காதல் காதல் – தொடர்கதை – 7






‘எங்கப்பாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சி மதன் ’ என்று கண்கலங்கியவாறே மதனிடம் மையல் கூறினாள் . எவ்வளவோ இனிமையான நினைவுகளை அவர்களுக்குத்தந்த அந்த பேருந்து பயணம் இன்று கொடுமையானதாக இருந்தது . நியூட்டனின் மூன்றாம் விதி இவ்வளவு சீக்கிரமாக இவர்களின் வாழ்க்கையில் அப்ளை ஆகும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் .  

‘எப்படி தெரிஞ்சது ?’

இடைப்பட்ட காலங்களில் இவர்களின் காதலுக்குள் பிரிவினை ஏற்படுத்த ஒருவன் உள்நுழைந்தான் . அவன் மையலின் தூரத்து உறவினன் . பார்க்க  போந்தாக்கோழி போல் இருக்கும் அவன் மையலுக்கேத்தெரியாமல் அவளை கபளிகரம் செய்ய முயற்சித்தான் . மதனின் கெத்தும் , நண்பர்கள் செட்டையும் பார்த்து மிரட்சியுடன் ஒதுங்கி நின்றான் . தினந்தோறும் மையலின் அருகில் அமர்ந்து வேறு சாதியைச்சார்ந்த மதன் , அவள் கையைப்பிடிப்பது இவனுக்கு அருவெருப்பை உண்டாக்கியிருந்தது .  மதனிடம் மையல் சிரித்து பேசும்போதெல்லாம் இவனுக்கு நரம்புகள் புடைக்கும் . அவனின் கோவத்தை நேரடியாகக்காட்டாவோ , மையலைக்கண்டிக்கவோ போதுமான தைரியம் இல்லாதவன் . அவனுக்கு மையல் வேண்டும் . அவ்வளவே அவன் எண்ணம் . அதற்காக குறுக்கவழியைக்கண்டறிந்து அதன்படி சென்றான் .மையலின் வீட்டில் சொல்லிவிட்டான் .

‘யாரோ எங்க வீட்டுல சொல்லிட்டாங்க .’ என்று அழுதவாறே கூறினாள் .

‘அம்மு . அழாத ! இப்போ என்ன ? உங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . அவ்ளோதான . நா உங்க வீட்டுல வந்து பேசறேன் .’

‘அதெல்லாம் வேண்டாம் . என்ன இன்னைக்கே எங்கயாவது கூட்டிட்டு போய்டு . ப்ளீஸ் .’ என்று மீண்டும் அழுதாள் .

‘ஹே ! லூசாடி நீ . நா இன்னும் காலேஜ் முடிக்கல . அதுவுமில்லாம என்ன பெத்த பையனவிட பாத்துப்பாத்து என்னோட அங்குள் வளர்த்திருக்காரு . அட்லீஸ்ட் அவருகிட்டயாச்சும் ஒரு வார்த்தை சொல்லனும் .’

‘எனக்கு பயமா இருக்குடா . ப்ளீஸ் . என்ன விட்டுட்டு போய்டாத டா .’

‘ஒருநிமிஷம் பொறுமையா யோசிச்சு பாரு அம்மு . நா உன்ன கல்யாணம் பண்ணி ராணிமாதிரி வச்சி்க்காப்பாத்தனும்னு நினைக்கிறேன் .  இப்போ இருக்க நிலைமைல எப்டிடி ? நா ஆல்ரெடி சொல்லிருக்கேன்ல . உங்க வீட்ல உன்னப் பாத்துக்கரத விட நல்லா உன்னப்பாத்துக்கனும் . அதுதான் எனக்கு முக்கியம் .கொஞ்சம் பொறுமையா இரு தங்கம் . ’ என்று ஒருமாதிரியாக சமாதானப்படுத்தினான் . அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதின் காயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போலிருந்தது .
வீட்டிற்கு வந்தவன் சிறிது நேரம் யோசித்தான் . இதன்பின்னும் பொறுத்திருப்பது ஆபத்து என்றுணர்ந்தான் . அவன் அங்கிளிடம் எல்லா உண்மையைப்பற்றியும் உடைத்தாகவேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டான் . அவருக்காக காத்திருந்தான் . சப்-இன்ஸ்பெக்டரான அவருக்கு எப்போது வேலை முடியும் , எப்போது வீடுதிரும்புவார் என்பது கேள்விக்குறியே . ஆனால் அவனுடைய நேரத்திற்கு அன்று சீக்கரமாகவே வீட்டிற்குள் நுழைந்தார் . மனதைத்தைரியப்படுத்தியவாறே அவரிடம் சென்றான் .

‘அங்குள் ’

‘ம் ’

‘உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் ’ என்றவனை நிமிர்ந்து பார்த்தார் . அவரின் முகம் என்ன என்று வினவியது .

‘நா ஒரு பொண்ண மூனு வருஷமா லவ் பன்றேன் .’

என்னது மூனு வருஷமா என்பது போல் அவருடைய முகம் ஆச்சரியமானது .

‘அதுக்கு ?’

‘அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சி . ’

அவர் அவனின் கண்களை கூர்மையாய் நோட்டம் விட்டவாறே கேட்டார் .

‘அவள கல்யாணம் பண்ணிக்கனுமா ?’

இவன் தலைகுனிந்தவாறே நின்றுகொண்டிருந்தான் .

‘உன் வயசு என்ன ? என்ன வேலைக்கு போற ? ஒருபடி பொன்னி அரிசி விலை என்னன்னு தெரியுமா ?’
என்ற அவரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நின்றிருந்தான் . அவனுக்கு பொன்னி அரிசியைப்பற்றிய கவலை இல்லை . உள்ளுக்குள் தன் காதல் இளவரசியைப்பற்றிதான் கவலை .

‘பொண்ணு என்ன ஜாதி ?’

‘******* அங்குள் .’

‘செட் ஆகாது . விட்ரு .’

‘அங்குள் ’ என்று ஏமாற்றத்துடன் அவரைப்பார்த்தான் . அவனின் கண்களில் பிச்சைக்கேட்பவனின் ஒளி தெரிந்தது . அவரோ அவனைக்கவனிக்காமல் எழுந்து சென்று பீரோவைத்திறந்து சில பைல்களை கொண்டுவந்தார் .

‘மீறி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சினா இங்க இருக்கமுடியாது . உங்க அப்பனோட இன்சூரன்ஸ் பணம் , உன் பேர்ல வாங்கி வச்சிருக்க நிலம் பத்தின எல்லா பைலும் இதுல இருக்கு . எடுத்துகிட்டு கிளம்பிடு .’ என்று குரல் தழுதழுத்தவாறே கூறினார் .  அவனை எப்படியாவது நல்ல நிலைமைக்குக்கொண்டு வந்து சேர்த்துவிடவேண்டும் என்று வாழ்க்கைமுழுமைக்கும் போராடிக்கொண்டிரு்ககும் ஜீவனின் கண்கள் கலங்கியிருந்தது . அவன் தம் அடிக்கிறான் எனத்தெரிந்திருந்தாலும் அதை அவனிடம் அதைப்பற்றி நேருக்குநேர் ஒருமுறைக்கூட பேசியதில்லை . ஒரே ஒரு தடவை குடித்துவிட்டு வந்தவனிடம் ‘உங்கப்பன மாதிரி நீயும் ஆகிடாதடா ’ என்று கெஞ்சியவர் . அன்றிலிருந்து குடிப்பதை நிறுத்தியவன் . இன்றோ , அவனை தராசுபோல் மாற்றிவிட்டார் .ஒருபக்கம் தன்னையே நம்பி காத்திருக்கும் மையல் , இன்னொருபுறம் தனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாமன் .

மதன் அதற்கடுத்து எதுவும் பேசவில்லை . அவனுக்கு நன்றாய்த்தெரியும் . அவனுடைய வீட்டில் ஜாதிப்பிரச்சனை பெரிதளவில் இருக்குமென்பது நன்றாய் தெரியும் . அவ்வளவு ஏன் , அவனே நண்பர்களைக்கூட ஜாதிவாரியாகத்தான் பிரித்து வைத்திருந்தான் . காதலிக்கும்போது கூட அடிக்கடி மையலின் ஜாதியைக்கிண்டலடிக்காமல் இருக்கமாட்டான் . அவளும் இவனைப்போல் ஜாதி பார்த்திருந்தால் , இவர்களின் காதல் அப்போதே முடிந்திருக்கும் .  இனி யோசிக்க ஒன்றுமில்லை . கடைசியாய் ஒருமுறை மையலின் வீட்டில் மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான் என்றவாறு அவளின் வீடு நோக்கி தன் பைக்கை கிளப்பினான் .

கிளம்பும்முன் கண்ணனுக்கு போன் செய்து மையலின் வீட்டினருகே இருக்கும் டீக்கடைக்கு வருமாறு கூறியிருந்தான் . அவளின் வீடுநோக்கி செல்லும்போதெல்லாம் எதிர்காலத்தைப்பற்றிய பயத்துடன் தானிருந்தான் . அவனுடைய மாமாவிற்கு ஜாதியைக்காட்டிலும் அவனே முக்கியம் . இருந்தாலும் அவனுடைய கிராமம் முழுமையும் அவருக்கு அங்காளி , பங்காளி , மாமன் , மச்சான் உறவினராகவே இருந்தனர் . இவன் வேற்றுசாதிப்பெண்ணைத்திருமணம் செய்துவிட்டான் என்று அவர்கள் அறிந்தால் ஊருக்குள் தலைநிமிர்ந்து எங்கும் செல்லமுடியாது . தான் அவமானப்படுவதோடு மட்டுமில்லாமல் ‘தங்கை மகனை ஊர்ப்பொறுக்க வைத்துவிட்டான் . வளர்ப்பின் லட்சணம் இதுதானா ?’ என்று ஊரே அவமானப்படுத்தும் . தன் மகளுக்கு நாளை வரன்தேடினாலும் இந்த பிரச்சனை குறுக்கில் வரும் . இவனைக்காட்டிலும் இக்கட்டான சூழலுக்கு அவர்தான் தள்ளப்பட்டார் .

மதன் அவளின் வீட்டை அடைந்தான் . கண்ணனிடம் வெளியில் காத்திருக்குமாறு கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு சென்று காலிங்பெல்லை அடித்தான் . அவனுடைய அம்முவின் தங்கைதான் கதவைத்திறந்தாள் . அவள் மதனைப்பார்த்ததும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தாள் .

‘அச்சோ ! இங்க எதுக்கு வந்திங்க ? ஏற்கனவே நிறைய பிரச்சன ஓடுது .அப்பா வேற வீட்டுல இருக்காரு . தயவு செஞ்சு கிளம்புங்க ’ என்று அவள் கூறும்முன்பாக  அவளின் தந்தையின் குரல் வந்தது .

‘யாரும்மா ?’

‘யாருனு தெரிலப்பா  . ’ என்றவாறு அவள் கதவைவிட்டு வேகமாக அக்காவின் அறைக்கு ஓடினாள் . மதனைப்போலவே அவர்களும் நடுத்தட்டு வர்க்கம்தான் என்பது அவர்களின் வீட்டின் பெயிண்டின்வாயிலாகவே அறியமுடிந்தது .

‘யாருப்பா நீங்க ?’

‘சார் . நா உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் .’

‘உள்ள வாங்க ’ என்று அழைத்தவர் அவனை அமர சொன்னார் .

‘சொல்லுப்பா .’

‘சார் . எம்பேரு மதன் . ’ என்றவுடன் அவருடைய கண்கள் விரிந்தது . அவருடைய முகம் மாறியது நன்றாகவே தெரிந்தது .

‘நானும் உங்க பொண்ணும் லவ் பன்றோம் .’ என்று தட்டுத்தடுமாறி கூறிமுடித்தான் .

மையலின் தந்தை எதுவும் பேசவில்லை . அவளின் தாயோ ஒரு ஓரமாய் நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் .

‘அம்மா . இங்க கொஞ்சம் வாம்மா ’ என்று சத்தமாக யாரையோ அழைத்தார் . அதுவரை கதவருகில் நின்று நடப்பதை படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மையல் அவரின் அருகில் வந்து நின்றாள் .

‘இந்த பையன நீ லவ் பன்றியாமா ?’ என்றார் அழுத்தமாக .

அவள் தொடர்ந்து மௌனம் சாதித்தாள் .

சரி தம்பி . நீங்க உங்க வீட்டுல இருக்கவங்கள வர சொல்லி பொண்ணு கேளுங்க . எனக்குப்பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம் .என்றவாறு அவர் எழுந்து நின்றார் .

‘சார் . எங்க வீட்ல ….’

‘என்னப்பா ?’

‘எங்க வீட்டுல ஜாதி மாத்தி கல்யாணம் பன்றத ஏத்துக்க மாட்டாங்க சார் . ’

‘அப்றம் எப்டிப்பா ?என்ன பாத்தா மட்டும் இளிச்சவாயன் மாதிரி தெரியுதா ? சரி நீ வேல செய்ற ?’

‘படிச்சிட்ருக்கேன் சார் .பி.இ. பைனல் இயர் .’

‘ஓ ! நல்ல படிப்பு தான் . இவளுக்கும் இன்னும் 6 மாசம் இருக்கு படிப்பு முடிய . அதுக்குள்ள நீ உங்க வீட்ல பேசி அவங்க மனச மாத்து . அதுக்கப்றம் பாத்துக்கலாம் . ’ என்றவாறு அவனின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி உள்ளே சென்றார் . வந்த காரியம் ஓரளவு சக்ஸஸ் ஆனது மதனுக்கு சந்தோஷமாய்த்தானிருந்தது . எப்படியாவது அவன் வீட்டில் மட்டும் மனமாறம் செய்யவேண்டும் . கண்ணனிடம் நடந்ததைக்கூறிவிட்டு , ஓரளவு தெளிந்த மனதுடன் தன் வீட்டை அடைந்தான் . அவனுடைய மாமா ஒருமாதிரியாக அவனைப்பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை . காலையில் வழக்கம்போல பேருந்தில் அவளைச்சந்தித்தான் .  சந்தோஷ ரேகை அவனுடைய முகத்தில் மின்ன , அவளைத்தேடினான் . ஆனால் அவளோ இவனை்ககண்டும் காணதது போல் இருந்தாள் . அவளிடம் சென்று ஆசையாக இவன் பேச , அவள் பதிலேதும் சொல்லாமல் விரைத்தவாறு நின்றிருந்தாள் . மாலினியும் அதேபோலவே தான் இருந்தாள் . இவர்களிருவருக்கும் நடக்கும் சண்டையை தீர்த்துவைப்பவளே  அமைதியாய் இருந்தாள் . என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்தான் . மாலையிலும் அதேநிலை தான் . ஓரளவு கெஞ்சிப்பார்த்தவன் , கடைசியில் மையலிடம் கோவப்பட்டு கேட்டான் .

‘ஹே ஏன்டி பேசமாட்டேன்ற ?’
அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்தவள் பொறுமையாய் தெளிவாய்க்கூறினாள் .


‘எனக்கு உன்ன பிடிக்கல . இனிமேல் எங்கிட்ட பேசாத . என்ன தயவு செஞ்சு டிஸ்டர்ப் பண்ணாத .’

இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

Comments

  1. நண்பா சாரி தங்களோட தளத்தை ஏன் இணைத்துக்கொள்ள முடியவில்லை
    தொடர் ஏழையும் படிச்சிட்டு இந்த ஏழை வர்றேன் கருத்துரை போட... மீண்டும் சாரி

    ReplyDelete
    Replies
    1. Google Friend Connect - ல ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும்ணா . நா இப்போ சோதனை செஞ்சி பார்க்கிறேன் . ஏழையும் படித்துமுடித்துவிட்ட இந்த ஏழையிடம் தங்களின் மேலான கருத்துகளை தெரிவியுங்கள் அண்ணா .

      Delete
  2. பயமில்லால் பேசியதும் சுவாரஸ்யம்...

    மறுபடியும் டுவிஸ்ட்...?

    ReplyDelete
    Replies
    1. டுவிஸ்ட்டுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இன்னைக்கு வச்சிடுவேன் அண்ணா ! இன்னையோட கதைய முடிக்கனும் .

      Delete
  3. Google Friend Connect-யை ஒருமுறை நீக்கி விட்டு, Add a Gadget --> More Gadget சென்று, அங்கு கடைசியில் உள்ள Google Friend Connect-யை சேர்க்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னமாதிரியே செஞ்சுட்டேன்ணா ! சரியா இப்போ வேலை செய்யுதுனு நினைக்கிறேன் . நன்றிங்ணா !!!

      Delete
  4. அடுத்தது என்ன ,அறியும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் :)

    ReplyDelete
    Replies
    1. கிளைமேக்ஸ் நெருங்கிட்டோம்ல ! அதான் ணா

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை