகன் டாலரை பார்த்த காவலன்
,
‘அற்புதம் . சேயோனின்
உருவம் .நீங்கள் சித்தர் போகரின் சீடர்களா ? ‘
‘ஆமாங்க’
அந்த சூழலில் எது
கேட்டிருந்தாலும் அவர்களின் பதில் , இதுவாகத்தான் இருக்கும் .
‘குன்றின்வேந்தன்
சேயோனின் திருக்கோவில் வேலை பழனியில் நடைபெறுவதாக அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்
. நானும் குறிஞ்சிநில மாந்தன் தான் . என் அப்பனின் திருக்கோவில் பணி சிறப்பாக நடைபெறட்டும்
சாமியடிகளே . நீங்கள் தாரளமாக செல்லலாம் .பாடலைகாண்பித்து பரிசில் பெற வேண்டாம் . எம்
சோழமன்னனிடம் , கைலாய வேந்தன் சிவனின் மைந்தன் திருக்கோவிலுக்கு உதவி வேண்டும் என்றாலே
அள்ளிக்கொடுப்பார் .’ ,
என்று அவர்களிடம்
கூறிவிட்டு , செயினை கொடுத்துச்சென்றான் , அவ்வீரன் .
கடைத்தெருவை தாண்டி
சென்ற அவர்களுக்கு எங்கே தங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது.வேறு வழியின்றி ஒரு நாளங்காடி
கடையினில் வந்து நின்றனர்.
‘யாரய்யா தாங்கள்
’
‘நாங்க ரெண்டு
பேரும் நண்பர்கள் . நாங்க தஞ்சாவூர்க்கு போகனும் .இன்னைக்கு நைட் இங்க ஸ்டே பண்ண ஏதாச்சும்
லாட்ஜ் கிடைக்குமா ?’ என்ற சந்துருவின் வார்த்தைகளை புரியாமல் விழித்த அந்த கடையின்
உரிமையாளரிடம்
‘இன்று இரவு தங்க
இடம் வேண்டும்’ என்று புரிய வைத்தான் பாலா .
‘நானும் சோழதேசத்திற்குத்தான்
செல்கிறேன். வாருங்கள் என்னுடன் தங்கிக்கொள்ளுங்கள். நாளை வைகைறை யாமம் சேர்ந்தே பயணிப்போம். எனக்கும் பேச்சுத்துணைக்கு ஆள் கிடைத்தவாறு ஆயிற்று’
இருவரும் நிம்மதி
பெருமூச்சு விட்டனர் . பின் கடையின் உரிமையாளரான அந்த இளைஞன் , கடையை பூட்டி தன் உதவியாளனிடம்
கொடுத்துவிட்டு , தொழில்நிமித்தமாக செல்வதையும் எடுத்துரைத்தான். பின் ,இருவர்களையும்
கூட்டிக்கொண்டு , தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றான் .
‘நம்மைப்போன்ற
வழிப்போக்கர்கள் தங்கிக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட மண்டபம் .வசதிகள் குறைவாயினும் தரமானதாக
இருக்கும் . ஆமாம் நீங்கள் இருவரும் யார் ? மொழியும் உடலும் நிறமும் வித்தியாமானதாக
இருக்கிறீர்கள் ?’
‘நாங்களும் தமிழர்கள்
தாங்க .ஆனா ,எங்கள பத்தி சொன்னா புரியாது.’
சந்துரு பதில்
அளித்தவாறே , அம்மண்டபத்தை பார்த்தான் .முழுமையும் பாறாங்கற்களால் ஆனா , திறந்தவெளி
மண்டபம். நன்று நீளமாக இருந்தது. மேற்கூரை மாத்திரம் எதில் வேய்ந்திருப்பார்கள் என்று
புரியவில்லை. இவர்களைப்போல பலர் அந்த மண்டபத்தில் தங்கியிருந்தனர் .ஒரே சமயத்தில்
50 உறங்கும் அளவிற்கு பெரியதொரு மண்டபவமாக காட்சியளித்தது. தங்கியிருந்தவர்களை உற்று
நோக்கினால் , சில புத்த சாமியார்களும் , சமண மத துறவிகளும் நிறைய தென்பட்டனர் .
‘ஓ ! யவனத்திசையிலிருந்த
சிறிதுகாலம்முன் வந்த மாயத்தமிழ்க்குடியினரா ?’
‘இல்லைங்க அவங்களாம்
இல்ல . ஏற்கனவே ஒருத்தர் ரொம்ப எங்கள விசாரிச்சுட்டார். தயவு செஞ்சு கேட்காதிங்க .ஆமா , அவங்க யாரு’மாயத்தமிழன் ?’
‘முன்னொரு காலத்தில்
, நம் தமிழகம் குமரிக்கண்டம் என்ற பெயரில் பரந்து விரிந்து இருந்தது . அச்சமயத்தில்
குமரிக்கண்டத்தின்பால் எண்ணற்ற காதல்கொண்ட கடலன்னை , குமரிக்கண்டத்தினை அணைத்துக்கொள்ள
ஆழிப்பேரலைகளை அனுப்பினாள் . அதன்காரணமாக நிலம்போல , தமிழர்களும் சிதறுண்டார்கள் .
இன்றைய வடநாட்டில் ஒரு குடியினரும் , வடநாட்டைத்தாண்டி , யவணர்கள் வாழ்ந்த பகுதியை
நோக்கிச்சிலரும் சென்றார்கள். அவர்களால் யவணர்களை கண்டுபிடிக்கவில்லை ஆயினும் , நடுவில்
தமிழகத்தை ஒத்த வளமுடைய ஒரு நாட்டில் அவர்கள்
வாழ ஆரம்பித்தனர் . அவர்கள் மாய மந்திரங்களை பெரிதும் நம்பியபடியால் தங்களை மாயன் என
அழைத்துக்கொண்டனர் . பின் ஏதோவொரு காரணத்தால் பல்லாயிரம் ஆண்டுகட்கு பின் தாய்தேசத்திற்கே
திரும்பினார்கள் .’
‘ஓ. சரிங்க . இங்க
நாங்க வர்ரப்ப , எங்கள வடநாட்டுகாரங்களானு மிரட்டுனாங்க .ஏதோ , ஒற்றர்களா நீங்கனு மிரட்டுனாங்க
. எதுக்கு அப்டி மிரட்டுனாங்க ? ’
‘அது வேறொன்றுமில்லை
. சில காலத்திற்கு முன் , மோரியன் என்ற அரசன்
மிகப்பலம் வாய்ந்தவனாய் வடநாட்டில் உதித்தான். அவன் தன்னை சந்திரனின் மகனாய் பாவித்துக்கொண்டான்
. அவனுக்கு தீவிர மண்ணாசை. மண்ணிற்காக , அறங்கெட்ட செயல்களைகூட செய்தான். அதன்காரணமாக
வடுகரின் நாடு உட்பட பல நாடுகளை வென்று வந்தான். அப்போதும் அவனுக்கு ஆசை தீராததால்
, தமிழ்த்தாய் குடிகொண்டிருக்கும், இவ்வீரதேசத்தை நோக்கி படையெடுத்து வந்தான். அவன்
படையை வழிநடத்தி வந்தவன் கோசன் எனும் தளபதி. அவன் ஈவு இரக்கமற்றவன் . அவன் நாமிருக்கும்
இந்த தொண்டை மண்டலம் வரை கைப்பற்றினான். அவன் போர் செய்வதைப்பார்த்த அவ்வட நாட்டு வீரர்கள்
, அவனை சிங்கம் என்று முழங்கினர் . அவ்வெறிபிடித்த , நாகரிகம் அறியாத மனித மிருகம்
, அடுத்து தாக்க திட்டமிட்டத்து , சோழ நாட்டைத்தான் . ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம்
, சிங்கத்தின் கோட்டையில் சென்று வீரப்போர் புரிந்து அக்கோசனை கொய்துவிட்டு வந்தது
, ஒரு சோழப்புலி. அவர்தான் , இளங்கோட்சென்னி . மோரியரை ‘பாழி’ எனும் நகரத்தில் வீழ்த்தியதால்
, அம்மாமன்னருக்கு செருப்பாழி எறிந்த இளங்கோட்சென்னி என்ற பெயரும் உண்டாயிற்று . அதன்பின்
, இந்நகரம் உட்பட சோழராஜ்ஜியத்தில் பல நகரங்கள் கட்டுக்குள் வந்தது. இப்போது, அந்த
மோரிய வம்சத்தின் கடைசி அரசன் பிரகதத்தன் என்பானை
சுங்கன் என் ற அமைச்சன் கொன்றுவிட்டு அரியணை
ஏறியதாக தகவல் வந்துள்ளது. ஒருவேளை , அந்த சுங்கனும் இங்கு போர்தொடுத்து வரலாம் என்பதால்தான்
,இத்தகைய கட்டுப்பாடு. ’
‘அதுனால தான் இவ்ளோ
கட்டுப்பாடா ?’
