UNBREAKABLE –சினிமா விமர்சனம்



மனோஜ் ஷ்யாமளன் . ஹாலிவுட்டில் பெருமை நாட்டிய இந்தியர் . மலையாளி தந்தைக்கும் தமிழ் அன்னைக்கும் பிறந்தவர் . நோலனைப்போல சிறுவயதிலே சினிமா தான் வேண்டும் என்று அடம்பிடித்து 8 MM கேமராவைத்தூக்கிக்கொண்டு படம்பிடித்தவர் .  இவரின் படங்களை உற்றுநோக்கினால் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பைத்தான் அதிகமாய் காட்சிப்படுத்தியிருப்பார் . குடும்ப உறவைத்தான் பெரும்பாலும் படம்பிடிப்பார் . முதல் படத்திலேயே அடுத்த ஸ்பில்பெர்க் , ஹாலிவுட்டைக்காக்க பிறந்த ரட்சகன் என்றெல்லாம் கொண்டாடப்பட்டவர் . துப்பாக்கி தோளில் சுமந்து வெடிகுண்டை அல்லையில் வைத்துக்கொண்டு திரிந்த ப்ரூஸ் வில்லிசை வைத்து எடுத்த THE SIXTH SENSE படத்தின்மூலம் வில்லிசை வேறொரு லெவலுக்கு அழைத்துச்சென்றவர் . SIXTH SENSE-ன் தாக்கம் எனக்கு எந்தளவிற்கு என்றால் என்னுடைய முதல் குறும்படத்திற்கு அந்த படத்தின் தலைப்பையே வைத்தேன் (நீங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் , இல்லையெனில் என்னுடைய குறும்படமும் நன்றாக வந்து உங்களை படுத்தி எடுத்திருக்கும்). தான் வாழ்ந்த ஊர்களிலேயே தான் ஷூட்டிங்கை நடத்துவார் . இவரின் படங்கள் எல்லாம் கண்டிப்பாய் ஒரு ட்விஸ்ட் இருக்கும் . பெரும்பாலும் அது திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும் . இவரின் LADY IN THE WATER , AFTER EARTH ஆகிய இரண்டுப்படங்களைத் தவிர்த்துப்பார்த்தால் மற்ற படங்கள் எல்லாமே ஹாலிவுட்டில் கமர்சியல் ப்ளாக் பஸ்டர்கள் . இவருடைய வேற்றுகிரகவாசிகளை மையமாக வைத்து எடுத்த படமான SIGNS இந்தியாவிலேயே நன்றாக ஓடியது . பெரும்பாலோனவர்கள் இவரின் முதல் படத்திற்குப்பின் எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் சுமார் தான் என்ற ரீதியில் விமர்சிப்பார்கள் . ஆனால் அதற்குப்பின்னும் நல்ல படங்களைத்தந்தவர் மனோஜ் . எனக்கு இவரின் படங்களிலேயே மிகமிக பிடித்தபடம் என்றால் அது THE VILLAGE தான் . அந்த படம் மிகவும் பொறுமையாக நகரும் . ஏதோ பீரியட் படம்போல இருக்கும் . அப்படத்தின் கிளைமேக்ஸ் ட்விஸ்டைக்காட்டிலும் , அந்த படத்தின் மூலக்கதைக்கரு என்னை மிகவும் பாதித்தது எனலாம் .



இன்று பாக்ஸ் ஆபிஸில் நம்பர்.1 ல் இருக்கும் அவதார் படத்தின் டைட்டிலை ஏற்கனவே வைத்திருந்தவர் இவர்தான் . இவருடைய THE LAST AIRBINDER எனும் திரைப்படத்திற்கு முதலில் அவதார் எனும் டைட்டில்தான் சூட்டப்பட்டிருந்தது . பின் கேமரூனின் வேண்டுகோளுக்கு இசைந்து டைட்டிலை விட்டுக்கொடுத்தார் .இவரின் படங்களில் பிட்டுக்காட்சிகள் என்பது துளிகூட இருக்காது . குடும்பத்துடன் உட்கார்ந்து தாராளமாய் பார்க்கும் வண்ணம்தான் படமெடுப்பார் . குடும்ப உறவுகள் , நடுவே ஒருவித படபடப்புடன் நகரும் திரைக்கதை , கடைசியில் ஒரு அட்டகாசமான ட்விஸ்ட் , இதுதான் இவரின் பார்முலா . கழுத்தில் தாயத்தைக்கட்டிக்கொண்டே ஆஸ்கார் நிகழ்வில் கலந்துகொண்டவர்( SIXTH SENSE ஆஸ்காரில்  மொத்தம் 6 துறைகளுக்கான விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது .) இவருக்கு பத்மஶ்ரீ விருதை இந்திய அரசு வழங்கியபோதுகூட சில சர்ச்சைகள் ஏற்பட்டன . எப்படி இருப்பினும் , இந்தியாவில் இருந்து சென்றாலும் ஒரு இந்தியர் , உலகளவில் முத்திரைப்பதித்துக்கொண்டிருக்கும் ஹாலிவுட்டில் முத்திரை பதிப்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்தான் .


SIXTH SENSE-ன் இமாலய வெற்றிக்குப்பின் ஷியாமளன் மீண்டும் ப்ரூஸ் வில்லிஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் உடன் இணைந்து எடுத்த இரண்டாவது படம்தான் UNBREAKABLE . அப்படியானால் இப்படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்திருக்கவேண்டும் ? ஆனால் அதை முடிந்தவரை பூர்த்தி செய்திருப்பார் . படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஸ்லைடு போடுகிறார்கள் . அதைப்படித்ததும் அப்படியே டென்சனாகிவிடாதீர்கள் . அமெரிக்கர்களுக்கு காமிக்ஸ் ஆர்வம் மிக மிக மிக அதிகம் . நம்மூர் காமிக்ஸ் ஆசிரியர்களெல்லாம் இப்போது கூட ஆங்கிலத்தில் காமிக்ஸ்களை , அமெரிக்காவில் சரியான சப்போர்ட்டுடன் வெளியிட்டால் ஒரே வருடத்தில் மாபெரும் கோடிஸ்வரர் ஆகிவிடலாம் . அந்தளவு காமிக்ஸ் மோகம் . இல்லாமலா பேட்மேன் , சூப்பர்மேன், ஹீமேன், ஹிட்மேன், அவெஞ்சர்ஸ் போன்று சூப்பர்ஹீரோ படங்களை ஆயிரம்கோடி செலவு செய்துஎடுப்பார்கள் (ஆனால் இந்த சூப்பர்ஹீரோ படங்களுக்கு அமெரிக்காவை விட இந்தியா , சீனா போன்ற ஓவர்சீஸ் மார்க்கெட்தான் கைக்கொடுக்கிறது . காரணம் அமெரிக்கர்கள் காமிக்ஸில் ஏற்கனவே பார்த்த விஷயத்தை கிராபிக்ஸோடு பார்ப்பதில் அவ்வளவாக திருப்தியடைய மாட்டார்கள் ). எல்லோரும் காமிக்ஸை வைத்து படமெடுப்பார்கள் , ஆனால் மனோஜ் , காமிக்சையே படமாக்கியிருக்கிறார் .


சரி படத்தின் கதைக்கு வருவோம் (அப்பாடி !) . எலைஜா  (சாமுவேல் ஜாக்சன்)   என்பவன் எலும்பு வளர்ச்சி மரபு குறைபாட்டோடு (ஆஸ்டியோஜெனிசிஸ் இம்பெர்பக்ட்டா) பிறக்கிறான் . எங்காவது கீழே விழுந்தால் நமக்கெல்லாம் கையில் சிராய்ப்பு , காயம் போன்றவை ஏற்படும் . பலமாக மோதினால் எலும்பு உடைந்து புத்தூருக்குப்பறப்போம் . ஆனால் எலைஜாவுக்கு அப்படியில்லை . அவன் தடுக்கிவிழுந்தால் கூட உடலில் பாதி எலும்புகள் நொறுங்கிவிடும் . அவனுக்கு சிறுவயதுமுதலே காமிக்ஸ் மேல் கொள்ளைப்பிரியம் . அதில் வரும் சூப்பர்ஹீரோக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் ,ஆனால் அவர்களின் திறமையை அவர்களே உணராமல் இருக்கிறார்கள் என்பது அவன் கருத்து . இந்நிலையில் டேவிட் என்பவனைப்பற்றி தெரிந்து கொள்ளும் எலைஜா , அவனை சந்திக்கிறான் . டேவிட் ஏற்கனவே ஒரு ரயில் விபத்திலிருந்து தப்பியவன் . அவனிடம் எலைஜா , ‘நீ ஒரு சூப்பர்ஹீரோ’ என்று கூற , அதை மறுக்கிறான்  டேவிட் . சில நாட்களில் டேவிட்டுக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்படுகிறது  . இன்னொருபுறம் கடைசிவரை நீ சூப்பர்ஹீரோ என்று கூறிக்கொண்டே இருக்கும் எலைஜா கூறியதுபோல் டேவிட் ஒரு சூப்பர்ஹீரோ தானா ? என்பதே படத்தின் கதை .

ப்ரூஸ் வில்லிஸ் , வழக்கம்போல ஒரு அமைதியான குடும்பத்தலைவராகவும் எந்நேரம் பார்த்தாலும் குழப்பத்தில் திரிவது என அருமையாக நடித்திருக்கிறார் . ரயிலில் பயணிக்கும்போது அவருடன் ஒரு பெண் அமர்ந்ததும் உடனே தன் கையில் இருக்கும் திருமணமோதிரத்தை கழட்டிவைத்துவிட்டு அவளிடம் கடலைப்போடுவதும் , அவளிடம் பின் பல்பு வாங்கும்போதும் ஒரு அசடு வழிவார் பாருங்கள் , நச்சென்று இருக்கும் . சாமுவேல் ஜாக்சன்  , மனம் முழுதும் தன்னிடம் இருக்கும் பிரச்சனையை நினைத்து ஒரு வெறுமையான பார்வையைக்காட்டும்போதும் சரி , நீ தான் சூப்பர்ஹீரோ என்று ப்ரூஸிடம் சொல்லும்போது அவரின் முழுநம்பிக்கையையும் கண்களின்வழியே கடத்தும்போதும் சரி, மனிதர் சும்மா கிழி கிழி கிழி தான் . ப்ரூஸைக்காட்டிலும் இவரின் நடிப்புத்தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது .  ஒளிப்பதிவாளரும் அருமையாக தன் பியினைச்செய்திருப்பார் . இசை , ஜேம்ஸ் நியுட்டன் ஹோவர்ட் . எப்படி முந்தைய ஷ்யாமளன் படத்தில் தன் பணியினைச்செய்திருப்பாரோ , அதைவிட தன்னுடைய பெஸ்ட்டை இப்படத்தில் கொடுத்திருக்கிறார் .

மொத்தத்தில் , ஒரு அமைதியான , அழகான அதேநேரம் குடும்பத்துடன் ஒரு அட்டகாசமான திரில்லரை பார்க்கவேண்டுமெனில் இத்திரைப்படத்தைத் தாரளமாக பாருங்கள் . கண்டிப்பாய் இப்படம் ஏமாற்றாது .

(பின்குறிப்பு – மனோஜ் ஷ்யாமளன் தன்னுடைய பெயரை NIGHT M.SHYAMALAN என்றுதான் டைட்டிலில் போடுவார் .இவர் இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்காவிலேயே குடியுரமை பெற்று அங்கேயே வாழ்க்கை நடத்துகிறார் . எனினும் பிறப்பால் இவர் இந்தியர். இவரின் முதல்படம் PRAYING WITH ANGER என்பதும் தவறு . அந்த படம் விளையாட்டாய் அவர் எடுத்தது . அதன்பின் வந்த WIDE AWAKE கூட திரையரங்குகளில் முதலில் ரிலிசாகவில்லை . SIXTH SENSE –ன் வெற்றிக்குப்பின் ரிலிசாகி ஓரளவு சுமாராக ஓடியபடம் தான் WIDE AWAKE . அதனால் OFFICIAL ஆக  உலகம் முழுக்க ரிலிசான முதல்படமாக SIXTH SENSE ஷ்யாமளனின் முதல்படமாகக் கூறப்படுகிறது . மேலும் இவரின் ஒவ்வொரு படத்திலும் கௌதம்மேனன் போல ஏதாவது ஒரு குட்டி ரோல் செய்திருப்பார் . இத்திரைப்படத்தில் ஒரு போதைப்பொருள் விற்பவனாக ஒரு காட்சியில் திருட்டுமுழி முழித்தவாறே வருவார். )

தொடர்புடைய இடுகைகள்






Comments

  1. சிறப்பாக அலசி இருக்கிறீர்கள் நண்பரே..... வாழ்த்துகள்
    தாயகம் கருத்துரையில் சில விளக்கம் கேட்டிருக்கிறேன் காணவும் நன்றி
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா ! தாயகம் திரைப்படம் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறேன் . பாருங்கள் அண்ணா !

      Delete
  2. உங்க குறும்படத்தைப் பற்றி நாங்கள் அல்லவா கருத்து சொல்ல வேண்டும் ?உங்கள் தளத்தில் அதை எதிர்பார்க்கிறேன் !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அந்தபடத்தை ட்ராப் செய்துவிட்டோம் அண்ணா ! எடுக்கநினைத்தது ஒன்று , கடைசியில் திரையில் வந்தது வேறு . சீரியசான காட்சிகளுடன் ஒரு அருமையான திரில்லருக்கு திரைக்கதை எழுதி படமாக்கிமுடித்தபின் பார்த்தால் , தமிழ்சினிமாவிலேயே வராத அளவிற்கு ஒரு பயங்கர காமெடி படமாக வந்திருந்தது . அதனால் அதை முழுவதும் அழித்தேவிட்டேன் . அடுத்து ஒரு கமர்ஷயில் குறும்படம் ஒன்று இயக்கலாம் என்றிருக்கிறேன் . காலம் கனிந்தால் என் தளத்தில் காணலாம் .

      ஓட்டிற்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !

      Delete
  3. சிறந்த படத்திற்கான நல்ல விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா !

      Delete
  4. அவதார் படத்தின் டைட்டில் தகவல் உட்பட நல்ல அலசல்... நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இவரப்பத்தி நிறைய விஷயங்கள் இருக்குங்ணா ! பல ரூமர்களுக்கு சொந்தக்காரர் . இவரப்பத்தி டீடெய்லா எழுதுனா யாரும் படிக்கமாட்டங்கனு விட்டுட்டேன் . கருத்துக்கு நன்றி அண்ணா !

      Delete
  5. Is he a Bharat Ratna Awardee ? ????????

    ReplyDelete
    Replies
    1. ஓ! மன்னிச்சிடுங்க ஜீ ! பத்மஶ்ரீ னு எழுதறதுக்கு பதிலா பாரதரத்னானு எழுதிட்டேன் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றிங்க

      Delete
  6. என்ன சொல்ல வாறீங்க மனோஜ் என்று நான் சலிப்புற்ற அந்த தருணத்தில் நீளும் சாமுவேல் எல் ஜாக்கின் கரத்தை குலுக்கும் ப்ரூஸ்....
    அற்புதம் அற்புதம்... வாஆஆஆஆவ்
    நல்ல எழுதீருக்கீங்க..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை