நையாண்டி பெண்களும் ஜொள்ளுத்தாத்தாக்களும் - ஊர்த்திருவிழா
கோவில் இல்லாத
ஊரில் குடியிருக்காதே என்ற தமிழ்முதுமக்களின் பொன்மொழியின்படி ஊருக்கு ஒரு கோவிலும்
, காவல் தெய்வமும் இருக்கும் . எங்கள் ஊரிலோ அதையும்தாண்டி இரு கோவில்கள் , பல காவல்
தெய்வங்கள் . ஒன்று பஸ் ஸ்டாப் அருகிலும் மற்றொன்று ஊருக்குள்ளேயும் இருக்கின்றன .
சரி , ஒன்றுக்கு இரண்டாக உள்ளதுதானே ! நன்றாகக் கும்பிட்டு நல்வரத்தைப்பெற்று சந்தோஷமாக
இருக்கவேண்டியதுதானே என்கிறீர்களா ? அதுதான் இல்லை . சேலத்தில் வன்னியசமூக மக்கள் அதிகமாய்
வாழ்வது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததே . ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் எங்கள் ஊரில்
நாடார் சமூகமக்கள் அதிகம் . பஸ் ஸ்டாப்பை ஒட்டிய பகுதிகளில் வன்னியசமூகத்தினரும் ,
ஊருக்குள்ளே நாடார் சமூகத்தினரும் வாழ்கின்றனர் . 1999 வரை , சாதிக்கலவரங்களுக்கு பெயர்பெற்றது
எங்கள் ஊர் . எவனாவது பொழுதுபோகாதவன் ஏதாவது ஒன்றைத்தூண்டிவிட , அதன்பின் சாலையில்
செல்லவேண்டிய சைக்கிள் ஆகாயத்திலும் , அடுப்பில் எரியவேண்டிய விறகுக்கட்டைகள் அடுத்தவன்
இடுப்பில் எரியவைத்தும் கொண்டிருக்கும் . கருங்கற்கள் பலரின் மண்டையைப்பேத்தும் பசியடங்காத
ஜீவன்களாய் மீண்டும் மீண்டும் பலரின் மண்டையை உடைத்துக் குருதியை ருசிபார்த்துக்கொண்டிருக்கும்
அளவிற்கு கடும் கலவரம் நடக்கும் . போலிஸார் வந்தால் , அவர்களையும் கும்பலுக்குள்ளே
இழுத்துவைத்து ஈடு கொடுப்பார்கள் . பெரும்பாலும் மாலை 3 மணுக்கு ஆரம்பிக்கும் கலவரம்
6 மணிக்கு உச்சத்திற்குச்சென்று 8 மணிக்கு முடிந்துவிடும் . கலவரத்தின்போது எந்த சூழ்நிலையிலும்
பெண்கள் மற்றும் குழந்தைகளை காயப்படுத்தக்கூடாது என்ற உயரிய மனப்போக்கில் கலவரக்காரர்கள்
இருப்பார்கள் . அன்றைய இரவு பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும்
. அடுத்தநாள் காலையில் என்னைப்போன்ற சிறுவாண்டுகளில் எந்த பையன் சீக்கிரம் எழுந்து
கலவரத்திடலுக்குச் செல்கின்றானோ , அவனே அன்று பெரும்பணக்காரன் . நானெல்லாம் 5 மணிக்கு
எழுந்து பஸ்ஸ்டாப்பிற்குச்சென்றால் 7 மணிக்குள் எப்படியும் 200 ருபாயாவது பொறுக்கி
, டவுசர் பைக்குள் நிரப்பிக்கொண்டுவருவேன் .