‘ஆமாம்’
‘சரி . நீங்க என்ன
செய்றிங்க ?’
பாலாவின் கேள்விகளுக்கு , அவ்வணிகன் மறுமொழியிட்டான்
‘நான் ஒரு வணிகசாத்துகன் . சோழநாட்டின் சீத்தலை கிராமம்
எனது சொந்த ஊர் . பொன்விழையும் திருவாரூர் தலைநகரில் இருந்து நெல் , முதலான தானிய வகைகளை
கொண்டுவந்து , தொண்டை மண்டலம் முதல் சேரநாடு , பாண்டிய நாடு என அனைத்து நாடுகளிலும்
விற்பேன் .பதிலுக்கு கிடைக்கும் பட்டு , தந்தம் , தங்கம் , மிளகு , இலவங்கம் போன்றவற்றை
என் தேசத்தில் விற்றுவிடுவேன் .இதுவே என் தொழில்
.ஒரு வாரகாலமாக நான் இங்கிருந்து செய்த வாணிபத்தினால் கிடைத்துள்ள பொருட்களை இன்னும்
முத்தினத்திற்குள் திருவாரூர் சேர்க்கவேண்டும் ’
‘ஓ ! சரிங்க .
நீங்க சாப்டிங்களா? எனக்கு பயங்கரமா பசிக்குது. ’ -பாலா
‘கொண்டு வந்த புளிசோறும்
தீந்துடுச்சி மச்சி ‘ -சந்துரு
‘கவலை கொள்ளவேண்டாம்
. இங்கு வழிப்போக்கர்கள் சாப்பிடுவதற்கான விடுதி ஒன்றை முதியவள் ஒருவள் வைத்துள்ளாள்.
அவளை அனுகினால் கிடைக்கும் .வாருங்கள் செல்லலாம்’ .
கூறியவன் , அவனிடத்தில்
இருந்த பெட்டியிலுருந்து ஒரு சேலையை எடுத்தான்
.30 வயதுதான் இருக்கும் அவனுக்கு . முகமெங்கும் அமைதியின் உருவமாய் திகழ , மெல்லிய புண்சிரிப்புடன் காணப்பட்டான்
.
‘எதுக்குங்க சேலை
?’ -பாலா
‘நாம் உணவருந்த
தான்’
‘அதுக்கெதுக்கு
சேலை .?’
‘இங்கு நாணயப்புழக்கம்
இன்னும் வரவில்லை .அதனால் , இன்னும் பண்டமாற்று முறைதான்’
இருவரும், அவ்வணிகனை
பின்தொடர்ந்து கடைவீதியில் சென்றார்கள் .மக்கள் அனைவரும் தத்தம் உணவு உண்டு , பெரியவர்கள்
அனைவரும் வீட்டின் வாயலில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் .சிறுபிள்ளைகள்
வீட்டினுள் உறங்கிக்கொண்டிருக்க , கணவன் மனைவி சம்பாஷணைகளும் வந்து கொண்டிருந்தன .
ஆங்காங்கே சிலர் குதிரையிலும் ,தம் காலாலும் நடந்து கொண்டு , கையில் தீஜுவாலையைக்கக்கும்
பந்தங்களுடன் காவலில் இருந்தனர் .உடல் கடன்களை முடிப்பதற்காக செல்வதாக கூறி காதலை வளர்க்கும்
வண்ணம் இளம்கன்னிகளும் , வேட்டைக்கு செல்வதாக இளம் காளைகளும் புறப்பட்டுக்கொண்டிருந்தனர்
. அல்லங்காடி கடைகள் ஓரிரண்டு திறந்தபடி கிடந்தன .பெரும்பாலான கடைகளும் , அதன் உரிமையாளர்களைப்போல்
தூங்கிக்கொண்டிருந்தன . ஒரு குடிசைக்கு அருகில் , அச்சாத்துகன் நின்றான் .
‘அம்மையே ! உணவருந்த
தீராப்பசியுடன் வந்துள்ளோம்’
‘பொறும் அப்பனே !
வருகிறேன் .கைச்சுத்தம் செய்துவிட்டு வாரும் .’
மூன்றுபேரும் கரம்
,கால், சிரம் கழுவி , அக்கிழவி சமைத்த கேழ்வரகு கலியையும் தட்டைப்பயிர் கூட்டையும்
உண்டுவிட்டு , பதிலிற்கு அவளுக்கு அச்சேலையை காணிக்கையாக்கிவிட்டு , விடைபெற்று சென்றார்கள்
.மண்டபத்திற்கு சென்று உறங்க ஆரம்பித்தார்கள் .நாள் முழுதும் பயணம் செய்த அலுப்பினால்
, தூக்கம் இருவரையும் இனிதே வரவேற்றது.
‘அய்யா ! எழுந்திரியுங்கள்.
நீராடிவிட்டு வாருங்கள் . நாம் சோழதேசத்தை
நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவேண்டும்’
குரல் கேட்டு விழித்தவர்களுக்கு
, அவ்வணிக இளைஞன் , இன்முகத்துடன் காட்சியளித்தான்.
‘நல்ல தூக்கம்
போலிருக்கிறது ?’
‘ஆமாங்க ’ -சந்துரு
‘சரி .வைகறை முடியப்போகிறது.
பொழுது விடிதற்குள் நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும். முதலில் நீங்கள் நீராடி , உடற்கடன்களை
முடித்துவிட்டு வந்தால் , பிரயாணத்தை தொடங்கலாம் ’
இருவரும் அரைத்தூக்கத்துடன்
எழுந்து பார்த்தார்கள். நீலநிறத்திற்கு அந்நகரம்
வாழ்க்கைப்பட்டது போலிருந்தது. தூரத்தில் வீனஸ் கிரகம் , தன் இருப்பை காட்டிக்கொண்டிருந்தது.
நிலவு , பூமித்தாயை விட்டு பிரியப்போகிறோமே என்ற கலக்கத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது.இரவு பார்த்த காவலர்கள் , இன்னும் உறங்காமல் தீப்பந்தத்தை அணைத்துவிட்டு , நகரை காவல்காத்துகொண்டிருந்தனர்.
‘ஆமா, குளிக்கறதுக்கு
ஆத்துக்கு தான் போகனுமா ?’ -பாலா
‘இல்லையில்லை.
வேகவதி ஆற்றில் குளிப்பது மதம்கொண்ட யானையின்காலுக்கு
கீழ் படுப்பதற்கு சமம் .நீங்கள் இவ்வூருக்கு இதற்கு முன் வருகை புரிந்ததில்லையா ?’
‘நாங்க வர்ரப்ப
, இப்படி ஊர் இல்லைங்க ’ என்று சந்துரு தன் குடும்பத்துடன் கைலாசநாதர் கோவிலுக்கும்
, காமாட்சி அம்மன் தரிசணத்திற்கும் வந்ததை நினைவுபடுத்திக்கூறினான் .
