FORREST GUMP – ஒரு பார்வை



life was like a box of chocolates. 
You never know what you're going to get.



இந்த படத்தின் பெயரைப்பார்த்ததும் , ஒரு அடர்ந்த காடு , அங்கே செல்லும் ஒரு இளைஞர் பட்டாளம் . அங்கிருக்கும் ஒரு விநோதமான ஜந்துவின் தாக்குதல் . ஸ்லீவ்லெஸ்சும் , மினிஸ்கர்ட்டும் அணிந்த ஹீரோயின் மாத்திரம் கடைசியில் தப்பிப்பிழைப்பார் என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . ஏனெனில் இது ஒரு படமல்ல ! பாடம் . வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை கண்முன் நிறுத்தும் ஹீரோவின் பெயர் தான் ஃபாரஸ்ட் கம்ப் . அது என்ன பெயர் ? இவ்வளவு வித்தியாசமாக ? ஃபாரஸ்ட்டு , ஹில்ஸ்-னு லாம் யோசிக்காதிங்க . தன்னுடைய பெயருக்கான காரணத்தையும் இந்த ஃபாரஸ்ட் நம்மிடம் பகிர்ந்து கொள்வார் .

உடனே ஃபாரஸ்ட் என்பவர் கருணையுள்ளம் கொண்ட கோடிஸ்வரராகவோ , நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு மாவீரனாகவோ , மாபெரும் கல்வியாளனாகோவா , வாரி வழங்கும் வள்ளலாகவோ , தன் குடும்பத்திற்காக உயிரைக்கொடுக்கும் பாசக்காரனாகவோ கருதவேண்டாம் . அவன் மிகவும் சாதாரணமானவன் . இன்னும் சொல்லப்போனால் , இந்த பதிவைப்படித்துக்கொண்டிருக்கும் உங்களையும் , எழுதிய என்னையும் விட குறைந்த IQ திறன் உள்ளவர் .


படத்தைப்பற்றி பார்க்கும்முன் உங்களிடம் சில கேள்விகள் .

1.   உங்கள் நண்பர் , உங்களிடம் ஒரு தொழிலைப்பற்றி கூறுகிறார் . ஐடியா முழுதும் அவருடையது. திடீரென அவர் இறந்துவிடுகிறார் .நீங்கள் அவர் சொன்னத் தொழிலைத் தொடங்கி , கடினமாக உழைத்து மாபெரும் பணக்காரர் ஆகிவிடுகிறீர்கள் .  இறந்த உங்களின் நண்பருக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் ?

2.   நீங்கள் மனப்பூர்வமாய் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள் . அவளும் உங்களைக் காதலிக்கிறார் எனினும் சில காரணங்களால் அதைத்தெரியப்படுத்தாமல் உங்களை விட்டுச் செல்கிறார் . அவரைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சந்திக்கிறீர்கள் . அப்போதும் நீங்கள் காதலித்தபோது இருந்த மாதிரியே அவளின் குணம் இருந்தும் , அவளின் பழக்கவழக்கங்கள் , நடவடிக்கைகள் , சேர்க்கைகள் தவறாக இருக்கின்றது . அவளின் சூழ்நிலை உங்களுக்கு நன்றாய்த்தெரியும் . அவள் ஏன் அம்மாதிரி ஆனாள் என்பதும் உங்களுக்குத் தெரியும்  என்றால் , அந்நேரத்தில் என்ன செய்வீர்கள் ?


3.   நீங்கள் நாட்டிலேயே பெரும் பணக்காரர் . அதை ரோட்டில் போகும் ஒருவரிடம் சொல்லும்போது அவர் நம்ப மறுக்கிறார் . அப்போது என்ன செய்வீர்கள் ?

சரி , படத்திற்கு வருவோம் .



ஒரு இறகு  காற்றில் பறந்து வருகிறது . அது நிலத்தை வந்தடையும் இடம் ஒரு பேருந்து நிறுத்தம் . அந்த இறகைக் கையிலெடுப்பவன் தான் கம்ப் .  அதை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்கிறான் . அவன் அருகில் ஒரு பெண்மணி , பேருந்துக்காக காத்திருக்கிறாள் . அவளுடைய ஷூவைப்பார்க்கிறான் கம்ப் . பின் அவளிடம் தன் கதையை விளக்குகிறான் . அதாவது அவனுடைய முதல் ஷூ அனுபவம் .

சிறுவயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் , தன்னிச்சையாக நடக்கும் திறனை இழக்கிறான் கம்ப் .தந்தையில்லாத கம்பிற்கு  தாய் தான் எல்லாம் . அவனுடைய தாய்க்கும் உலகமே மகன் தான் . மருத்துவர் உதவியுடன்  LEG BRACE எனப்படும் ஷூவைக் காலில் அணிந்துகொள்கிறான் . அதன் உதவியுடன் தான் நடக்கவும் செய்கிறான் . கம்ப்பிற்கு பள்ளிவயது வந்ததும் , அவனுடைய தாய் பள்ளியில் சேர்க்க முயல்கிறாள் .அதற்காக அவ்வூரிலேயே மிகப்பெரிய மற்றும் திறமையான பள்ளியை அனுகுகிறாள் . ஆனால் அவனுடையக் குறைவான IQ திறை காரணம் காட்டி , அவனை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார் பிரின்சிபால் . அவரிடம் மன்றாடும் கம்ப்பின் தாய் , கடைசியில் தன் உடலை பிரின்சிபாலுக்கு இரையாக்கி , கம்ப்பைப் பள்ளியில் சேர்க்கிறாள் . இதை அறியும் திறனற்றவன் தான் கம்ப் .


முதல்நாள் பள்ளிக்குச்செல்ல , பள்ளி வேனில் ஏறுகிறான் . அங்கு நம்மைப்போல இருக்கும் சில சிறுவர்கள் , நடக்கும் திறனற்ற அவனுக்கு அமர இடமளிக்க மறுக்கிறார்கள் . அப்போது தான் ஜென்னியைப் பார்க்கிறான் . ஜென்னி ஒரு ஏழைக்குடும்பத்தைச் சார்ந்தவள் . பொறுப்பற்ற தந்தை . தாயில்லாமல் வளரும் அவள் அன்புக்கு ஏங்குகிறாள் . ஜென்னியும் கம்ப்பும் , நல்ல நண்பர்களாகின்றனர் . ஒருமுறை மாணவர்கள் சிலர் கம்பைக் கல்லால் அடிக்க , அவனை ஓடுமாறுப் பணிக்கிறாள் ஜென்னி . ஃபாரஸ்ட் ஓட ஆரம்பிக்கிறான் . அதுவரை கம்பிகள் உடைய ஷூவுடன் ( நடக்கும் திறனற்றவர்கள் அணியும் LEG BRACE) நடக்கும் பாரஸ்ட் , அதன்பின் நன்றாக நடக்க ஆரம்பிக்கிறான் . வருடம் ஓடுகிறது .  அதேபோல் மாணவர்கள் கல்லால் அடிக்க , பாரஸ்ட் ஓடுவதும் தொடர்கிறது . அப்படி ஒருமுறை பாரஸட் ஓடுவதைப்பார்க்கும் PT கோச் , அவனை பள்ளியின் ரக்பி அணியில் சேர்த்துக்கொள்கிறார் . இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க . கம்ப்பிற்கு ரக்பியைப்பற்றி எதுவும் தெரியாது . அவனை ஓடச்சொன்னால் , அவன் ஓடுவான் . நன்றாக ஓடுவான் . மிகவும் வேகமாக ஓடுவான் . அவ்வளவு தான் .

தேசிய அளவில் ரக்பி அணியில் இடம்பிடிக்கும் பாரஸ்ட் , ஒரு கல்லூரியில் சேர்கிறான் . அதேநேரம் , தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை , அதிபர் கௌரவப்படுத்த ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் . அங்கே செல்லும் அவனுக்கு திடீர் என சூச்சு வந்துவிடுகிறது . அதேநேரம் அதிபர் அவனிடம் வந்து ‘நீங்கள் எப்படி உணருகிறீர்கள் ?’ எனக்கேட்கிறார்  நாமாக இருந்தால் , ‘முகவும் பெருமையாக உணர்கிறேன் . தங்களைச் சந்தித்தில் மிகவும் சந்தோஷம் ’ என சொல்லுவோம் . ஆனால் கம்ப் அப்படியல்ல . யார் பெரியவர்கள் ? யாருக்கு மரியாதைக்கொடுக்க வேண்டும் ? எந்த இடத்தில் எப்படிப்பேச வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது . ‘எனக்கு அவசரமாக ஒன்னுக்கு வருகிறது’ என்று அதிபரிடம் கூறிவிட்டு , பாத்ரூமுக்கு ஓடுவான் .


அதேநேரம் தந்தையை விட்டு பிரிந்த ஜென்னி , மகளிர் கல்லூரியில் படிக்கிறாள் . அவள் தன்னுடைய செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள் . அப்போது அவளைக்காண வருகிறான் ஃபாரஸ்ட் .  அவனுக்காக தன் உடலைத்தர வருகிறாள் ஜென்னி . ஆனால் உடலுறவைக்கூட புரிந்து கொள்ளமுடியாத கம்ப் , மிரள்கிறான் .

கல்லூரி வாழ்க்கை முடிகிறது . அதேநேரத்தில் அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபட்டிருக்க , ராணுவத்தில் கட்டாய சேவை செய்யுமாறு ஒரு சட்டம் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டது . கம்ப் ராணுவத்தில் சேர்கிறான் . அங்கே புப்பா என்பவனைச் சந்திக்கிறான் . புப்பாவிற்கு மீன் பிடிப்பதில் தான் ஈடுபாடு . அவனுடைய குடும்பம் மீன்பிடி தொழிலைச்சார்ந்தது . புப்பாவின் பேச்சு எப்போதும் மீன்களைப்பற்றியும் , மீன்பிடித்தொழிலைப்பற்றியுமே இருக்கிறது . பின் இருவரும் வியட்நாமிற்கு அனுப்பபடுகிறார்கள் . அங்கே இவர்களின் மேலதிகாரியாய் டேன் என்பவர் இருக்கிறார் . அவர் குடும்பமோ , நாட்டிற்காக பரம்பரை பரம்பரையாக உயிர்நீத்தவர்கள் . ஒரு கட்டத்தில் எதிரி அணியினர் தாக்க , அப்போது டேன் கம்ப்பைப்பார்த்து ஓடுமாறு சொல்கிறார் .கம்ப் ஓடித்தப்பிக்கிறான் . ஆனால் அவசரத்தில் புப்பாவை மறந்துவிடுகிறான் . அதனால் புப்பாவைத்தேடி மீண்டும் செல்கிறான் . ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் செல்லும் வழியில் ,காயம்பட்ட மற்ற வீரர்களைக் காண்கிறான் . அவர்களைத்தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றுகிறான் . அதேபோல் டேன்-னும் அடிபட்டு கிடக்கிறார் . அவரைத்தூக்க செல்லும் கம்ப்பை வேண்டாமென்று டேன் உத்தரவிடுகிறார் .அவர் இருகால்களையும் இழந்துவிடுகிறார் .தன் உயிர் போர்க்களத்தில் சென்றால் தான் மரியாதை என கெஞ்சுகிறார் . கடைசியில் டேன்னையும் காப்பாற்றி விடுகிறான் கம்ப் . ஆனால் புப்பா இறந்துவிடுகிறான் .