இப்படியாக ஆறுமாதத்திற்கு
ஒருமுறை கலவரம் வந்து என் பள்ளிக்காலங்களில் எலந்தவடைக்கும் , நெல்லிக்காய்க்கும்
, தேன்மிட்டாய்க்கும் ஐஸ்கிரிமுக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருந்தது . அத்தகைய
சூழ்நிலையில்தான் ஒரு இளைஞர் எங்கள் ஊரின்தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவர் தலைவரானதும்
செய்த முதல் செயலினால் , ஆறுமாதத்திற்கு ஒருமுறை அரிதாக பணத்தால் நிரம்பும் என் டவுசர்
பாக்கெட் , காற்றாட ஆரம்பித்தது. நாடார்களையும் வன்னியர்களையும் அழைத்துப்பேசி ஒரு
முடிவெடுத்தார் . இனி எப்போதும் சாதிக்கலவரங்கள் ஊரில் நடக்கக்கூடாது என்பதாற்காக ஒவ்வொருவரையும்
சாமியின்முன் கற்புரம் அடித்து சத்தியம் செய்யவைத்தார் . அதுவும் இரண்டு கோவில்களிலும்
. அதற்கு அச்சாரமாய் ஊர்த்திருவிழாவை முன்வைத்தார் . அதற்குமுன் வரை தனித்தனியே தங்கள்
தொண்டர்களின் சக்தியைக்காட்டி வந்த கடவுள்கள் , ஒன்றுசேர்த்துவைத்துவிட மக்கள் முடிவெடுத்தனர்
. ஊரினுள்ளே இருக்கும் மாரியம்மனுக்கு முன் , அவளின் தங்கையான பஸ் ஸ்டாப் செல்லியம்மனுக்கு
முதலில் திருவிழா நடத்திவிட்டுத்தான் அதன்பின் ஊருக்குச்செல்லவேண்டும் எனவும் , செல்லியம்மனுக்கு
சிம்பிளாகவும் மாரியம்மனுக்கு மஹா கிராண்டாகவும் விழா எடுக்கவேண்டும் என்றும் முடிவானது
. அதேபோல் செல்லியம்மனுக்கு பொங்கல் வைப்போர் அனைவரும் மாரியம்மனுக்கும் , மாரியாத்தாளுக்கு
பொங்கல் வைப்பவர்கள் செல்லியம்மனுக்கும் கட்டாயம் வைக்கவேண்டும் என்று முடிவானது .
அதைத்தொடர்ந்து ஊரே மாறியது . சண்டை நடக்கவில்லை . என் டவுசர் பாக்கெட்டும் நிறையவில்லை
. தலைவர் , ஊரினுள் எக்கச்சக்கமான பல நல்லவிஷயங்களைச்செய்தார் . இந்தியாவின் சிறந்த
பசுமைக்கிராமங்களில் ஒன்று என மன்மோகன்சிங்கிடமே சென்று அவார்டு வாங்கிவந்தார் . ஊரெங்கும்
500 மீட்டருக்கு இரண்டு குப்பைத்தொட்டிகள் , அதில் ஒன்று மக்கும் குப்பை , மற்றொன்று
மக்காத குப்பை . பொதுக்கழிப்பிடம் , நூலகம் , பள்ளிக்கட்டிடம் , நீரேற்று நிலையம் ,
மழைநீர்சேகரிப்புத்தொட்டி , வீடுதோறும் கழிப்பறை , சோலார் தெருவிளக்குகள் , பஞ்சாயத்து
அலுவலகம் , சாலைதோறும் மரம் என ஏராளமான சாதனைகளைச் செய்தார் . ஊரில் இருக்கும் அனைவரின்
குடும்பத்தலைவர்களின் நம்பர்களும் அவருடைய மொபைலில் இருக்கும் .ஓட்டுக்கேட்க வந்தால்
ஓட்டுப்போடுவிங்களா ? என்று அவர் கேட்பதற்கு முன்பே அவருக்கான ஓட்டு அங்கு முடிவாயிருக்கும்
. தொடர்ந்து மூன்று முறை ஊர்த்தலைவராக உள்ளவர் . அதன்பின் இருசாதியினரும் சாதி பார்ப்பது
குறைந்து நட்பு பாராட்ட ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு வருடமும்
தை மாதம் 10 தேதியன்று கொடிமரம் நடுவார்கள்
. அதனைத்தொடர்ந்து ஊரைத்தாண்டி வேறு ஊருக்கு யாரும் செல்லக்கூடாது , அப்படியே சென்றாலும்
எக்காரணத்தை முன்னிட்டும் இரவு வெளியூரில்
தங்கக்கூடாது , நான்-வெஜ் கட்டுப்பாடு போன்ற சில கட்டுப்பாடுகளை விதிப்பர் . கம்பம்
நட்டநாளிலிருந்து தினசரி இரவு , தாரையும் தப்பையும் போட்டிபோட்டு மாரியம்மன் இசையை
வழங்க , அந்த இசையை நாபிக்கமலங்களில் உள்வாங்கி , நடனமாக மாற்றி பயிற்சி எடுப்பார்கள்
என்போன்ற இளம்வயதினர் . நானும் 11-ம் வகுப்பு படிக்கும் வரை அங்கு அல்டிமேட் டான்சராக
இருந்தேன் . 12- ம் வகுப்புத்தேர்வு , அதைத்தொடர்ந்து சென்னைக்கல்லூரி வாழ்க்கை என்றான
பின் , மாரியம்மன் ஆட்டத்தில் சேரவியலாத படுபாதகநிலைக்குத்தள்ளப்பட்டேன் . நாமும் ஆடலாம்
என்று ஆர்வத்துடன் கோவில்திடலுக்குச்சென்றால் ‘வாப்பா ! சென்னை மாப்பிள்ளை’ என்று எவனாவது
என்னை ஏற்றிவிடுவான் . உடனே நமக்குள் இருக்கும் அந்தஸ்து எனும் அரக்ககுணம் உச்சந்தலையில்
ஏறிவிடும் . நாம் இப்போது ஆடினால் நமது ஸ்டேடஸ் குறைந்துவிடும் என்று இல்லாத ஒன்றை
கற்பனை செய்துகொண்டு , என் சிரத்தை , முகச்சிரத்தையுடன் கட்டுபடுத்தி வேடிக்கை பார்க்க
ஆரம்பித்துவிடுவேன் .
அதன்பின் ஒவ்வொரு
வருடமும் வேடிகைப்பார்க்கும் மைனராகவே ஆக்கப்பட்டிருந்தேன் . சென்னைவாசம் முடித்து
சேலம் வந்தபின்கூட ஒரு பார்வையாளனாகவே என்னை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறேன் . வழக்கம்போல
கம்பம் நட்டநாளிலிருந்து அடுத்த 12 நாட்கள் , நம்மையும்மீறி செல்லாத்தாவும் , கற்பூரநாயகியும்
ஒலிப்பெருக்கியின்வழியே நம்மனதினுள் ஏறி , நம்மையே பாடவைத்துவிடுவார்கள் . அதைத்தொடர்ந்து
தை 20ந்தேதி திருவிழா துவங்கும் . அன்றைய தினம் கோவிலில் ஒரு கோழியை அறுத்து பூசையைத்துவங்குவர்
. ஒன்றும் பெரிய விசேடமாய் இருக்காதெனினும் , இரவு 10 மணிக்குமேல் நையாண்டி மேளம் உரும
,அம்மனை நான்குபேர் தூக்க, இரு அழகிய அழகிகள் (சிலசமயம் கிழவிகள்) கரகத்தைச்சுமந்து
, ஆடிக்கொண்டே ஊர்வலம் வருவார்கள் . ஊரின் ஒவ்வொரு வீட்டின்முன்பாகவும் சென்று , அம்மனுக்குப்பூஜையும்
கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்வார்கள் . அன்றையதினம்தான் எனக்கும் , என்வயதையொத்த
சில இளைஞர்களுக்கும் வருடத்தின் வசந்தத்தினத்தில் ஒன்றாய் இருக்கும் . இரவு வீட்டில்
சாமி ஊர்வலத்திற்கு போகிறோம் என்று கூறிவிட்டு , இரு அழகிகளையும் கரெக்ட் செய்துகொண்டு
புழுதிக்காட்டிற்குச்சென்று , உருமிய மேளத்தை காது கிழியும்படி அடிக்கச்சொல்லி , அழகிகளுடன்
செம ஆட்டம் போடுவோம் . பெரும்பாலும் ஊர்ப்பெருசுகளும் இதைக்கண்டுகொள்ளாதுகள் என்றாலும்
ஜொள்ளுக்கிழவர்கள் முகத்தில் பொறாமை எனும் பூ , பூத்து மலர்ந்திருப்பதை அவ்வளவு இருட்டிலும்
காணலாம் . 11 மணிக்குமேல் ஆட்டத்தை ஆரம்பித்து 1 மணிவரைக்கும் விடாமல் வீடுவீடாய்ச்சென்று
ஆடிக்களைத்து வீட்டினுள் வந்து உறங்கும்போது , நித்திராதேவி நிம்மதியாய் வழிகாட்டுவாள்
.
அடுத்தநாள் சர்க்கரைப்பொங்கல் , வெண்பொங்கல் என பொங்கல் பாத்திரத்தைத்தூக்கிக்கொண்டு
செல்லியம்மனுக்கு பொங்கல் வைக்க ஊரிலுள்ள பெண்கள் அணிவகுப்பாய் அக்குட்டித்திடலை ஆக்கிரமிப்பார்கள்
. பெரும்பாலும் பொங்கல்வைக்கும் படலம் 3 மணிக்கு ஆரம்பித்து 5 வரை நடைபெறும் . அந்நேரத்தில்
ஊரில் இருக்கும் இளைஞிகள் , கல்லூரிக்கு கால்ஷிட் கொடித்திருப்பார்கள் . என்ன , அவ்வேளையில்
யார் , யார் நமக்கு அத்தை ? எந்த அத்தையின் பெண் வயதுக்கு வந்திருக்கிறாள் ? யாருக்கு
மாப்பிள்ளை தேடுகிறார்கள் ? எந்த பெண் எந்தக்கல்லூரியில் படிக்கிறாள் ? போன்ற பலவித
சந்தேகங்களை அங்கே பொங்கல்வைத்துக்கொண்டிருக்கும் ஆன்டிகளின் இனிய மற்றும் எளிய சம்பாஷைகளின்வழியே
அறிந்துகொள்ளலாம் . இதையெல்லாம் தெரிந்துகொண்டால்தான் 6 மணிக்கு அத்தை மகள்களும் ,
மாமன் மகள்களும் வரும்போது நாம் அப்டேட்டாக இருந்து கரெக்ட் செய்யமுடியும் . அதனால்
புகையையும் பொருட்படுத்தாது , பொங்கல் வைக்கும் பெண்மணிகளின் ஊடே நம் பயணத்தைத்தொடர்ந்து
கொண்டே இருக்கவேண்டும் . மேலும் நாம் இன்னும் மணமாகாத கட்டிளம்காளையாக ஊருக்குள் பொலிவாகச்சுற்றிக்கொண்டிருப்பது
இம்மாதிரியான நேரங்களில்தான் மற்றவர்களுக்கும் தெரியும் . காலையில் 7 மணிக்கே குளித்திருந்தாலும்
, மதியம் 3 மணிக்கு மீண்டும் குளித்துவிட்டு , என்றும்தொடாத பான்ஸ் பவுடரை அடித்துக்கொண்டு
, மிகமுக்கியமாக திருநீறு இட்டுக்கொண்டு திடலில் கூடவேண்டும் . அப்போதுதான் நாம் ஸ்மார்ட்
மற்றும் குணமான பையனாக அவர்களின் கண்களுக்குத்தெரிவோம் .
பொங்கலைவைத்துக்கொண்டு
வீட்டிற்கு வந்ததும் முதல்வேளையாய் அணிந்திருக்கும் சட்டையை மடங்காமல் , கசங்காமல்
கழட்டிவைத்துவிட்டு , மீண்டும் நன்கு முகம்கழுவி , மறுபடியும் சட்டையை அணியவேண்டும்
.இம்முறை மறக்காமல் ஏதேனும் ஒரு பர்பூயூமை அடித்துக்கொண்டுதான் செல்வோம் . மாலை 6 மணிக்குமேல்
ஊரினுள் இருந்து செல்லியம்மன் கோவிலுக்கு மாவுத்தட்டு கொண்டுவரும் நிகழ்ச்சி நடக்கும்
. சிலர் சோளத்தைச் சட்டியில் விதைத்தும் கொண்டுவருவார்கள் . முன்னால் தாரையும் தப்பும்
முழங்க , பின்னால் வரிசையாய் மகளிர்க்கூட்டம் தட்டுசுமந்து வர , கூட அவர்களின் மகள் , தங்கை மற்றும் இதர குடும்பத்தினர் சகிதம் வந்துசேருவார்கள்
. அத்தகைய வேளையில் நம் இருப்பைக்காட்டிக்கொள்ள விசில் அடித்தோ , இல்லையேல் கண்ணைப்பறிக்கும்
நிறத்திலோ உடையணிந்திருக்கவேண்டும் . அதன்பின் என்ன , எப்படியும் ஒவ்வொரு பெண்ணும்
தத்தம் தனது பள்ளியில் தொலைந்த பழைய ஊர்த்தோழிகளைக்கண்டறிந்து அவர்களுடன் ஒன்றுசேர்ந்து
, அந்த கோவிலைச்சுற்றிய , பெண்களின் அத்தியாவசியக்கடைகளில்
வளைய , வளையல் வாங்க வலம் வருவார்கள் .
இப்படியாகச்செல்லும்
அன்றைய தினம் பெரும்பாலும் என்போன்றோர்க்கு இளம்பெண்களை சைட் அடித்தே கழியும் . அன்று
இரவு கூத்து அல்லது குறவன் – குறத்தி போன்றவற்றில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும்
. கூத்து என்பதுதான் 18 – ம் நூற்றாண்டில் நாடகமாய் மாறி ,இன்றைய தினம் செல்லுலாய்டில்
புகுந்து சினிமாவாக உருவாகியிருக்கிறது . குறவன் – குறத்தி என்பது சிற்றிலக்கியங்களில்
உள்ள பள்ளு மற்றும் குறவஞ்சி ஆகிய இரண்டு நாடகவகையச்சார்ந்தது
. இதில் ஒரு குறவனும் இரு குறத்தியரும் கண்டிப்பாய்
இருப்பார்கள் . முதலில் குறவன் ஒருத்தியை மணப்பதுபோலவும் அதைத்தொடர்ந்து , அவளுடைய
தங்கையையும் கரக்ட் செய்து மணப்பது போலவும் செல்லும் . சிரிப்பிற்கோ , அதகளத்திற்கோ
பஞ்சமே இருக்காது . பெரும்பாலும் ஊரில் உலாவும் பேச்சுவழக்குச்சொற்களும் , சில இரட்டை
அர்த்த வசனங்களும் மிகமிகுதியாய் இருக்கும் . ஆனால் இப்போதைய தமிழ்சினிமாக்களிலும்
, தற்காலத்தமிழ் இலக்கியவாதிகளின் எழுத்துகளிலும் இருக்குமளவிற்கு தரம்கெட்ட வார்த்தைகளுடன்
இணைத்துப்பார்க்கும்போது இது எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றும் . கண்டிப்பாக இதில்
ஒரு பேரழகி இடம்பெற்றே விடுவாள் . பெரும்பாலான
ஊர் ஆடவர்களுக்கு அவள்தான்னஅன்றைய இரவு கனவுக்கன்னியாய் இருப்பாள் . இந்நாடகத்தின்
நடுவில் திடுமென பார்வையாளர்களுக்கும் ஆடல்புரியும் வாய்ப்புக்கிடைக்கும் . நானே இருமுறை
குறத்திகளுடன் ஜோடிசேர்ந்து புழுதி கிளப்பி
, வீட்டினுள் வார்த்தை வைபோகத்திற்கு ஆளானதும் உண்டு . ஆனால் , இப்போதெல்லாம் இந்த
நிகழ்ச்சி நடத்த போதுமான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம் . பெரும்பாலான குறத்தி
நடனம் ஆடும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆட்படுவதும்
, நமது நரம்பற்ற சமூகம் இதைக்கலாச்சார சீர்கேடாகவும்
பார்ப்பதாலோ என்னவோ சரியானபடி பார்ட்டிகள் கிடைக்காமல் இவ்வகை நாடகங்களே அழியும் நிலைக்கு
வந்துவிட்டன .
இந்தவருடம் குறவன்
– குறத்திக்கு பதிலாய் கூத்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர் ஊர்ப்பெரியவர்கள் .ஶ்ரீகலைமகள்
நாடகசபை எனும் கம்பனிக்காரர்களின் கூத்தைப்பார்க்க , அதிசயமாய் ஊரே திரண்டிருந்தது
. மூன்று வருடங்களுக்குப்பின் கூத்தென்றால் ச்சும்மாவா ! ஊர்ப்பெருசுகளைக்காட்டிலும்
என்போன்ற இளைஞர்கள் கூட்டமும் , எங்களைக்காட்டிலும் எங்கள் வயதையொத்த இளம்யுவதிகள்
கூட்டமும் திடலை நிறைத்திருந்தன . வரும்போதே பாய் , தலையணை கொண்டுவந்து , சரியான இடம்பிடித்து
போட்டு கூத்துப்பார்க்கும் சுகானுபவம் , சத்யம்
திரையரங்கில் கபிள்சீட்டில் அமர்ந்து பார்க்கும்போதுகூட கிடைத்திராத ஒரு பேரனுபவம்
. இதே கூத்தைத்தான் பரிதமாற்கலைஞரும் , பம்மல் சம்பந்தனாரும் , சங்கரதாசுசுவாமிகளும்
உரைநடை வசனங்களை அதிகரித்து , நாடகமாக நிகழ்த்தி
தற்கால தமிழ்சினிமாவின் முன்னோடிகளாய் விளங்கினர் . பரிதிமாற்கலைஞர் ஒருபடிமேலே போய்
தன்னுடைய ரூபாவதி மற்றும் கலாவதி நாடகங்களில் பெண்வேடமிட்டு நடித்திருந்தார் . ரெக்கா
டேன்ஸ் எனப்படும் சினிமாப்பாடல்களுக்கு ஆடுகிறேன் என்ற பெயரில் கும்மியடித்து நாசமாய்ப்போன
ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளால்தான் அருமையான கூத்துக்கலை சிதைந்து நலிவுற்றது என்பது என்
எண்ணம் . ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் , இம்மாதிரியான ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில்
கலந்துகொள்ளும் பெண்களில் பலர் , கல்லூரியில் படிக்கும் பெண்களாய்த்தானிருந்தனர் .
அதுவும் பெரும்பெரும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் , தங்களின் மேலதிக செலவுக்காக
இம்மாதிரியான நடன க்ரூப்களில் ஆடி . அந்த காசின்மூலம் தங்ளுக்குத்தேவையான ஆடம்பர செலவுகளை
செய்துவந்தனர் . சேலத்தின் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் , வார்டனுக்குத்தெரியாமல் ஹாஸ்டல்
அறையிலேயே , அறையின்சகதோழிகள் முன்னிலையிலே விபச்சாரம் செய்த சில பெண்களை நானே பார்த்திருக்கிறேன்
. (நீ அங்க எதுக்குப்போன என்றெல்லாம் குதர்க்கமாக
கேள்வி கேட்காதிர்கள் . சிற்றின்பத்திற்காக கேடுகெட்ட செயலைச்செய்யும் குடியில் நான்
பிறக்கவில்லை .) அதன்பின் எப்படியோ சிலபல சட்டங்களைப்போட்டு இம்மாதிரியான கேடுகெட்ட
நிகழ்ச்சிகளைத்தடை செய்ததினால் , மீண்டும் கூத்தின்பக்கம் எங்கள் ஊரின் பெரியமனிதர்பார்வை
திரும்பியது .
இந்த ஆண்டு நாகாராஜன்
சண்டை (அ) அரவான் பிறப்பு (அ) உழுவைத்திருமணம்
எனும் பாரதத்தைத்தழுவிய கூத்து எங்கள் ஊரில்
போடப்பட்டது . மிகமிகமிக அனுபவித்து ரசித்துப்பார்த்தேன் . என்ன , எப்போதும் முதல்இரண்டு
மணிநேரம் காமெடியாகவும் காமநெடியாகவும் போகும்
கூத்து , அடுத்த இரண்டு மணிநேரத்தில் கொஞ்சம் சொக்கவைக்கும் . இம்மாதிரியான அனுபவம்
ஏற்கனவே நான் பல கூத்துகளைப்பார்த்திருந்த
காரணத்தால் வந்திருந்தது . அதனால் அடுத்த இரண்டு மணிநேரம் தூங்ப்போய்விட்டேன் . காரணம்
, அடுத்த நாள் தல படம் ரிலிஸ் . அதுவுமில்லாமல் ஒருவருடம் கழித்து மீண்டும் ஜிம் பிரவேசம்
வேறு என்பதனால் கண்டிப்பாய் இரவு உறங்கியாகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் .
மீண்டும் 4 மணியிலிருந்து கூத்து முடியும் வரை ஜாலியாய் பார்த்துக்கொண்டே இருந்தேன்
. இதுபோன்ற அற்புதமான கலைவிஷயங்களை , பெருநகரங்களில் வாழும் மக்கள் மிஸ் செய்கிறார்களே
எனும்போது ஒரு ஆதங்கம் இருப்பினும் , அவர்கள் கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்
.
ஆரம்பகாலங்களில்
ஆர்யர்கள் , இந்துமதத்தையும் பாரத , ராமாயண இதிகாசங்களையும் பரப்பியதற்கு பெரும்கைக்கொடுத்தது
இந்த கூத்துக்கலைதான் . இதன்மூலம் தான் ராமனும் , கர்ணனும் தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்தே
வைத்தார்கள் . ஆனால் இன்றைய சூழலில் அந்த கூத்துக்கலைக்கு கைக்கொடுக்கவே யாருமில்லை
என்பது வருத்தத்திற்குரியது .சரி , அடுத்தநாள் அனுபவம் பற்றி அடுத்த பதிவினில் சந்திப்போம்
.
தொடர்புடைய இடுகைகள்
தற்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் காமக்கூத்தாய் ஆனதால் ,அதற்கும் தடை வந்துவிட்டது தெரிந்ததுதானே :)
ReplyDeleteஅதெல்லாம் நம் போன்ற ஊர்க்காரர்களுக்குத்தெரியும் அண்ணா . இன்னும் மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் இம்மாதிரியா விஷயம் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்களே ! வருகைக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணா .
Deleteகலைக்கூத்தாடிகள் இன்று கடவுளாகி விட்டார்களே,,, நண்பா...
ReplyDeleteதமிழ் மணம் 2
உண்மையான கூத்து ஆடுபவர்களின் திறமைக்குமுன்னால் சினிமாக்காரர்கள் ஒரு புள்ளைபூச்சிகள் . விடிய விடிய ஆடியும் , தொண்டை கிழியும்படி பாடியும் கூத்தை ஆடுகிறார்கள் . ஆனால் எடிட்டிங் என்ற ஒரு தொழில்நுட்பம் மட்டும்மில்லையெனில் பல சினிமா்காரர்களின் நிலை அதலபாதாளத்திற்குள் இருந்திருக்கும் .
Deleteநன்றி அண்ணா .
அது ஒரு அழகிய நிலாக்காலம்...!
ReplyDeleteம் . நான் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இம்மாதிரியான சந்தோஷத்தை அனுபவிக்காமல் விடமாட்டேன் அண்ணா . அதைப்பற்றிய நினைவுகளைநினைத்துக்கொண்டு வாழும் சராசரி மனிதனாக மாறாமல் அதை அனுபவித்துவாழ்பவனாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை . கருத்துக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணா .
Deleteசாதி சண்டைகள் முடிந்து மறு நாள் காலையில் காசு பொறுக்க போவறத நெனச்சா 'ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது சரியா போச்சு !
ReplyDeleteசிறு வயது நினைவுளை நல்ல நடையோடு எழுதி இருக்கீங்க. உங்க கூடவே இருந்து அனுபவித்த மாதிரியான இன்பம்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ஹா ஹா ஹா . ஒருவகையில் எல்லோருமே கூத்தாடிகள் தானே அண்ணா . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா .
ReplyDeleteகிராமங்களில் ஒன்னோ- ரெண்டோ போதும் இருந்தார்கள ஆனால் நகரங்களில் ஒரு தெருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது..மகேஷ்............
ReplyDeleteஇருந்தாலும் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின் ரவுசுகளில் பாதியைக்கூட நகரங்களில் நடப்பதில்லையே அண்ணா . ஏதோ வந்தோம் , கும்பிட்டோம் , சென்றோம் என்ற நிலையில்தானே இருப்பார்கள் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !
Delete