அவர்கள் எழுந்து
அம்மண்டபத்தின் இறுதிப்பகுதி நோக்கி சென்றனர் .அங்கே , ஏரி ,அதுமட்டுமின்றி சுற்றியும் ஆங்காங்கே , பதின்ம வயது முகத்தில் கானும் பருவைப்போல , ஏராளமான ஏரிகள் . அவர்களின் கண்களில்
ஆச்சரியத்தை கொடுத்த வண்ணம் சலசலப்பின்றி உறங்கிக்கொண்டிருந்தது .பலவிதமான பறவைகள் , அங்குமிங்குமாய் பறந்துகொண்டு இருந்தன. அந்த ஏரி , பறவைகளுக்கென்று நேர்ந்துவிடப்பட்டது எனும் எண்ணுமளவிற்கு , பறவைகள் இருந்தன . குளித்துமுடித்து
,வேறு உடை இல்லாமல் அதே உடையை அணியச்சென்றவர்களை தடுத்து அவர்களுக்கு புது உடையை வழங்கினான்
, அந்த வணிகன் .அவர்கள் இருவரும் , தங்களிடம் எதுவும் கொடுப்பதற்கு இல்லை என்ற மனவருத்ததில்
சிக்கிக்கொண்டிருக்க , அவர்களைத்தேற்றி
‘உங்கள் இருவரையும்
பார்க்கும்போது ,என் சகோதரர்களைப்போல் தான் தெரிகிறீர்கள் .அதுமட்டுமின்றி நான் உங்களுக்கு
உதவிதான் செய்தேன் .உபகாரமோ, வணிகமோ இல்லை. எதிர்பார்த்து செய்வதன் பெயர் உபகாரம் .தயவு செய்து
என்னை தரம்தாழ்த்த வேண்டாம்’
அதுவரை உதவி என்பதற்கான
அர்த்தத்தைதுளியளவும் அறியாத அவர்களின் கண்கள் , மெல்லிய பாசக்கலக்கத்தில் நனைந்து
இருந்தது . குளித்து முடித்து மெல்ல கிளம்பும்போது , சூரியன் தான் வருவதை பறைசாற்றும்
பொருப்பு தன் கதிர்களை படரவிட்டிருந்தான். இரு பொலி எருதுகளை பூட்டிய ஒரு மாட்டுவண்டி
, மூட்டைகளையும் மூன்று மாந்தர்களையும் தன்னுள்ளே ஏற்றிக்கொண்டது. அந்த தினவெடுத்த
எருதுகளோ , அவ்வளவு எடையையும் அசால்ட்டாக சுமந்து , ஜாலியாக இழுத்துச்சென்றது. அதிகாலைக்காற்று மென்குளிருடன் நாசியில் ஏறத்துவங்கியதும்
, உற்சாகம் பீறிட்டுக்கொண்டது. அதுவரை நாம் வசமாக மாட்டிக்கொண்டோம் , நமக்கு பெட்ரோல்
தேவை என பதட்டத்தில் இருந்தவர்கள் இன்று காலையிலிருந்து அதை மறந்து , இச்சூழலையும்
மனிதர்களையும் ரசிக்கத்துவங்கினார்கள். மாளிகைகளுக்கு அப்பால் , பல்லாயிரக்கணக்கான
ஏக்கர்களில் நெல்லும் , கரும்பும், மஞ்சளும் பச்சை , மஞ்சள் ,நீலம் என அந்தந்த கலர்களில் கொழுத்துகிடந்தன.
நட்டு இரு மாதங்கள் ஆகியிருக்கவேண்டும் . நடுநடுவே குளங்களும் , தூரத்தில் எங்கோ ,
ஏரிகளும் காணப்பட்டன .நேற்று மாலையில் இவர்கள் வந்த பாதைக்கு எதிரில் இருந்த பாதையில்
மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தது. இப்பக்கத்தில் , ‘தடக் தடக்’ என்ற சத்தம் பலவீடுகளில்
இருந்து வந்துகொண்டிருந்தன. உள்ளே குனிந்து பார்த்தால் ,வீட்டின் உள்ளே குழுவெட்டி
, கைத்தறி வைத்து பட்டு நெய்து கொண்டிருந்தார்கள் . இப்பக்கமோ , பட்டுப்பூசிகள் வளர
ஏதுவான செடிகள் , காடுகள் எங்கும் நிறைந்திருந்தன. உற்சாகத்தின் எல்லைக்கு மட்டுமல் , அந்நகரின் எல்லைக்கும்
சென்றனர் . எல்லையில் இருந்த காவலர்களிடம் பேசிவிட்டு , வண்டியை செலுத்தலாம் எனச்செல்லும்
போது , திடீரென்று ஒரு ஆதிவாசிகள் கூட்டம் குதிரையிலும் , நடந்தும் வெறித்தனமாக எல்லையை
நோக்கிவந்தது .
‘வந்துவிட்டார்கள்
. தாக்குங்கள்’
என்ற , காவலர் ஒருவரின்
சத்தம் கேட்டு அனைத்து வீரர்களும் ஒன்றுசேர ,ஒரு வீரன் குதிரையில் ஏறி நகரில் இருக்கும்
மற்ற வீரர்களை அழைக்கச்சென்றான் . வணிகனும் இவர்களும் மாட்டுவண்டியை திருப்பி நகரைநோக்கி
சென்றனர் .பாலாவும் , சந்துருவும் முதல்முறை போரைப்பார்க்க ஆவலாக வைத்தகண் வாங்காமல்
பார்த்துக்கொண்டிருந்தார்கள் .சிறிது தூரம் சென்ற வணிகன் , வண்டியை நிறுத்தி ,அக்காவலர்களிடம்
சென்று ஒரு வாளை பெற்றுக்கொண்டு அக்கூட்டத்தினை எதிர்க்க தயாராய் நின்றான் . இதோ அவர்கள்
எல்லையை அடையப்போகிறார்கள். அவர்கள் அனைவரின் முகத்திலும் ரத்தவெறி , மற்றும் பேராசை
மின்னியது. அரக்கத்தனமாக இருந்தனர் . உடைகளில் சரியான கவனமின்றி , துளியும் நாகரீகமின்றி
இருந்தனர் . சோழவீரர்கள் மற்றும் தொண்டைமண்டல வீரர்கள் அனைவரும் தங்களின் வேல் , வில்
மற்றும் வாளை தயார் நிலையில் , எதிரிகளின் நெஞ்சில் பதிய ஆர்வத்துடன் இருந்தனர் .
‘’
, வண்டியை செலுத்தலாம் எனச்செல்லும் போது , திடீரென்று ஒரு ஆதிவாசிகள் கூட்டம் குதிரையிலும் , நடந்தும் வெறித்தனமாக எல்லையை நோக்கிவந்தது .
ReplyDelete‘வந்துவிட்டார்கள் . தாக்குங்க
என்ற , காவலர் ஒருவரின் சத்தம் கேட்டு அனைத்து வீரர்களும் ஒன்றுசேர ,ஒரு வீரன் குதிரையில் ஏறி நகரில் இருக்கும் மற்ற வீரர்களை அழைக்கச்சென்றான் . வணிகனும் இவர்களும் மாட்டுவண்டியை திருப்பி நகரைநோக்கி சென்றனர் .பாலாவும் , சந்துருவும் முதல்முறை போரைப்பார்க்க ஆவலாக வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .///
hahaha nalla amaithiya poykittu iruntha kathaila
ethirpaarkkaatha thiruppu munaiyodu intha pakuthi mudithu irukkurirkal sir.
thodarungal-thodarkiren.
வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி அன்பரே!!!
Deleteசிறப்பாக நகருகிறது
ReplyDeleteதொடருங்கள்
நன்றி அண்ணே!!!
Deleteகதை நல்லா போகுது மேகனேஷ்.. ஒரு சிறு திருத்தம் செய்தால் படிக்க ஏதுவாக இருக்கும்.. பச்சை நிறம் கண்களை உறுத்துவதாய் உள்ளது.. வேறு ஏதேனும் அடிக்காத நிறமிட்டால் நன்று..!
ReplyDeleteசரிங்ணா!!! :-)
Delete//பயமுற்றிய // இந்த தமிழ் வார்த்தையை இப்போ தான் கேள்விப்படறேன்.. ;) ;)
ReplyDelete'ம்'ம விட்டுட்டேன் ஆபிசர் !! தமிழ்நாடு அரசுவிசைப்பலகை கொஞ்சம் இந்தமாதிரி குழப்பத்த உண்டாக்கிடுது!!! சரிசெஞ்சுடறேன்ணா!!! :-)
DeleteI like your story.. I'm fan of time travel stories. pls continue it. If possible pls update fastly.
ReplyDeleteரொம்ப நன்றிங்க !!! நான் மாசம் இரண்டு பகுதிக்கு தான் ப்ளான் பண்ணி எழுதிட்டு வரேன் !! முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா அப்லோட் பண்ண ட்ரை பன்றேங்க!!!
Delete