என்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்





எச்சரிக்கை – இது முழுக்கமுழுக்க தல மற்றும் கௌதம் பற்றிய பதிவு . தல ரசிகர்கள்  மட்டும் தொடர்ந்து படிக்கவும் .


ஒரு ஹீரோவின் ரசிகராய் இருக்கும் விமர்சகன் , அந்த ஹீரோவின் முதல்நாள் முதல் காட்சியைப்பார்த்துவிட்டு விமர்சனம் எழுதவேண்டும் என்று துடிப்பதில் ஆச்சரியமிருக்காது . அதுவும் மிகப்பிடித்த ஒரு இயக்குநரின் படத்தில் , மிகமிகப்பிடித்த நடிகர் நடித்த படம் வெளியானால் சொல்லவேண்டுமா ? ஒரு திரைப்பட விமர்சகனாய் எத்தனையோ படங்களுக்கு விமர்சனம் எழுதியிருந்தாலும் தல படத்துக்கு எழுதும் விமர்சனம் தான் எனக்கு மனநிறைவைக்கொடுக்கும் . காரணம் அஜித் எனும் நடிகனைக்காட்டிலும் அஜித் எனும் மனிதனை அதிகமாய் விரும்பும் ரசிகனுள் நானும் ஒருவன் . இதுதான் என்னுடை முதல் ‘தல’ விமர்சனம்  , அதனால் கொஞ்சம் ஸ்பெஷல் மற்றும் அதிகம் .

ட்ரென்ட் செட்டர் எனும் ஆங்கில வார்த்தை அடிக்கடி தற்போதைய தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுகிறது . கொஞ்சம் பொறுமையாய் யோசித்தால் , ட்ரென்ட் செட்டர் என்பதன் தற்கால தமிழ்சினிமாமுன்னோடி ‘தல’ என்பது புரியும் . பில்லா திரைப்படத்தின் ட்ரெய்லரும் அதைத்தொடர்ந்த ஓபனிங்கும் சூப்பர்ஸ்டாருக்கு சமமாய் இருந்தது எனலாம் . பில்லா திரைப்படத்தின் இசைத்தகடு வெளிவந்தபோது , சொங்கிக்கிடந்த ஆடியோக் கம்பனிகளின் விற்பனை மறுபடியும் சூடுபிடிக்கத்துவங்கியது .எங்களின் சிற்றூரில் இருக்கும் மூன்று திரையரங்குகளில் , முதன்முறையாக இரண்டு தியேட்டர்களில் ஒரேநேரம் ரிலிசான படம் பில்லா . அடுத்து ‘மங்காத்தா’வின் வழியேதான் டீசர் எனும் முன்னோட்ட ட்ரைலர் பயங்கரமாக பரவ ஆரம்பித்தது . ரஜினிக்குப்பின் ஆன்டிஹீரோ எனும் அந்தஸ்து அஜித் என்பவருக்கு மட்டும்தான் பொருந்தும் என உலகறியச்செய்த படம் மங்காத்தா. சூப்பர்ஸ்டாரே , என்னுடைய படத்திற்கு வில்லனாக அஜித் இருக்கவேண்டும் என்று பேட்டிகொடுத்திருந்தார் . எங்கு பார்த்தாலும் மங்காத்தாடா என்று பட்டிதொட்டியெங்கும் பட்டாசு கிளப்பிய திரைப்படம் அது . தலயின் 50 என்பதாலோ என்னவோ , தமிழ்நாட்டின் திரையரங்குகளில் மங்காத்தா வெளிவந்தபோதுதான் உண்மையான திருவிழாக்கள் நடந்தது. அதனைத்தொடர்ந்து பில்லா -2 டீசர் ,YOUTUBE -ல் இந்திய அளவில் ரெக்கார்டு பிரேக் . உலகளவில் அதிக திரையரங்குகளில் வெளியான முதல் இந்தியப்படம் , ரஷ்யாவின் ஜார்ஜியாவில் கூட படம் ரிலிஸ் என்று அதிரவைத்தது. அதைத்தொடர்ந்து ஆரம்பம் படத்தின் டீசர் ரிலிஸ் அன்று இரவே யூட்யுப்பே ஸ்தம்பித்தது எல்லாம் பழைய கதை . ஆரம்பம் படத்திற்கு சேலத்தில் டிக்கெட் கிடைக்காமல் , ஆத்தூருக்கு அரைமணிநேரத்தில் சென்று படம் பார்த்ததெல்லாம் இன்றும் நினைவில் இருக்கிறது . அதன்பின் ‘தல’யின் எதிர்பாராத என்ட்ரி தான் வீரம் .அதுவரை கோட் , சூட் , ரேபான் கிளாஸ் , ஸ்டைலிஷ் கேரக்டர்கள் என இருந்த தலயை இழுத்துவந்து வெள்ளைவேட்டி , சட்டை சகிதம் பக்கா லோக்கலாக இறங்கி அடிக்க வைத்திருந்த படம் வீரம் . பெரும்பாலும் அஜித் படங்களை விரும்பாத என் அம்மா கூட , வீரம் சூப்பாராக இருக்கு என்றுகூறியிருந்தார் .( ட்விட்டர் ட்ரெண்ட் தாக்குதல் , எங்கள் ஊரின் மல்டிபிளக்ஸ் திரை கிழிப்பு போன்ற அஜித்- விஜய் பிரச்சனைகளை எழுதவிருப்பமில்லாததால் அதையெல்லாம் விட்டாச்சு ) .என்னை அறிந்தால் டீசரின் லைக்குகள் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை என , இந்திய அளவில் முதலிடம் ஆக்கினார்கள் . அதாரு அதாரு சிங்கில் ட்ராக் , APPLE I TUNES – ல் நம்பர் 1 ஆக்கி , SONY இசை நிறுவனத்துக்கே ஒரு ஜெர்க் கொடுத்தார்கள் . இவற்றின் பெயர்தான் ட்ரெண்ட் . இதை உருவாக்குபவர்தான் ட்ரெண்ட் செட்டர் .



இப்போது மேலே கூறியுள்ள படங்களில் மங்காத்தாவை வேறு ஆக்டர் செய்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் . வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களைப்போல் சுமாராய் கல்லா கட்டி இருக்கும் . பில்லா -2 , வேறு நடிகர் மட்டும் நடித்திருந்தால் கிழித்துத்தொங்கவிட்டிருப்பார்கள் . ஆரம்பம் படமும் கிட்டத்தட்ட அதேநிலைதான் . ‘தல’யை தவிர்த்திருந்தால் அஞ்சானுக்கு இணையாக ஆரம்பம் ஓடிருக்கும் , தியேட்டரில் இல்லை . இணையத்தில் . வீரம் படத்தை வேறு நடிகர் என்றால் வழக்கமான மசாலா குப்பை , துளிகூட லாஜிக் இல்லை , மொக்கை காமெடி படம் என தேசிங்குராஜா லிஸ்ட்டில் சேர்த்திருப்பார்கள் . கௌதம் இயக்கத்திலோ , வெறும் ஹாரிசின் இசைக்காகவோ என்னை அறிந்தால் டீசரோ , சிங்கிள் ட்ராக்கோ ட்ரெண்ட் பிடித்திருக்காது என்று எல்லோருக்கும் தெரியும் . இதன் பெயர் தான் ட்ரெண்ட்செட்டர் . இதுதான் அஜித் . இந்த படங்களின் வெற்றி என்பது ரசிகர்கள் தலயின் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பின் பிரதிபலிப்பு . படம் நல்லா இருந்தால் மட்டும் தான் ஓடும் என்பதெல்லாம் அஜித்திடம் எடுபடாது . இன்றைய நிலையில் அஜித்தின் படங்கள் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் கல்லா கட்டிவிடும் என்பது நிதர்சனம் . கடைசியாக வெளிவந்த 4 படங்களும் 100 கோடி வசூலைத்தாண்டி இருக்கிறது .



இதற்கெல்லாம் காரணம் என்ன ? படம் அருமை என்பதாலா ? ஒரு மெக்கானிக் , தன்னுடைய ரேஸ் ஆசைக்கு ஸ்பான்சர் கிடைக்காமல் , ஏதாவது பார்ட் டைம் வேலை செய்யலாம் என்று நினைத்து சினிமாவினுள் நுழைந்து இந்தளவு புகழடைந்தார் என்பதெல்லாம்  விக்ரமன் படத்தில் மட்டுமே சாத்தியம் . நீங்கள் கேட்கலாம் , சூப்பர்ஸ்டார் கூட தான் கன்டக்டராக இருந்து சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தார் என்று . ஆனால் சூப்பர் ஸ்டாரின் ஆசை , கனவு எல்லாமே அப்போதே சினிமா தான் . ஆனால் தல , 2004 வரை சினிமா என்பது பணம் சம்பாதிக்க மட்டும் என்ற கொள்கையில்தான் இருந்தார்  . முதுகெலும்பு சுக்குநூராய் போய் எழுந்து நடக்கவே ஒரு வருடம் ஆகும் என காலண்டரில் தேதி குறித்துவிட்டு சென்ற டாக்டருக்கு , ஒரே மாதத்தில் அவருடைய ஹாஸ்பிடலுக்கு நடந்து சென்று நன்றிகூறிவிட்டு திரும்பியவர் . அவரின் கஷ்டகாலத்தில் தான் ரசிகர்களைப்பற்றி நன்று உணர்ந்தார் . ரசிகர்களை நண்பர்களாக , சகோரதரர்களாக நடத்தினார் . அதுமுதல் அவரின் மாற்றங்கள் எல்லாம் ஊரறிந்ததே .  நரைத்தலையன் , தாத்தா என்றெல்லாம் தலயை சிலர் கிண்டல் செய்யும்போது சிரிப்புத்தான் வருகிறது . உண்மையை மறைத்து , தலைக்கு டை அடித்துக்கொண்டு இளமையாக மினுக்கிக்கொண்டு திரியும் ஆட்களுக்கும்முன் , இதான் நான் என்று நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு வரும் அந்த தில் , தமிழில் தலயின் சமகால நடிகர்களுக்கு வருமா என்பது படுசந்தேகம் . வக்கற்றவர்கள் தான் தங்களின் இயலாமையை மறைக்க , மற்றவர்களின் மேல் இல்லாத ஒரு கறையை பூசப்பார்ப்பார்கள் . தல தனியாளை இருந்தால் பூசி மறைக்கலாம் . இங்கு அவருக்கொன்று என்றால் துவம்சம் செய்ய பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் .


சரி , அப்படியே கௌதமின் வரலாற்றையும் கொஞ்சம் ஆராயலாம் . மின்னலே எனும் ப்ளாக்பஸ்டரை தமிழ்சினிமாவே எதிர்பாராத வேளையில் கொடுத்தார் . ஹாரிசின் மனதை உருக்கும் இசை , அப்படத்தின் மாபெரும் தூணாய் இருக்கும் . பூப்போல் ரிங்டோனை வைக்காத மொபைலே இல்லை என்று அடித்துக்கூறலாம் . அதுவரை காதல் சினிமா என்றாலே அண்ணன் பிரச்சனை , அப்பா பிரச்சனை , ஆயா பிரச்சனை எனப்போய்க்கொண்டிருந்த கதையில் , ஒருபுதுவிதமான காதலைக்கொடுத்திருப்பார் . டெம்ப்ளேட் என்னவோ பழசாயிருந்தாலும் , திரைக்கதை புத்தம் புதுசு . மின்னலே பின் மேடியை கனவில் நினைக்காத லேடியே இல்லை என்ற நிலைக்கு மாதவனை உயரத்தில் நிறுத்தினார் கௌதம் . அதன்பின் அதேதிரைப்படத்தை இந்தியில் REHNAA HAI THEIR TERRE DIL MEIN என்று இயக்கினார் . அங்கும் ஹீரோ மாதவன் , அப்பாஸ் கேரக்டரில் சயிப் அலிகான் நடித்திருந்தார் . என்ன நேரமோ , படம் அங்கு ஊத்திக்கொண்டது . அதன்பின் லேட்பிக்கப்பாக யூத்துகளின் கம்ப்யூட்டரில் உலவிக்கொண்டிருந்தது . அதற்கடுத்து 2003 ல் இவரின் இயக்கத்தில் வெளிவந்த காக்க காக்க , சூர்யா என்று சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் தெரியாத ஒரு நடிகரை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாற்றியது . அதிலும் ஹாரிஸின் இசை அட்டகாசம் . முதன்முதலாய் வில்லனுக்கு இருக்கும் பவரைத்தனியாய் கொணர்ந்த படம் இதுதான் . அதிலும் கிளைமேக்ஸ் டச்சில் தான் படம் கொண்டாடப்பட்டது . தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளே பாராட்டிய திரைப்படம் காக்க காக்க .  அப்புறம் என்ன , இப்படத்தையே வெங்கடேஷ் மற்றும் அசினை வைத்து தெலுங்கில் கர்சனா என்ற பெயரில் இயக்கினார் . அங்கும் படம் முரட்டு ஹிட் . பின்தான் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு . படத்தை முதலில் தயாரித்த ரோஜா கம்பைன்ஸ் காஜாமைதின் என்பவர் , கடன் தொல்லையால் தற்கொலை முயற்சியெல்லாம் எடுத்தார் . அதற்கு காரணம் கௌதம் கிடையாது( கமலின்  கால்ஷிட் பிரச்சனை மற்றும் படம் நீண்டகாலம் தயாரிப்பில் இருந்தது ) . பின்னர் மாணிக்கம் என்பவரின் 7TH CHANNEL என்ற பேனரில் படம் ரிலிசானது . படம் தாருமாறான வெற்றி . பாக்ஸ் ஆபிசை கதிகலக்கியது . மீண்டும் ஒரு போலிஸ் ஸ்டோரி  எடுத்து அதிலும் மாபெரும் வெற்றி பெற்றார் கௌதம் . என்ன நினைத்தாரோ தலைவர் , வேட்டையாடு விளையாடை மட்டும் வேறுமொழிகளில் ரீமேக்கவில்லை . இது 7 எனும் ஆங்கிலப்படத்தின் காப்பி என்றெல்லாம் கூறினார்கள் . எனக்கொன்றும் அப்படியெல்லாம் தெரியவில்லை . சீரியல்கில்லர் படங்களில் நம்பர் 1 ,SEVEN  இருக்கலாம் . அதற்காக அதைத்தொடர்ந்து வரும்படங்கள் எல்லாம் SEVEN-ன் காப்பி என்று அலம்புவதில் எனக்கு உடன்பாடில்லை .

இதன்பின் சரத்குமாரை வைத்து குறுகிய காலத்தில் இயக்கிய திரைப்படம்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் . வழக்கம்போல போலிஸ் கான்செப்ட் என்றுநினைத்து தியேட்டர்க்கு சென்றவர்களெல்லாம் கதறிக்கொண்டு வெளியே வந்தனர் . DERAILED எனும் நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது என்று கௌதம் கூறினாலும் , இப்படம் அதேநாவலை வைத்து வெளிவந்த ஆங்கிலப்படத்தின் சாயல் பெரும்பாலும் இருந்தது . ஹிந்தியில் , இதேநாவலை தழுவி எடுக்கப்பட்ட THE TRAIN எனும் படமும் இதேமாதிரி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது . மொத்தத்தில் கௌதமின் முதல் ப்ளாப்பை நிறைவேற்றிய திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம் (ஏ சென்டர்களில் ஓரளவு சுமாரான ஓட்டம் என்று நினைக்கிறேன் ).

அதன்பின் வாரணம் ஆயிரம் . அப்படி இப்படி என்று கருத்துகள் உலா வந்தாலும் சூரியாவின் கேரியரில் மீண்டும் ஒரு பூஸ்ட் அப்பாக இருந்தது . என்ன , அந்நேரத்தில் தவமாய் தவமிருந்து படம் வந்ததால் , அப்படத்தின் ஸ்டைலிஷ் காப்பி தான் வாரணம் ஆயிரம் என்ற டாக் வந்தது . இருந்தாலும் கௌதம் சிறந்த தமிழ்படத்துக்கான பிலிம்பேர் வாங்கிவிட்டார் . சென்னையின் அனைத்து FM களிலும் அஞ்சல பாடல் படுபிரபலம் . என் கல்லூரியில் கூட , மாணவர்கள் பெரும்பாலும் அந்த பாட்டையே தான் கேட்டுக்கொண்டிருந்தார்கள் . எனக்குத்தெரிந்து பிக் FM-ல் ஒரு ஞாயிறு அன்று மட்டும் 60 முறை அஞ்சல பாடலை ஒலிபரப்பியிருந்தார்கள் . என்ன , இந்த படத்தில் ஹாரிசுக்கும் கௌதமுக்கும் முட்டிக்கொண்டு கழன்டுகொண்டார்கள் . இந்த படத்தில் சூர்யாவின் 6 பேக்கைப்பார்த்து , என்னுடைய அப்போதைய காதலி நீயும் 6 பேக் வைத்திருந்தால் மட்டுமே லவ் தொடரும் என்றதும் , அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பேக் கடையாக ஏறி அலைந்து 6 பேக்குகள் வாங்கி , அவளிடம் படுகேவலமாய் திட்டு வாங்கியதும் , காதல் புட்டுக்கிட்டதும் இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது . ஆனால் முதன்முதலில் 6 பேக் போட்டவர் , அருண்விஜய் தான் .

அதன்பின் விண்ணைத்தாண்டி வருவாயா . படம் வெளிவந்து முதல் வாரம் தியேட்டர்களில் காத்தடித்தது . நான் முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு படம் சூப்பர் என்று கமெண்ட் கொடுத்தேன் . நான் அப்போது சென்றபோது தியேட்டர்களில் ஒரு ஈ கூட இல்லை . அடுத்தவாரம் தியேட்டருக்குச்சென்றால் ஒருவாரம் டிக்கெட் புல் என்று அதே சங்கம் தியேட்டரில் சொன்னார்கள் . சிம்புவின் மன்மதன் இமேஜை மாற்றி , மேன்லி லுக்கை கொடுத்த படம் இதுதான் . ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் மறக்கமுடியாத ஒரு இசைத்திருவிழாவாக இந்த திரைப்படம் இருந்தது எனலாம் . அதேநேரம் இப்படம் தெலுங்கில் நாகசைதன்யாவையும் சமந்தாவையும் வைத்து ஒருசேர இயக்கியிருந்தார் . அங்கும்மஎப்படியோ வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் .

இப்போதுதான் கௌதமுக்கு பிடித்தது சனி . சைக்கோ கில்லர் கான்செப்டில் , இன்செஸ் காட்சிகளெல்லாம் வைத்து , கில்மா படங்களால் செய்யமுடியாத விஷயத்தை தன்னுடைய நடுநிசி நாய்களில் வைத்து எடுத்தார் . தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய படங்கள் எல்லாம் மெகா பிளாக்பஸ்டர் ஆனபோது ஹீரோக்களின் மத்தியில் ஒரு களேபரம் உண்டானது . அதாவது ராஜமௌலியின் வெற்றிக்கு காரணம் , ஹீரோக்களாகிய நாங்கள்தான் காரணம் என்று அவரின் முந்தைய படங்களில் நடித்த சில நடிகர்கள் பேட்டி கொடுத்திருந்தனர் . அதைக்கேட்டு கொதித்தெழுந்த ராஜமௌலி , தன்னுடைய அடுத்தபடத்தில் ஹீரோக்கள் இல்லாமல் ஒரு ஈயை வைத்து சென்சேசனல் ஹிட்டான நான் ஈ கொடுத்தார் என்ற செய்தியை கேள்விபட்டிருக்கேன் . அதேபோல் தான் நம்ம கௌதமுக்கும் . இசை இல்லாமல் இவரின் படங்களைப்பார்க்க முடியாது என்று யாரோ இவரிடம் சொல்ல , தலைவரும் வரிந்துவாரிக்கட்டி கொண்டு நடுநசிநாய்கள் படத்திற்கு இசையே இல்லாமல் எடுத்திருந்தார் . அதன்பின் பட்ட கேவலங்கள் , அசிங்கங்கள் எக்கச்சக்கம் .அதன்பின் மீண்டும் இந்தியில் EK DEEVANA THA என்று VTV-ஐ ரீமேக்க , அங்கும் அப்படி இப்படி என்று தப்பிப்பிழைத்தது .

மீண்டும் கௌதமின் உச்சத்திற்கு சனிப்பார்வை வீச , நீதானே என் பொன்வசந்தம் இரு மொழிகளில் எடுத்தார் . படம் நல்லாத்தான் இருந்தது . ஜீவாவின் கேரக்டரைசேசன் கொஞ்சம் எசகுபிசகாய் இருந்ததால் , படம்மஊற்றிக்கொண்டது . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த 3 படங்களுக்கும் இவரே தயாரிப்பாளர் என்பதால் கடனில் மாட்டிக்கொள்ள ஆரம்பித்தார் . அதன்பின் இரண்டு படங்கள் இயக்க ஆரம்பித்து ட்ராப் ஆனது , சூர்யா கௌதமை அசிங்கப்படுத்தியது , தல கௌதமுக்கு ஆதரவு கொடுத்தது போன்றவையெல்லாம் நீங்களே படித்திருப்பீர்கள் .

மேலே பார்த்த வரலாற்றின் அடிப்படையில் கௌதமுக்கு இது வாழ்வா , சாவா முயற்சி . தல க்கு நோ பிராப்ளம் . இன்னும் 20 தோல்விகள் கொடுத்தாலும் தாங்கிக்கொள்ளும் மனபக்குவம் , அவரின் ஆஞ்சநேயா படத்தின்போதே ரசிகர்களுக்கு வந்துவிட்டதால் பிரச்சனை இல்லை . இருந்தாலும் விஜய் ரசிகர்களின் தொல்லை தாங்கமுடியாது என்பதால் , அதற்காகவாவது படம் நல்லா இருக்கவேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்வோம் . எங்களைப்பொறுத்தவரை தல படத்தில் வந்தாலே போதும் . கெஸ்ட் ரோலில் தல நடித்த ஶ்ரீதேவியின் படத்தையே ஹிட்டாக்கிய  ஆட்கள் நாங்கள் . எதிர்பார்ப்புக்கு வழக்கம்போல பஞ்சம் என்பதே கிடையாது . டேய் , போதும்டா . தயவு செஞ்சு படத்தோட கதை என்னன்னு சொல்லுடா ? என்று நீங்கள் கதறிக்கேட்பதால் இத்துடன் முடித்துவிட்டு என்னை அறிந்தால் படத்தைப்பற்றி பார்க்கலாம் .


காக்ககாக்க‍ ,வேட்டையாடு விளையாடு , வாரணம் ஆயிரம் ஆகிய மூன்றும் சேர்ந்தால் , அதுதான் என்னை அறிந்தால்தியேட்டரில் அஜித்குமார் என பெயர் போடும்போது  பிண்ணனியில் என்னை அறிந்தால் ஒலிக்க‍ , அப்டியே கைகால் நரம்புகளில் ஜிவ்வென்று ஏதோ ஒன்று தலையை நோக்கி ஏறி , அப்படியே தொண்டையின் வழியாக தல எனும் கத்தும்போது கிடைத்தது பாருங்கள் ஒரு சுகம் . அப்பப்பா ! வார்த்தைகளால் சொல்லிமுடிக்கமுடியாத ஒரு அனுபவம் . இப்படி ஒரு உன்ன தலவெறியனாய் இருக்கும் என்னை முதல்பாதி உட்காரவைத்து செருப்பால் அடித்தது போன்றிருந்தது . இசை ,எடிட்டிங்,திரைக்கதை, என ஒன்றில்கூட நான் திருப்தியாகவில்லை . இன்டர்வெல் விட்டதும் வெளியில் வந்து கிட்டத்தட்டஅழுதேவிட்டேன்அந்தளவு படுதிராபையான முதல்பாதி . அருண்விஜய் மற்றும் தலைக்காக பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய துர்பாக்கியநிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன் . போச்சுடா இன்னும் ஒருவாரத்திற்கு பேஸ்புக் ட்விட்டர் பக்கமெல்லாம் போகவேமுடியாது என்கின்ற மனநிலைக்கே வந்துவிட்டேன் . அதன்பின் இரண்டாம் பாதி தொடங்கியது . சொங்கிப்போன மூஞ்சியெல்லாம் டாலடிக்குது என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப ச்ச்சும்மா ச்சுனு கட்டி இழுத்துட்டு போய்டுச்சிபொதுவாக கௌதம் மேனனின் படங்கள் முதல்பாதி வேகமாகவும் ஆர்வத்துடனும் செல்லும் . இரண்டாம்பாதி படுத்துத்தூங்கவைத்துவிடும்ஆனால் என்னை அறிந்தால் அப்படியே ஆப்போசிட் . எப்படியோ இரண்டாம்பாதியை பட்டாசாக கொடுத்து தப்பிவிட்டார் கௌதம் . 

இசையமைப்பாளர் ஹாரிஸ் கொடுத்தஅற்புதமான பிஜிஎம்களை எப்படியெல்லாம் மொக்கையாக உபயோகப்படுத்தவேண்டும் என்பதை ம்மிடம் கௌதம் பாடமே எடுக்கிறார் . எங்கு கிளாசானா இசை வைக்கவேண்டும் எங்கு லோக்கலான இசையைப்பயன்படுத்தவேண்டும் என்பதுகூடவா கௌதமுக்குத்தெரியாது . ஆனால் இந்த பிரச்சனை அனைத்துக்காட்சிகளிலும் இல்லை . சிற்சில இடங்களில் மாத்திரமே . அதாரு அதாரு பாடல் இன்ட்ரோ சாங் என நினைத்துப்போனால் அப்படியே ;ம்மை ஏமாற்றிவிடுகிறார் கௌதம் . இருந்தாலும் பாடல்கள் எடுக்கப்பட்டவிதம் அருமை .

திரிஷா பார்ப்பதற்கு அந்த குழந்தையின் அம்மா போலவே இருக்கிறார் . என்னதான் கைவிட்டு நோண்டினாலும் இருக்கறதுதான வரும் ? ஆனால் ஆழகிற்கு குறைவில்லை . தானைத்தலைவி அனுஷ்கா லிங்கா படத்தில் யானைத்தலைவி போல் இருந்தார் . இதில் மீண்டும் நான்தான் தானைத்தலைவி என்று என் மண்டையில் கொட்டி உணர்த்தியுள்ளார் .

எடிட்டர் பல இடங்களில் தூங்கிக்கொண்டே கத்தரித்திருப்பார் போல . முதல்பாதியை மட்டும் கொஞ்சம் ட்ரிம் பண்ணியிருந்தால் இந்த வருடத்தின் மாபெரும் வெற்றித்திரைப்படமாக கொண்டாடப்பட்டிருக்கும் . 

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுகூடினால் எப்படிக்கொஞ்சிக்குலவுவார்களோ , அதுபோல் ஹாரிஸ் - கௌதம் கூட்டணியும் . இப்படத்தின் பாடல்களை ஏற்கனவே மாபெரும் ஹிட்டாக்கியதிலிருந்து பிண்ணனி இசையைப்பற்றிய எதிர்பார்ப்பு எனக்கு எக்கச்சக்கமாய் அதிகரித்திருந்தது . 

ஒளிப்பதிவாளர் டேன் , ஏற்கனவே ஒரு குறும்படத்திற்காக கேன்ஸ் அவார்டெல்லாம் வாங்கியவர் . GO GOA GONE இந்தி படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர் .கௌதமின் சற்றுமுன் மாறுது வாநிலை படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர்தான் . அந்தப்படம் இழுத்துக்கொண்டு இருக்க , என்னை அறிந்தால் வாய்ப்பை அவருக்கு கௌதம் வழங்கினார் . ட்ரைலரிலேயே இவரின் திறமைகள் பாதி வெளிவந்தாலும் , முழுத்திரையில் காணும்போது , அப்பப்பா . அழகான அஜித்தை எவ்வளவு கெத்தாக காட்டமுடியுமோ , அந்த இறுதிவரைச்சென்றுள்ளார் .

அருண்விஜய் - யப்பா ! தலக்கேத்தவில்லன் . மனுஷர் மிரட்டிருக்காருநடிப்பலயும் சரி ஆக்சன்லயும் சரி . அவரோட சினிமா வாழ்க்கைல என்னை அறிந்தால் ஒரு டர்னிங் பாய்ண்ட்னு தாரளமா சொல்லலாம் .


கௌதம் - தயவு செஞ்சு நீங்க இனிமேல் வசனம் எழுதறத விட்ருங்க . ஒன்னும் முடியல . திரைக்கதை எழுதுவது எப்படி ?னு நிறைய புத்தகங்கள் இருக்காம் . நல்லா படிங்க . இரண்டாம் பாதி நல்லா இருந்ததால தப்பிச்சிங்கஆமா நீங்க என்னசிம்புக்கு படம் பண்றதா நீனைச்சிங்களா ? இல்ல‍ சூர்யாவுக்கு பன்றமாதிரி ;இனைச்சி பண்ணிங்களா ? இது தல சார் . எதிர்பார்ப்பு இல்லாம படம் பாக்கனும்னா எக்கச்சக்க‍ நடிகர்கள் இருக்காங்க . 








Photo Courtasy - Hey Tamil Cinema , Twitter
என்னது தல பத்தியா ? அவரத்தவிர எவர் நடிச்சிருந்தாலும் இது அட்டுப்படம்னு சொல்லிருப்பாங்க . அவர் கெட்டப்ப‍ ரசிக்கறதுக்குனே படத்த‍ பாருங்கப்பா . சான்ஸே இல்ல‍ . என்னா ஹான்சம் ! என்னா கெத்து ! என்னா கம்பீரம் ! பார்த்துட்டே இருக்கலாம் . ஒரு ப்ரேம்லகூட அவர் அழகு குறையவேயில்லை . அவட் ஆஃப் போகசில்கூட அவரைத்தான் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தன . பர்பாமென்ஸ் பத்திலாம் சொல்லனுமா ? நாடறிஞ்ச ப்ராடக்டுக்கு எதுக்கு ஆட் ?


மொத்தத்தில் முதல்பாதியில் சத்தியதேவ்வின் வாழ்க்கையையும் இரண்டாம் பாதியில் பிரில்லியண்ட் சேசிங் காட்சிகளையும் வைத்து வெளிவந்திருக்கிறது . முதல்பாதி பொறுமை . இரண்டாம்பாதி படுவேகம் . இது தல ரசிகர்களுக்கு .மற்றவர்களுக்கெல்லாம் கண்டிப்பாய் பிடிக்கும் வண்ணம் இருக்கிறது .




தொடர்புடைய இடுகைகள்







Comments

  1. //அவரின் ஆஞ்சநேயா படத்தின்போதே ரசிகர்களுக்கு வந்துவிட்டதால் பிரச்சனை இல்லை // ஹா ஹா ஹா

    ஜீவிஎம் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதில் ஒரு ஈர்ப்பு இருக்கு... அது அவர்கிட்ட மட்டும் தான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. //
      இருக்கு !

      பிடிக்கும்

      ஈர்ப்பு

      எங்கப்பாட்டிக்கும்

      உன்னல்ல

      வசனம்

      உனக்கு மட்டும்தான்

      வேறயாருக்கும் இல்ல

      அந்த
      வசன ஈர்ப்பு

      //

      இதத்தானங்ணா அவரு மின்னலேலுருந்து எழுதிட்ருக்காரு .

      Delete
    2. பொதுவா இயக்குநர்கள் நான்-லீனியர்ல திரைக்கதை எழுதி படமெடுத்து பார்த்துருக்கேன் . ஆனா , வசனத்தையே நான்-லீனியர்ல எழுதற ஒரே ஆள் நம்ம ஜி.வி.எம் தான் . தலைவருக்கு மார்ட்டின் ஸ்கார்சேசி மேல தனி ஈடுபாடுனு நினைக்கிறேன் . படம் முழுக்க narrative ஸ்டைல்லயே எடுத்துருக்காப்ல .

      Delete
  2. எளிமையும் பணிவும் ஒருவரை உச்சத்திற்கு கொண்டு போகும்... உச்சத்திற்கு போனாலும் தல = 1

    ReplyDelete
    Replies
    1. எனக்குலாம் தல #1 ,. #2 னுலாம் நினைக்கவே மாட்டேன் ணா . அவர என்னோட அண்ணனாதான் பாக்கறேன் . தங்களைப்பார்ப்பது போலவே !

      Delete
  3. ரசிகன்பா...
    நல்லா என்ஜாய் பண்ணி படித்தேன்...
    நேர்மை பிட்சிருக்கு
    அஜீத்தை பார்க்கவே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு என்பதை சில ரசிக கண்மணிகளிடம் பேசி அறிந்திருக்கிறேன் ..
    ஏய் துஷ்யந்தா பாடல் முடிந்த வேளையில் வெறிகொண்டு திரும்பி என்னடா யாசர் இப்படி இருக்கு என்று கேட்டால் சார் படம் நல்லாத் தானே இருக்கு என்னை மண்டையில் சம்மட்டியால் அடித்த ரசிகன்(யாசர்) ஒருவனும் உண்டு .. இப்போத தெளிவா தெரியுது தலையை பார்த்தாலே போதும் வேறு ஏதும் வேணாம்... பசங்களுக்கு... ஹ ஹா ஹா சிரிப்புத்தான் வருது..
    (பயகளே இப்படீனா .... ?)
    மறுவாசிப்பு செய்து சிறிய எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே ! அதைலாம் சரிபண்ணிடுறேன் . இப்போலாம் காதலி இல்லை . இருந்தா இந்த பக்கம் என்னால வரமுடியுமாங்றது சந்தேகம்தான் .

      Delete
  4. சரி சார் இப்போ எத்தனையாவது லவ் ஓடுது..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை