சிறந்த பக்தன் - சிறுகதை
‘இன்றும்
ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன்.
‘கடலம்மாவிற்கு
நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத்
தேற்ற முயன்றான் களமன்.
அந்த
பெரிய மரக்கலம் ஆர்ப்பரிக்கும் வங்கக்கடலில் இரண்டு நாட்களாக ஊசலாடிக்கொண்டிருந்தது.
இருப்பினும் இன்னும் ஒரு மீனைக்கூட பிடிக்கமுடியவில்லை.
‘என்ன
சிந்தனை முத்தண்ணா?’
‘எல்லாம்
உன் தமக்கையை எண்ணித்தான்.’
‘அவளுக்கென்ன?
பரதவர்களில் வலிமையான உமக்கல்லவா மணம்புரிந்து கொடுத்துள்ளோம். பின் என்ன கவலை?’
‘நீ
அறியாததா? இக்கடல்மாதா தொடர்ந்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். பாவம் என்னவள்;
பசிப்பிணி எனும் பாவியால் சூழப்பட்டிருப்பாள். ’
‘இது
இறைவனின் திருவிளையாடலேயன்றி வேறெண்ண சொல்ல?’
‘நம்
தலைவர் ஏதோ குற்றம் புரிந்திருப்பாரென்று நினைக்கிறேன்’
‘என்ன
மூடத்தனமிது? நம் பரதவக்குலத்தலைவர் மீது பழிசுமத்தினால் உண்ண ஒருபருக்கை நெல்லும்
கிடைக்காது முத்தண்ணா’
‘இப்போது
மட்டும் இங்கே என்ன வாழ்கிறது?’
‘சரி
வா. வீசிய வலையை எடுக்கலாம். ’ என்றவாறே இருவரும் அங்கிருந்து கலத்தின் ஓரத்தினை அடைந்தனர்
அவர்களிருவரும் சோழமண்டலத்தின் ஆளுகைக்குட்பட்ட நாகை மாவட்டத்தின் தென்கோடி முனையிலிருக்கும்
சிற்றூரான முளைப்பாடியில் வசித்துவரும் பரதவ குலத்தோர். சில நாட்களுக்கு முன் வரை கடல்தாயின்
அருளால் அளவிடற்கரிய மீன்கள் பிடித்து பசியெனும் சொல்லின் பொருளறியாது சிறப்பாக வாழ்ந்துவந்த
குடியினர். ஆனால் இப்போதோ ஒருவேளை உணவிற்கு வழியில்லாமல் பழங்கருவாடுகளையும் வீட்டிலுள்ள
பெண்டுகள், குழந்தைகளின் நகைகளையும் விற்று வயிற்றை நிரப்பிவந்தனர். ஏறத்தாழ அச்செல்வமும்
தீர்ந்து போய் அடுத்தவேளை உணவிற்கு என்ன செய்வதென்று அச்சத்துடன் வாழ்ந்துவருகிறார்கள்.
தம் வாணிகம் சார்ந்த மருதநிலத்தில் வாழும் உற்றார், உறவினரிடம் கடன் வாங்கவும் அவர்களுக்கு
மனம் வரவில்லை. இயற்கையின் அதிசயம் அவ்வப்போது கெடுதலாகவும் முடியும் என்பதை அவர்களுக்கு
உணர்த்தும்படியாக கடந்த ஒருமாத காலம் இருந்தது.
கடல்
தாய் இவ்வளவிற்கும் எதுவும் தராமல் விடவில்லை. ஆரம்பத்தில் பல மீன்களிலிருந்து சிலவாக்கி
தற்போது தினமும் ஒரே ஒரு பெரியமீன் மட்டும் எண்ணித் தருகிறாள். அவ்வொரு மீனையும் அதிதீவிர
சிவபக்தனாகிய முளைப்பாடி பரதவர்களின் தலைவன் கடலில் விட்டுவிடுகிறான். ஏதோ அம்மீனை
வைத்து தாணுன்னா விட்டாலும் தன் குழந்தைகளாவது உண்டு பசியாறும் என்றெண்ணிய அங்கிருந்த
குடும்பங்களுக்கு இது பேரடியாக இருந்தது.
வலையில்
ஏதோ சிக்கியது போலுணர்ந்தான் முத்தண்ணா.
‘மைத்துனனே!
ஏதோ பெரும் திமிங்கலம் சிக்கியுள்ளது என எண்ணுகிறேன்’ என்று கூறிய முத்தண்ணாவும் அவன்
மைத்துனனும் சிரமப்பட்டு வலையை இழுத்தார்கள். இருவரும் வலையில் துடித்துக்கொண்டிருந்த
அந்த மீனைப் பார்த்து அதிசயித்து நின்றனர். தங்கள் வாழ்நாளில் அப்படியொரு மீனை அவர்கள்
பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். தங்கத்தால் ஆன உடலில் ரத்தினங்களால் ஆன செதில்களும்,
மாணிக்கத்தால் ஆகிய கண்ணும், வைர, வைடூரியத்தால் ஆன வாலுமென அது ஒரு புதையலாய்க் காட்சியளித்தது.
‘முத்தண்ணா!
இவ்வதிசயத்தைப் பார்த்தாயா? யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு நமக்கு கிட்டியுள்ளது.’
‘ஆம்
மைத்துனனே! இதைக் கொண்டு சென்று புகாரில் விற்றால் பெரும்பொருள் கிடைக்கும். அதைக்கொண்டு
நம் குலத்தோர் இன்னல்களைத் தீர்த்துவிடலாம்’
‘ஏன்
இப்படி உன் சிந்தனை மாறிப்போகிறது? கடலில் கிடைக்கும் பொருளை நம் தலைவனிடம் சமர்பிக்கவேண்டுமென்று
தெரியாதா உனக்கு?’
‘சொல்வதைக்
கேள் களமா. நம் தலைவரிடம் இதைக்கொண்டு சென்றால் இதையும் கடலில் விட்டுவிட்டு, சிவபெருமானே
உனையும் உணர்வேன் நன்காய் எனப்பாடத்துவங்கி விடுவார். என் பேச்சைக் கேள். பொருளீட்டினால்
ஒழிய உன் தமக்கையையும் அவளின் மகனையும் இன்றிரவு பசியினில் இருந்து காக்க முடியாது.’
‘உடல்
வாடினாலும் பசிமீறினாலும் வழிமாறாமலே வாழ்ந்திடுவோம் முத்தண்ணா.’
அதற்குமேல்
முத்தண்ணாவினால் பேச முடியாமல் போய்விட அக்கலம் கரையை நோக்கித் திரும்பியது. அந்த நவரத்தின
மீனைப் பார்த்தவாறே திக்கில் ஆழ்ந்திருந்த முத்தண்ணன், தன் மைத்துனன் களபனிடம் கேட்டான்.
‘ஒருவேளை
இதையும் நம் தலைவன் கடலில் விட்டுவிட்டால்?’
‘அவரை
வெட்டி கடல்மீன்களுக்கு உணவாய்ப்போடவும் அஞ்சேன்’ என்றான் களபன்.
கரை
வந்தடைந்த இருவரையும் எதிர்பார்த்து அவர்களின் குடும்பம் காத்திருந்தது. அவர்கள் இருவரும்
ஒருசேரத் தூக்கிவந்த நவரத்தின மீனைப் பார்த்ததும் அங்கிருந்த நெய்தல்நில பரதவர்கள்
அதிசயத்து நின்றனர். ஊரே ஒன்று கூடியது.
‘எம்மக்களே!
இம்மீனைப் புகார்ப்பட்டிணத்திலோ மதுரை அறுவை வீதியிலேயோ விற்றால் பெரும்பொருள் கிடைக்கும்.
அப்பொருள்கொண்டு நம் துயர் தீர்த்துவிடலாம். ஆனால்,’ என்றவாறே இழுத்தான். அவன் இழுத்த
ஆனாலின் அர்த்தம் அங்கிருப்பவர்களுக்கும் தெரியும்.
‘அப்படியாகாது
முத்தண்ணா. நம் தலைவரிடம் பேசிப்பார்க்கலாம். ஏற்றுக்கொள்ளவில்லையெனில் நாம் ஒருசேர
அவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். வாயினால் அல்ல; கையினால்’ என்றான்
கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன்.
அக்கூட்டத்திலுள்ளோர்
அம்முடிவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பரதவக்குடித் தலைவனின் தாழைமடல் குடிலை அடைந்தனர்.
‘பரதவக்குடி
காக்கும் பெருமானே! வெளியே வரவும்.’
உள்ளேயிருந்து
அமைதியே உருவெடுத்த சிவபக்தனும் பெரும் வீரனுமான தலைவன் வெளியே வந்தான். கடந்த சில
நாட்களாக உண்ணாமல் இருந்ததால் அவனின் முகம் வாடியிருந்தாலும் அம்முகத்தின்வழி ஒழுகும்
கருணை ஒளி, அன்பைப் போதிப்பதாய் இருந்தது. வெளியே நின்றவர்கள் அவனிடம் நடந்ததைக் கூறி
மீனை ஒப்படைத்து அதைவைத்து தங்கள் துன்பத்தை நீக்கவேண்டும் என்றும் வேண்டினர். அம்மீனைப்
பார்த்த தலைவன் ,
‘சிறந்வையெல்லாம்
தென்னாடுடைய எம்பெருமானுக்கே அர்ப்பணம்’ என்று கூறிவிட்டு நேராய் கடலில் சென்று அதை
விட்டான். சிறையிலிருந்து விடுபட்ட கைதிபோல் மிகவேகமாக கடலில் சென்று அம்மீன் மறைந்தது.
குழுமியிருந்த கூட்டத்தினரின் முகத்தில் கோபம் கொப்பளிக்க, மக்கள் அனைவரும் ஒருசேர
அத்தலைவனை நோக்கி வந்தனர். அப்போது வானில் பிரகாசமான ஒளி அத்தலைவன் மீது பரவ, அசரீரி
‘அதிபத்தா’ என்றது. கூடியிருந்தவர்களின் வயிறும், மனமும் நிறைந்தது.
நன்றி
– அதிபத்தர் வரலாறு, பெரியபுராணம்.
புராண காலத்தில் அருள் பாலித்த இறைவன் ,இப்போது எங்கே இருக்கார்ன்னு தெரியலே :)
ReplyDeleteசிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590