இருகால்களையும் இழந்த டேனை , ராணுவம் விடுவிக்கிறது . போரின்போது சக வீரர்களைக்காப்பாற்றிய கம்ப்பிற்கு அதிபர் கையால் விருது கிடைக்கிறது.  ‘உனக்கு எங்கே அடிபட்டது ’  என கேட்கும் அதிபரிடம் , தன்னுடைய பின்புறத்தைக்காட்டுகிறான் கம்ப் . பின் ஓய்வின்போது டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகுகிறான் . அதிலும் அவனுடைய உண்மையான உழைப்பைக்காட்ட , மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் ப்ளேயர் ஆகுகிறான் . அதிலிருந்து அவனுக்குக் கிடைத்த பணத்தைவைத்து புப்பாவின் கனவான மீன்பிடி படகை வாங்குகிறான் . அந்நேரத்தில் டேன்-னை சந்திக்கும் கம்ப் , தன்னுடன் பார்ட்னராகும்படி டேன்னை வேண்டுகிறான் . இருவரும் சேர்ந்து மீன்பிடித்தொழிலை ஆரம்பிக்கிறார்கள்  . அவர்களின் அதிர்ஷ்டம் , அமெரிக்காவில் ஒரு HURRICANE புயல் தாக்க , அந்நேரத்தில் பெரும்பாலான படகுகள் எல்லாம் அழிந்துவிடுகிறது . இவர்கள் இருவரும் மீன்பிடித்தொழில் பெரும் பணக்காரர்கள் ஆகின்றனர் . டேன் , பணத்தை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் . அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் பாதியை , கம்ப் புப்பாவின் குடும்பத்திற்கு வழங்குகிறான் .


அதேநேரம் , ஜென்னியோ அன்றைய அமெரிக்காவின் ஹிப்பிக்கலாசாரத்தில் மாட்டிக்கொள்கிறாள் . அதாவது , இசைக்குழு என்ற பெயரில்  போதைமருந்து , விபச்சாரம் போன்றவற்றுள் அன்றைய அமெரிக்க இளைஞர்கள் பலர் மாட்டினர் . அவர்களின் கலாச்சாரமே ஹிப்பி என்றழைக்கப்பட்டது . மீண்டும் ஜென்னியை சந்திக்கிறான் . அதேநேரம் கம்ப்பின் தாய் இறந்துவிடுகிறாள் . ஜென்னி , கம்ப்புடன் இருபதாக கூறி ஒருநாள் மட்டும் அவனுடன் தங்குகிறாள் . அடுத்தநாள் கம்ப்பிடம் சொல்லாமலே சென்றுவிடுகிறாள் .


தாயும் இல்லை , தாயிற்கு அடுத்தவளும் இல்லை என்ற நிலையில் கம்ப் , ஓட முடிவெடுக்கிறான் . அவனுக்குத்தேவை மனநிம்மதி . அம்மாதிரியான சூழலில் நம்மில் பலர் டாஸ்மாக்கில் மூழ்கிக்கிடப்போம் . கம்ப்போ ஓடுகிறான் . மொத்த அமெரிக்காவையும் சுற்றி ஓடுகிறான் . கிட்டத்தட்ட  3 வருடங்களுக்கு மேல் ஓடுகிறான் . அவன் உலக அமைதிக்காக ஓடுகிறான் , எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஓடுகிறான் என்று பலர் பலவிதமாக பேசுகின்றனர் . ஆனால் , அவனுக்கு ஓடவேண்டும் என்று தோன்றியதால் தான் ஓடுகிறான் என்பது யாருக்கும் புரியவில்லை . அவன் ஓடுவதைப்பார்த்து அவனுடன் ஒரு கூட்டமும் ஓடுவருகிறது . திடீரென தன்னுடைய ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான் . வீட்டிற்குத்திரும்புகிறான் . அங்கே ஜென்னியின் கடிதம் சிக்குகிறது . ஜென்னியைத்தேடி , அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்திருக்கிறான் .


இவையெல்லாம் அந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு , கம்ப் அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டிருக்கிறான் .யார்ர கேட்டாலும் பரவாயில்லை , கேட்கவில்லையெனினும் பரவாயில்லை . அவனுக்கு அவன் கதையைச் சொல்லவேண்டும் எனத்தோன்றியதால் சொல்கிறான் .

கடைசியில் ஜென்னியைச்சந்திக்கிறான் . கூடவே தன் 4 வயது மகனையும் தான் . பின் ஜென்னியைத் திருமணம் செய்துகொள்கிறான் . டேன் தன்னுடைய செயற்கைக்காலுடன் , தன் வருங்கால மனைவியுடன் கம்ப்பின் திருமணத்திற்கு வருகிறார் . தன்னைக்காப்பாற்றியதற்கு நன்றி கூறுகிறார் . சில நாட்களில் எய்ட்ஸ் நோயால் ஜென்னி இறந்துவிடுகிறாள் . அவளின் கல்லறை முன் நின்று , தன் வாழ்க்கையில் மிகமுக்கியமானவர்களைப்பற்றி பகிர்ந்துகொள்கிறான் கம்ப் . பின் தன் மகனை , பள்ளிவேனில் ஏற்றிவிட்டு அவன் வருகைக்காக காத்திருக்கிறான் கம்ப் . அவன் காலடியில் ஒரு இறகு . அது மெல்ல வானத்தை நோக்கிப் பறக்கிறது . நம் மனதிலும் தான் . பாடம் முடிகிறது .

இப்போது கம்ப்பின் நிலையில் நாமிருந்தால் என்ன செய்திருப்போம் ?

மொத்தத்தில் நம் பார்வையில் , கம்ப் கிட்டத்தட்ட ஒரு முட்டாள் போன்றவன் தான் . ஒன்றுமே தெரியாத ஒரு வடிகட்டிய முட்டாள் . ஆனால் அவன் வாழ்க்கையில் பல சாதனைகளைச்செய்திருக்கிறான் . இத்தனைக்கும்  அவன் அதற்காக ஒன்றுமே செய்யவில்லை . தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மனமுவந்து செய்தான் . அதில் முழு ஈடுபாட்டுடன் இருந்தான் . வெற்றி வந்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவில்லை . பிறர் கேலி பேசியதால் மனமுடைந்து போகவும் இல்லை . தான் நேசிப்பவர்கள் தனக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவன் பேராசைப்பட்டதில்லை . பிறருக்காக தன்னை அவன் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளவில்லை . தனக்கு அது தெரியவில்லை , இது தெரியவில்லை என்று எப்போதும் வருந்தியதில்லை . தெரியாததை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டான் . தெரிந்ததை ஊருக்கல்லாம் தம்பட்டம் அடிக்காமல் தன்னுடன் நிறுத்திக்கொண்டான் .மற்றவர்கள் புகழும்போது பெருமிதம் அடையவில்லை . அதேநேரம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை நினைத்துநினைத்து வருந்தி , தன்னைத்தானே சமரசம் செய்துகொள்ளவில்லை . தாயைத்தெய்வமாய் கருதினான் . காதலியை உயிராய் நினைத்தான் . நண்பர்களை இமைபோல் எண்ணினான் . பணத்தைத்தூசியாய் நினைத்தான் . புகழை ஏற்று பணத்தை விரும்பும் நமக்குக்கிடைக்காத இவ்விரண்டும் அவனுக்கு கிடைத்ததற்கு்க காரணம் அவன் இவையிரண்டையும் வாழ்வில் பெரிதாய்க் கொள்ளவில்லை என்பதாலேதான் .

இத்தனைக்கும் அவனுக்கு ஆகச்சிறந்த ஆசான் தந்தையில்லை . உடலைத்தனக்காகவே  வைத்திருக்கும் ஆசாரமான காதலியில்லை . நண்பர்கள் பட்டாளம் இல்லை . கோடிக்கணக்கான சொத்து இல்லை . மாபெரும் படிப்பில்லை. MNC – யில் வேலையில்லை என பல இல்லைகள் சொல்லிக்கொண்டே போகலாம் . அதேநேரம் அவனிடம் பொறாமை இல்லை . போட்டி இல்லை . துவேசம் இல்லை . போலித்தனமும் இல்லை .



அடுத்து ஜென்னி . இவளுடைய வாழ்க்கையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியக்கட்டாயம் உள்ளது . ஜென்னி ஏன் அவ்வாறு மாறவேண்டும் ? சிறுவயதிலேயே தந்தையினால் மனதளவில் பாதிக்கப்பட்டவள் . அவளுடைய சிறுவயது ஆசையெல்லாம் தனக்கு தேவதைகளுக்கு இருப்பதுபோன்று சிறகு இருந்தால் எங்காவது பறந்துவிடலாம் என்பதே . தந்தையின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்த அவளுக்கு , மனப்பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியவில்லை என்பதே உண்மை . அதன் காரணமாய் தான் போதைப்பொருளுக்கு அடிமையாவது , அப்போதை மருந்துகளை வாங்குவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்றவைகளைத்தொடர்ந்து எய்ட்ஸால் இறக்கிறாள் . நம் நாட்டிலும் சிறுவயதிலே பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகும் குழந்தைகளின் மனநிலையை இதனுடன் ஒப்பிடலாம் .

படத்தின் பல காட்சிகளில் பலவிதமான குறியீடுகள் ஒழிந்திருப்பதைக்காணலாம் . அமெரிக்க வரலாறு நன்கறிந்தவர்கள் , அதனை கண்டுபிடிக்க இயலும் . வாட்டர்கேட் ஊழல் , ஆப்பிள் நிறுவனத்தின் அசுரவளர்ச்சி, கென்னடி மன்றோ விவகாரம் , அதிபர்களின் தொடர்கொலைகள் , வியட்நாம் போர் , அமெரிக்க – சீன உடன்படிக்கை போன்று எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் .

படத்தில் பாரஸ்ட் கம்ப்-ஆக வாழ்ந்தவர் டாம் ஹேங்ஸ் . இந்த மனிதரைப்பற்றிய தனிப்பதிவு ஒன்று எழுதப்போவதால் ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறேன் . கடந்த இரு நூற்றாண்டுகளிலும் இவரைப்போன்று ஒரு மகோன்னதமான நடிகன் கண்டிப்பாய் உலகில் எங்கும் இருக்கமுடியாது . கெட்டப் சேஞ்ச் பன்றதில்லை , வித்தியாசமான நடிப்பு தருவதில்லை , ஒரேமாதிரியான நடிப்பு என்று எத்தனைக்குற்றச்சாட்டுகள் வைத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் . இவரின் கண் இமைகள் கூட நடிக்கும் .

இந்த படத்தைப்பற்றி எழுத்துகளால் வர்ணிக்கமுடியாது என்பதே உண்மை . பார்த்து மனதால் உணரக்கூடிய திரைப்படம் இது . இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும் . அழவைக்கும் . வலியில் ஆழ்த்தும் .சந்தோஷமானதொரு உணர்வினைக்கொடுக்கும் . பார்த்து முடித்ததும் , இவரைப்போல் நாமும் இருக்கவேண்டும் என்று ஒருமுறையாவது உங்களை நினைக்கச்செய்யும் . பொறுமையாக பாருங்கள் . அதேநேரம் அமைதியாய் பாருங்கள் .

படத்தில் நடித்தவர்கள் , வசனம் , திரைக்கதை , மூலநாவல் ,சிஜி , ஒளிப்பதிவு , வாங்கிய விருதுகள் (6 ஆஸ்கார்) போன்றவைப்பற்றி எழுதினால் இன்னும் பத்து பக்கங்கள் எழுதவேண்டி வரும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் . இயகுநர் ராபர்ட் செமிக்ஸ் மற்றும் டாம் ஹேங்சைப்பற்றிய பதிவு ஒன்றை தனியாய் எழுதுவதால் இத்துடன் விமர்சனத்தைமுடித்துக்கொள்கிறேன் . நீண்ட நாட்களாய் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த பதிவு இது .  மேலும் இந்த படத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள விக்கிலிங்க்கில் கிளிக்குங்கள்

life was like a box of chocolates. 

You never know what you're going to get.






தொடர்புடைய இடுகைகள்










Comments


  1. Dear Sir,

    Thanks for your review!!!

    ReplyDelete
  2. விமர்சகர்களால் கொண்டாடப் படும் படம் இது ...
    நல்ல அறிமுகம் ...
    நன்றி

    ReplyDelete
  3. அருமையான படம். விமர்சனமும் அருமை. நன்றி.

    ReplyDelete
  4. உங்கள் விமர்சனம் மறுமுறை படம் பார்த்துதது போல உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை