A SEPERATION - சினிமா விமர்சனம்




தமிழில் உலகசினிமா வரவேண்டும் என்றால் உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதால் மட்டுமோ , தமிழ் மற்றும் உலகஇலக்கியங்கள் படிப்பதால் மட்டுமோ வந்துவிடாது .  முதலில் நாம்  சார்ந்துள்ள சமூகத்தின் நிலையை நன்கு உணரவேண்டும் . நம் சூழ்நிலையையும் , நம் மக்களின் பிரச்சனைகளையும் மனப்பூர்வமாக உணர்ந்தாலே , உலகப்படைப்புகளுக்கு நிகரான திரைப்படங்களைத் தமிழ் இயக்குநர்களால் கொடுக்கமுடியும் . ஆனால் அந்தமாதிரியான படங்கள் தமிழ்நாட்டில் கலெக்சன் எடுக்குமா என்பது சந்தேகம் தான் . காரணம் ரசிகர்களாகிய நாம் முதலில் ஒன்றை மனதில் நிறுத்தவேண்டும் . நமக்கு , நேரத்தைக்கடத்த உதவும் கமர்சியல் படங்களும் தேவை . அதேநேரம் நாம் என்னமாதிரியானதொரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதனை உணரும் பொருட்டு இம்மாதிரியான படங்களையும் ஊக்கப்படுத்தவேண்டும் .  


நான் முதன்முதலில் ஆங்கிலம் தவிர மற்றையமொழி படங்களைப்பார்க்க ஆரம்பித்தது ஒரு கிரேக்க படத்தினால் தான் . ஆனால் அந்த படத்தைப்பார்த்ததும் ‘ஆள வுடுங்கடா சாமி’ ரேஞ்ச்-க்குச் சென்று விட்டேன் . அதன்பின் CHILDRENS OF HEAVEN எனும் ஈரானிய படத்தின் மூலம் , மீண்டும் எனது உலகசினிமாக்களைப் பார்க்கும் ஆரவம் அதிகரித்தது . இப்போது ஸ்பானிஷ் மற்றும் ஈரானியப்படங்களைப் பார்க்க ஆரம்பித்ததால் , இனி விமர்சன உலகம் முழுக்க அனைத்துவகையான திரைப்படங்களைப்பற்றியும் உங்களிடம் மொக்கைப்போடலாமென்று இருக்கிறேன் . அதில் முதலாவதாக ஒரு சாம்பிள் தான் இந்த A SEPERATION .உலகளவில் பாராட்டுகளைப்பெற்ற பெரும்பாலான ஈரானியப்படங்களின் கதை , ஒரு சின்னவிஷயமாகவே இருக்கும் . ஆனால் அந்த சின்னவிஷயங்களினால் மனிதர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி அலசுவதே இப்படங்களின் நோக்கமாக இருக்கும் . A SEPERATION படமும் அவ்வகையைச்சார்ந்தது தான் .

இந்த படத்தில் கதை என்று எதை எழுதுவது என எனக்குத்தெரியவில்லை . அதனால் எளிமையாகக் கூறவேண்டுமென்றால் , ஒரு பிரச்சனை ஆகிறது . அதைத்தொடர்ந்து சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன .  இவற்றின் தொகுப்பே இத்திரைப்படம் .



நடேர் – நடுத்தர மேல் வர்க்கத்து ஆண் . அல்ஜைமர் எனும் ஞாபகமறதி மற்றும் தன்னிலை மறக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தையின் மீது உயிரையே வைத்திருப்பவன் . எங்கும் எதிலும் நேர்மை , ஞாயம் பேசுபவன் . தன் 11 வயது மகள் டெர்மா உடனும் மனைவி சிமினுடனும் வாழ்ந்து வருகிறான் .

சிமின் – தம் குடும்பத்தின் எதிர்காலம் கருதி , தன் கணவனை வெளிநாட்டிற்கு வருமாறு வற்புறுத்துகிறாள் . ஆனால் அவன் அதை மறுக்கவே , விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கிறாள் . ஒரு பிரச்சனை என்றால் , அதன் பின்விளைவுகளை யோசித்து , அதிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்றுநினைப்பவள். தான் விவாகரத்துக்கேட்டால் உடனே தந்துவிடுவதா என்று மனதினுள் குமுறுபவள் .

டெர்மா – தாயும் தந்தையும் பிரிந்துவிடக்கூடாது என்று நினைத்து , தன் தந்தையுடன் இருக்கிறாள் . அப்போதுதான் தன் தாய் , தன் தந்தையை விட்டு வெளிநாடு செல்லமாட்டாள் என்றுணர்ந்தவள் .

ரஸியா – நாலரை மாத கர்ப்பிணி . தன் கணவனுக்கும் , தன் மதத்திற்கும் அடங்கி ஒடுங்கி வாழ்பவள் . வேலையின்றி 11 மாதங்களாக கஷ்டப்படும் தன் கணவனுக்காக , ஏதாவது ஒரு வேலைசெய்து பிழைப்பை ஓட்டலாம் என்று எண்ணுபவள் . அந்தமாதிரி ஒரு சமயத்தில் தான் நடேரின் வயதான தந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை அவளுக்கு கிடைக்கிறது .

ஹோட்ஜட் – ரசியாவின் கணவன் . கோபக்காரன் . மதத்தை உண்மையாக நம்புபவன் . வேலையின்மையின் காரணமாய் சமூகத்தின்மீது வெறுப்பில் இருப்பவன் .


இப்போது கதை இதுதான் .  நடேர் வேலைக்குச்சென்று வீட்டிற்கு திரும்பும் போது , நடேரின் தந்தை கீழே விழுந்து கிடக்கிறார் . அந்நேரம் ரசியா வர , என் தந்தையை விட்டு எங்கே சென்றாய் என கோவமடைகிறான் . அவளை வீட்டை விட்டு அனுப்பும்பொருட்டு , நீ திருடிவிட்டாய் என்று பொய் சொல்லி வீட்டை விட்டு அனுப்புகிறான் . அப்போது தவறுதலாய் கீழே விழுந்துவிடுகிறாள் ரசியா .

அடுத்தநாள் , சிமின் தன் கணவனிடம்  , ரசியாவின் கரு கலைந்துவிட்டது என்று போனில் கூறுகிறாள் . மருத்துவமனையில் சென்று பார்க்கும் நடேருக்கு , ரசியாவின் கணவனுடன் மோதல் ஏற்படுகிறது . கருவைக்கொன்ற குற்றத்திற்காக , நடேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றான் . அங்கு வழக்கை விசாரிப்பவரிடம் , ரசியா கர்ப்பமாக இருப்பது தனக்குத்தெரியாது என்று கூறுகிறான் . அதன்பின் அந்த வழக்கு என்ன ஆனது ? யார்மீது குற்றம் ? நடேரும் சிமினும் என்ன ஆனார்கள் என்பதை அழகாய் , அதேநேரம் திரில்லராய் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் Asghar Farhadi .

மேலே இருக்கும் கதாபாத்திரங்களில் அனைவரையும் நாம் அறிந்திருப்போம் . இதில் ஒரு கதாபாத்திரம் கூட நமக்கு புதிதானவர்கள் இல்லை . நம் குடும்பத்தில் , நம் உறவினர் , நண்பர் என்ற ஏதாவதொரு நிலையிலாவது மேற்குறிப்பிட்டவர்கள் நம்முடன் பழகியிருப்பார்கள் . கதையைப்படித்தால் ஒன்றும் பெரிதாய் இல்லையே ? எதற்கு இந்த படத்தைப்பார்த்துக்கொண்டு என்று  நினைக்கத்தோன்றும் . ஆனால் நான் முதலிலேயே கூறியது போல் , கதைக்காக பார்க்கும் படமல்ல . மனித உணர்வுகளுக்குள் நடைபெறும் போராட்டங்களை உணர்த்தும் படம் இது .


ரசியா , முதல்நாள் வேலைக்கு வரும்போது நடேரின் தந்தை , தன்னுடைய உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறார் . அதை அவரால் உணரமுடியாது . அவரை பாத்ரூமில் அழைத்துச்சென்று , அவரிடம் குளிக்குமாறு சொல்கிறாள் ரசியா . ஆனால் அதையும் உணராத அவர் அப்படியே நின்று கொண்டிருக்கிறார் . அவரைத்தான் தான் குளிப்பாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவள் , போன் செய்து மதகுருமார்களிடம் கேட்கிறாள் . அவர்கள் சரி என்றபின்னே , அவள் சென்று அந்த வயதானவரைக்குளிப்பாட்டுகிறாள் . அப்போது , அவளின் மகள் , ‘பயப்படாதம்மா . நா அப்பாகிட்ட சொல்லமாட்டேன்’ என்கிறாள் .

‘உங்க அப்பாவ விட்டுட்டு வாங்க .’ என்று சொல்லும் சிமினிடம் , நடேர் ‘என் தந்தையை விட்டு என்னால் வர முடியாது’ என்கிறான் . ‘நீங்க என்னதான் அவர பாத்துகிட்டாலும் , அவருக்கு நீங்கதான் பாத்துக்கிரிங்கனு தெரியாது ’ என்று கூறும் மனைவியிடம் நடேர் இவ்வாறு கூறுகிறான் ‘ஆனால் எனக்குத்தெரியும் . அவர் தான் என் தந்தை ’

இதுமாதிரி,  படம் முழுதும் ஏகப்பட காட்சிகள்  படத்தில் ஜொலிக்கின்றன . இத்திரைப்படம் ஒரு நாட்டின் கலாசாரம் , மதத்தின் மீதான நம்பிக்கைகள் , சட்டத்தின் முரண்பாடுகள் , ஆணாதிக்கம் மற்றும் பெண்ணாதிக்கம் , வர்க்க வாரியான குடும்பத்தின் நிலை  என்று பலவிதமான குறியீடுகள் மற்றும் காட்சியமைப்புகளை கொண்டுள்ளது. தன் வீட்டிலுள்ள பிற ஆண்கள் முன்னிலையில் வர மறுக்கும் ரசியாவின் குடும்பத்தில் நிலவும் ஆணாதிக்கத்தைக்கண்டிக்கும் அதேநேரம் , தன் கணவன் முன்னிலையிலே ஒரு காட்சியில் புகை பிடித்துக் கொண்டிருப்பாள் சிமின் .

இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நடிகர்கள் என்று குறிப்பிடுவது தவறு . அனைவரும் கலைஞர்கள் . ஒருவருக்குக்கூட நடிக்க ஸ்கோப் இல்லை என்று சொல்லிவிடமுடியாது . நடேர் பாத்திரத்தில் நடித்த PEYMAN MOAADI , சிமின் வேடத்தில் நடித்த லைலா ஹெடாமி , தெர்மேவாக நடித்த SARINA FARHADI  என அனைவரும் அருமையான நடிப்பினை வழங்கியுள்ளார்கள் . இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும்விதமாக , படத்தில் ஆங்காங்கே வலம் வரும் பெரியவர் , உண்மையில் நடிகர்தானா என்ற சந்தேகம் வருமளவிற்கு தூள் கிளப்பியிருக்கிறார் . கதை முழுதும் அவரைச்சுற்றியே நடைபெறுகிறது என்பதைக்கூட உணரமுடியாதவராக அவர் வருவது அற்புதம் . இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம் . இயக்குநர் அஷ்கார் பர்ஹதி-கு இது மூன்றாவது திரைப்படம் . படத்தின் முழுகிரெடிட்டும் அவருக்குத்தான் . இந்த படத்திற்காக எண்ணற்ற விருதுகளை வாங்கி வீட்டில் அடுக்கமுடியாமல் தவித்துப்போய் விட்டார் . ஆஸ்கார் , கோல்டன் குளோப் , ஆசிய திரைப்பட விருது , ஆசிய – பசுபிக் திரைப்பட விருது , பெர்லின் என உலகம் முழுதும் விருதுகளை அள்ளியுள்ளது இத்திரைப்படம் .



Jodaí-e Nadér az Simín  எனும் பாரசீக டைட்டிலை , ஆங்கிலத்திற்கு ஏற்றவாறு A SEPERATION என வைத்துள்ளார்கள் .மொழிப்பிரச்சனை என்றெண்ணி பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் . இது மொழியையும் கடந்து உணரும் திரைப்படம் . மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான திரைப்படம் .  ஒரு வித்தியாசமான உணர்வை இந்த படம் கண்டிப்பாய் தரும் . இந்த படத்தின் கிளைமேக்ஸ் வழியாக உங்களையே நீங்கள் புரிந்துகொள்ளலாம் . படத்தைப்பார்த்து , கிளைமேக்ஸ் புரியவில்லை என்று நீங்கள் நினைத்தால் , இப்படத்தை சினிமா கண்ணோட்டத்தில் நீங்கள் அனுகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் . ஒருவேளை ‘என்னடா இது ? கிளைமேக்சே இல்லை’ என்று நினைத்தால் , நீங்கள் ஒரு ஐந்தறிவு கொண்ட அற்புத மனித உயிர் என்று அர்த்தம் .





தொடர்புடைய இடுகைகள்



BURIED - சினிமா விமர்சனம்


ROAD TO PERDITION - சினிமா விமர்சனம்


LIFE IS BEUTYFUL - சினிமா விமர்சனம்


IT'S A WONDERFUL LIFE - சினிமா விமர்சனம்


THE PIANIST - சினிமா விமர்சனம்


THE PRESTIGE - சினிமா விமர்சனம்


Comments

  1. இயல்பான எழுத்து நடையில் எழுதியிருக்கிறீர்கள்... படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன தங்களின் எழுத்துக்கள்...

    ReplyDelete
  2. ஆகா ஜோரான படமாக இருகிறதே...
    நல்ல அறிமுகம் மெக் தொடர்க ...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பார்க்கலாம்ணா ! அருமையான படம் !!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை